Kallakurichi bootleg liquor case; Two granted conditional bail

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண வழக்கில் முக்கிய குற்றவாளிகளான கண்ணுகுட்டி, தாமோதரன் ஆகியோரின் ஜாமின் மனுக்களை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மற்ற இருவருக்குநிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

Advertisment

கடந்தாண்டு ஜூன் மாதம் 18ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்திய சுமார் 67 பேர் உயிரிழந்தது ஒட்டுமொத்த தமிழகத்தையே பரபரப்புக்குள்ளாக்கியிருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக அரசியல் கட்சிகள் கண்டனங்கள் தெரிவித்த நிலையில் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட பலரை போலீசார் கைது செய்திருந்தனர்.

Advertisment

கள்ளச்சாராய விற்பனை மற்றும் கடத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் படி மொத்தம் 21 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போலீசார் கள்ளச்சாராய வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். இந்த வழக்கு தற்பொழுது சிபிஐ விசாரணையில் இருக்கும் நிலையில் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் தாமோதரன் மற்றும் கண்ணுக்குட்டி, கண்ணுகுட்டியின் மனைவி விஜயா, பரமசிவம் ஆகியோர் தங்களுக்கு ஜாமீன் வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

Kallakurichi bootleg liquor case; Two granted conditional bail

இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற நீதிபதி சுந்தர்மோகன் அமர்வுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'தாமோதரன் மற்றும் கண்ணுக்குட்டி என்கிற கோவிந்தராஜ் ஆகிய இருவருக்கும் ஜாமீன் வழங்கக் கூடாது. கள்ளச்சாராய கடத்தல் மற்றும் விற்பனையில் இருவருக்கும் முக்கிய தொடர்பு இருக்கிறது. இவர்களிடமிருந்து சாராய மாதிரிகள் பறிமுதல் செய்யப்பட்டு, அதனை சோதனை செய்ததில் இவர்கள்தான் சாராயத்தை கடத்தியது மற்றும் விற்பனை செய்தது என்பது உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது. இவர்கள் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகள். ஏற்கனவே இவர்கள் மீது 13 வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. எனவே இவர்களுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது' என வாதிட்டார்.

Advertisment

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'கடந்த எட்டு மாதங்களுக்கு மேலாக இவர்கள் சிறையில் இருப்பதால் இவர்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும்' என வாதிட்டார். இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கண்ணுகுட்டி மற்றும் தாமோதரன் ஆகிய இருவருக்கும் ஜாமீன் வழங்க முடியாது என தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அதேநேரம் பரமசிவம் மற்றும் கண்ணுகுட்டியின் மனைவி விஜயாஆகியோருக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார்.