Skip to main content

கலிங்கப்பட்டியில் வெட்டுக்கிளிகள் முற்றுகை! அச்சத்தில் விவசாயிகள்!

Published on 02/06/2020 | Edited on 02/06/2020


ஆப்ரிக்கா கண்டத்தை ஒரு வழியாக்கிவிட்டு ஏமன், பாகிஸ்தான் வழியாக இந்தியாவின் பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத்திலும் கூட்டம் கூட்டமாக அப்பிய மஞ்சள் நிற வெட்டுக்கிளிப்படைகள் அங்குள்ள விளை நிலங்களை நாசப்படுத்தி வருகின்றன. மத்திய, மாநில அரசுகள் அதனை அழிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. 


ஏனெனில் பல ஆயிரம் ஹெக்டேரின் விளை பொருட்களை ஒரு சில மணி நேரத்தில் அழித்து விடும் தன்மை கொண்ட இவைகள் அந்த பகுதியையே உணவு பஞ்சத்தில் தள்ளி விடுகிற வல்லமை கொண்டவைகள். ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் சுமார் நான்கு கோடி எண்ணிக்கையிலிருக்கும் இந்த வெட்டுக்கிளிகளில், பெண் வெட்டுக்கிளியின் கருப்பை 150 கருமுட்டைகளைக் கொண்டிருக்குமாம். 

இந்த கருமுட்டைகள் அனைத்தும் இரண்டு வாரத்தில் குஞ்சுகளாக மாறி அவைகள் அனைத்தும் ஒரு மாதத்திற்குள் பறக்கும் தன்மை பெற்று தனியாக உணவு உண்ணுகிற பக்குவம் பெற்றுவிடும் என்றால் அதன் இனப்பெருக்கம் கற்பனையையும் தாண்டிய ஒரு சில நூறு கோடி மடங்காகிவிடும் என்று இதன் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றார்கள். வெளிநாட்டு ஊடகங்களிலும்  இது தொடர்பான தகவல்கள் வருகின்றன.

 

 


இதனிடையே தமிழகத்தின் நீலகிரி, கிருஷ்ணகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும் வெட்டுக்கிளிகளின் தொல்லை அதிகரித்ததாக புகார்களும் வருகின்றன. இந்நிலையில் தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகிலுள்ள கலிங்கப்பட்டியிலும் வயல் புறத்திலும் வெட்டுக்கிளிகள் முற்றுகையிட்டுள்ளன. அந்த ஊரில் காளிராஜ், மற்றும் மன்மதன் இருவருக்கும் சொந்தமான சுமார் 10 ஏக்கர் மானாவாரிக்காடு ஊரின் வடபுறத்தில் உள்ளது. 

அவர்கள் இதில் விதைத்த பருத்தி சாகுபடியின் முதல் மகசூலை எடுத்து விட்டனர். அதன்பின் நிலத்தில் காய்ந்த பருத்திச் செடிகள் தற்போது பெய்த கோடை மழையினால் மீண்டும் துளிர் விட்டுள்ளது. இந்நிலையில் விவசாயி காளிராஜ் விளை நிலத்திற்குச் சென்று பார்த்தபோது செடிகளில் ஆயிரக்கணக்கான வெட்டுக்கிளிகள் அப்பியிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.


 

nakkheeran app




இது குறித்து தகவலறிந்த நெல்லை வேளாண் துறை இணை இயக்குனர் கஜேந்திர பாண்டியன், கலெக்டரின் உதவியாளரான அசோக்குமார். வேளாண் துணை இயக்குநர்கள் நல்லமுத்து ராஜா, பாலசுப்பிரமணியம் மற்றும் விவசாய கல்லூரி பேராசியர் என அதிகாரிகள் போன்றவர்கள் கள ஆய்வு மேற்கொண்டனர்.

ஆனால் மறுநாள் அந்த வெட்டுக்கிளிகள் சென்று விட்டதாகச் சொல்லப்படுகிறது. எனவே ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், காளிராஜ் முதல்நாள் பிடித்து வைத்திருந்த வெட்டுக்கிளிகள் மற்றும் தோட்டங்களை ஆய்வு செய்தனர். அவைகள் பச்சை நிறத்திலிருக்கின்றன. ஆய்வு செய்த கிள்ளிகுளம் வேளாண் கல்லூரி பூச்சியியல் உதவிப் பேராசிரியர் இளஞ்செழியன், இப்பகுதியில் காணப்பட்ட வெட்டுக்கிளிகள் வடமாநில நிலங்களை ஆட்டிப் படைக்கும் பாலைவன வெட்டுக்கிளி வகையை சார்ந்ததல்ல. மேலும் இவைகளை கோவை வேளாண் பல்கலைக்கழக பூச்சியில் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டு எந்த வகை வெட்டுக்கிளி என்று கண்டறியப்படும். இதைக்கண்டு விவசாயிகள் அச்சப்படத் தேவையில்லை. இவைகளால் பயிர்களுக்குப் பெரிய பாதிப்பு வர வாய்ப்பு இல்லை என்றார். என்றாலும் வேளாண் பருவத்தில் என்ன நடக்குமோ என்ற அச்சம் பரவியிருக்கிறது விவசாயிகள் மத்தியில்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

“அனைவரும் ஒன்றுபட வேண்டும்” - விவசாயிகளுக்கு ஆதரவாக காலா பட நடிகர்

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
nane patekar about farmers

இந்தி மற்றும் மராத்தியில் பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானவர் நானா படேகர். கடைசியாக தி வேக்ஸின் வார் படத்தில் நடித்திருந்தார். தமிழில் ரஜினியின் காலா படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இப்போது ஜேர்னி (Journey) என்ற தலைப்பில் ஒரு படம் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

திரைப்படங்களில் நடித்துக் கொண்டே மற்றொரு மராத்தி நடிகரான மகரந்த அனஸ்புரேவுடன் இணைந்து ‘நாம்’ என்ற அறக்கட்டளையை நடத்தி வருகிறார். இதன் மூலம் மகாராஷ்டிராவில் உள்ள வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார். இந்த நிலையில், நாசிக்கில் நடைபெற்ற ஷேத்காரி சம்மேளன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், “விவசாயிகள் நல்ல நேரத்துக்காகக் காத்திருக்காமல் விடாமுயற்சியின் மூலம் நல்ல காலங்களைக் கொண்டு வர வேண்டும். 

எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வரும் என்பதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும். தங்கம் விலை உயரும்போது, அரிசி விலை ஏன் உயரவில்லை? விவசாயிகள் முழு தேசத்திற்கும் உணவு வழங்குகிறார்கள். ஆனால் அவர்களின் குறைகளை தீர்க்க அரசுக்கு நேரமில்லை. இதுபோன்ற அரசிடம் விவசாயிகள் எதையும் கோர வேண்டாம். எந்த மாதிரியான இலட்சியத்தை இளம் தலைமுறைக்கு முன் வைக்கிறீர்கள்? நீங்கள் என்ன செய்கிறீர்கள்? நான் வெளிப்படையாக பேசும் நபர் என்பதால் என்னால் அரசியலில் சேர முடியாது. தற்போதைய நிலையை மாற்ற நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும்” என்றார். 

Next Story

போராட்டத்திற்கு தேதி குறித்த விவசாயிகள்!

Published on 03/03/2024 | Edited on 03/03/2024
 Farmers on the date for the struggle 

விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் அறிக்கையை அமல்படுத்துவது என்பன உள்ளிட்ட 12 அம்ச வேளாண் கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர் டிராக்டர்களில் உணவு, மருந்து பொருட்களுடன் ‘டெல்லி சலோ’ என்ற பெயரில் தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்தச் சென்றபோது மாநில எல்லையிலேயே முள்வேலிகள், தடுப்புக்கட்டைகள் அமைத்து தடுக்கப்பட்டனர்.

இந்த தடுப்புக்கட்டைகளைத் தகர்த்தெரிந்த விவசாயிகள் தடைகளை மீறி டெல்லி நோக்கி புறப்பட்டபோது விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசியும் தண்ணீரை பீய்ச்சி அடித்தும் நிலைகுலையச் செய்தனர். மேலும் ரப்பர் குண்டுகளால் சுடப்பட்டனர். கண்ணீர் புகை குண்டுகளால் ஏற்பட்ட நச்சுப் புகையால் மூச்சுத் திணறிய 65 வயது கியான் சிங் என்ற விவசாயியும், ரப்பர் குண்டு பட்டுத் தலையில் காயமடைந்த 21 வயது இளம் விவசாயி ஒருவரும் போராட்டக் களத்திலேயே உயிரிழந்தனர். இதற்கிடையில் விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் சுமூகமான உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை. அதே சமயம் டெல்லி எல்லைகளில் தொடர் போராட்டத்தை தீவிரப்படுத்துவது குறித்து விவசாயிகள் விரிவான ஆலோசனை செய்து வந்தனர்.

இந்நிலையில் மார்ச் 10 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என விவசாயிகள் அறிவித்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் சங்கத் தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால் கூறுகையில், “டெல்லிக்கு பேரணியாக செல்லும் எங்கள் (விவசாயிகள்) திட்டம் அப்படியே உள்ளது. அதிலிருந்து நாங்கள் பின்வாங்கவில்லை. எல்லையில் பலத்தை அதிகரிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. மார்ச் 6 ஆம் தேதி விவசாயிகள் நாடு முழுவதிலும் இருந்து ரயில், பேருந்து, விமானம் மூலம் டெல்லிக்கு செல்ல திட்டமிட்டுள்ளோம். அங்கு போராட்டத்தில் கலந்துகொள்ள அரசு அனுமதிக்குமா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். மார்ச் 10 ஆம் தேதி நாடு முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடத்துவோம். அன்றைய தினம் நன்பகல் 12 மணி முதல் மாலை முதல் 4 மணி வரை ரயில் மறியல் போராட்டம் நடைபெறும்” எனத் தெரிவித்தார்.