''மறக்க முடியுமா கலைஞரை'' என்ற தலைப்பில் மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு புகழஞ்சலி கூட்டம் கோவை இந்துஸ்தான் கல்லூரி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. அந்த விழாவிற்கு தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். கருணாநிதியின் புகழை போற்றும் வகையில், ‘மறக்கமுடியுமா கலைஞரை’என்ற தலைப்பில் நடிகர், நடிகைகள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார்கள். அப்போது அவர் ஆற்றிய தொண்டுகள் அவருடைய ஆளுமைகள் குறித்து நினைவுகூறப்பட்டன.
அந்த நிகழ்ச்சியில் நடிகர் ராஜேஷ் பேசுகையில், 1969 ல் அறிஞர் அண்ணா உயிரிழந்தபோது கட்சி நிலைக்காது என்ற எண்ணத்தை மாற்றியமைத்தார் கலைஞர். எம்.ஜி.ஆர்.,ஜெயலலிதா ஆகியோரின் பல எதிர்ப்புகளையும் கலைஞர் தகர்த்தெழுந்தவர். ஒருவரின் மரண ஊர்வலத்தில்தான் வாழ்க்கைக்கான அர்த்தம் தெரியும் என்பார்கள் அதை நிரூபித்தவர் கலைஞர். கலைஞர் சிறந்த முதல்வராக இருப்பார் என எம்.ஜி.ஆர். நம்பினார். அறிஞர் அண்ணா உயிரிழந்த பிறகு முதல்வர் யார் என்பதற்கு கலைஞர் கருணாநிதிதான் என எம்.ஜி.ஆரும் ஆதரவு அளித்தார். அதேபோல் மாற்று கட்சியினரிடமும் நல்ல பெயரை பெற்றவர் கலைஞர் எனக்கூறினார்.