Advertisment

சிகிச்சையில் கலாய்த்த கலைஞர்! சிலாகித்து நெகிழ்ந்த டாக்டர்கள்!

kalaignar's doctors

I am sorry என்பதுதான் நோயாளியைக் காப்பாற்ற முடியாத டாக்டர்கள் அவரது குடும்பத்தினரிடம் சொல்லுகின்ற வார்த்தை. ஆனால், கலைஞருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களோ, அவரது குடும்பத்தினர்-கட்சி நிர்வாகிகள்-மருத்துவத்துறையினர் முன்னிலையில், “He is a fighter எங்களைவிட அதிகமாகப் போராடியவர் அவர்தான்” என்று கூறி, தங்களிடம் சிகிச்சை பெற்று இறந்த நோயாளிக்காக புகழ் வணக்கம் நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர்.

Advertisment

கலைஞருடன் அணுக்கமாக இருந்த அவரது குடும்ப மருத்துவர் கோபால், கலைஞர் குறித்த ஒரு புத்தகமே எழுதப்போவதாக நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். கலைஞருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் எழிலன் (கலைஞரின் நண்பர் பேராசிரியர் நாகநாதன் மகன்-இளைஞர் இயக்கத்தின் நிறுவனர்) ஏற்கனவே பொது மேடைகளிலும் சமூக வலைத்தளங்களிலும் சிகிச்சை நேரத்தில் கலைஞரிடமிருந்து வெளிப்படும் சுவையான வார்த்தைகளைப் பற்றி பல முறை தெரிவித்துள்ளார். அதுபோலவே, புகழ் வணக்கம் நிகழ்வில், கலைஞருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் பலரும் கலைஞரின் சமயோசித அறிவையும், வார்த்தைகளையும் ரசித்துக் கூறியுள்ளனர்.

Advertisment

காவேரி மருத்துவமனையின் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ்: “கலைஞருக்கு டெஸ்ட்டுக்காக தொடை பகுதியிலிருந்து ரத்தம் எடுக்க வேண்டியிருந்தது. அதனால டாக்டர்கள் வேல்முருகன், முரளி மகேஷ்னு இரண்டு பேரை காவேரி மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு அனுப்புறோம். ரத்தம் எடுக்குறப்ப கொஞ்சம் சிரமமாவும் வலியாவும் இருக்கும்னு கலைஞர்கிட்டே சொன்னேன். உடனே அவர், காவேரின்னாலே வலியும் வேதனையும் இருக்கத்தான் செய்யும்னு சொன்னாரு.”

டாக்டர் மோகன் காமேஸ்வரன், “தூதுவளை இலையை கொஞ்சம் அதிகமா சாப்பிட்டதால அவருக்குத் தொண்டையிலே புண் வந்திடிச்சி. அது பற்றி விசாரிச்சேன். அதற்கு அவர், நாலு இலைதான் சாப்பிட்டேன். இந்தப் பாடு படுத்துது. இரண்டு இலையே படாதபாடு படுத்தும்போது, நாலு இலை படுத்தாதான்னு கேட்டாரு.

கதிரியல் நிபுணர் டாக்டர் இமானுவேல்: ஸ்கேன் எடுக்கும்போது அவர்கிட்ட நான், மூச்சை இழுத்துப் பிடிச்சிக்கணும். நாங்க சொல்லும்போது மூச்சை விட்டுடுங்க என்றேன். அதற்கு கலைஞர், மூச்சை விட்டுடக்கூடாதுன்னுதான் நான் டாக்டர்கள்கிட்ட வந்திருக்கேன். நீங்க மூச்சை விடச் சொல்றீங்களே என்றார். பேஷண்ட்கிட்ட வேற வார்த்தையில இதைச் சொல்லுங்கன்னாரு. இன்னைக்கு வரைக்கும் வேற வார்த்தை எனக்கு கிடைக்கலை.

பல் மற்றும் முகசீரமைப்பு டாக்டர் பாலாஜி: பல் சீரமைக்கும்போது வாயில ஒரு இன்ஜெக் ஷன் போடுவோம். அப்ப வலி தெரியாம இருக்கணும்ங்கிறதுக்காக, அய்யா.. நாக்கை கொஞ்சம் லூசா விடுங்கன்னு சொன்னேன். அதுக்கு கலைஞர், நாக்கை லூசா விட்டா, என்னை லூசுன்னு சொல்லிடுவாங்கய்யான்னாரு.

இப்படி கலைஞரின் மருத்துவர்கள் ஒவ்வொருவரும் தங்களின் அனுபவங்களை நேற்று புகழ் வணக்க நிகழ்ச்சியினை நடத்தி தெரிவித்தார்கள். ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் நாளை விசாரணை கமிஷனில் ஆஜராக வேண்டும் என மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Doctors kalaignar
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe