கலைஞர் மறைவுக்கு சேலத்தில் பல்வேறு அமைப்பினர் அஞ்சலி!

m1

திமுக தலைவர் கலைஞர் மறைவுக்கு சேலத்தில் அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் இன்று அஞ்சலி செலுத்தினர்.

திமுக தலைவரும் இந்திய அரசியலின் முதுபெரும் தலைவருமான கலைஞர் (94), ஆகஸ்ட் 7ம் தேதி மாலை 6.10 மணிக்கு மறைந்தார். தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் இருந்து ஏராளமான தொண்டர்கள் நேரில் வந்து அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர்.

m

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே வைக்கப்பட்ட கலைஞரின் உருவப்படத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சேலம் மாவட்ட செயலாளர் ஜெயசந்திரன் தலைமையில் அக்கட்சியினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அப்போது அவர்கள், மக்கள் கலைஞர், சமத்துவ பெரியார், சமத்துவ தந்தை, முத்தமிழ் அறிஞர், செம்மொழி புலவரே, தமிழினத்தலைவரே எனக்கூறி கலைஞருக்கு வீரவணக்கம் செலுத்தினர்.

m2

அதேபோல், திமுகவினர் கலைஞர் உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர். முன்னதாக அயோத்தியாப்பட்டணம் நகர செயலாளர் சரவணன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கருப்பு சட்டை அணிந்தும், சட்டைப்பையில் கருப்பு பட்டை அணிந்து கொண்டும் ஊர்வலமாக சென்றனர்.

அனைத்து மருத்துவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட செயலாளர் இளவரசன் தலைமையில் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் சட்டைப்பையில் கருப்பு பட்டை அணிந்து வந்து கலைஞரின் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

மூத்த பத்திரிகையாளரான கலைஞருக்கு, சேலம் பத்திரிகையாளர்கள் சார்பிலும் கலெக்டர் அலுவலக வாயில் முன்பு வைக்கப்பட்ட உருவப்படத்திற்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

Salem
இதையும் படியுங்கள்
Subscribe