Skip to main content

“காலை சிற்றுண்டி திட்டத்திற்கு கலைஞர் பெயரை வைக்க வேண்டும்” - ஆசிரியர் சங்கம் கோரிக்கை! 

Published on 07/05/2022 | Edited on 07/05/2022

 

"Kalaignar name should be included in the breakfast program" - Teachers Association request!

 

தமிழ்நாடு அரசின் பொறுப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை ஏற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு இன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் ஐந்து அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் ஒன்றாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை நேர சிற்றுண்டி திட்டம். இதற்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். 

 

இந்நிலையில் தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.கே.இளமாறன் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பேற்று அனைத்துத் தரப்பினரின் எதிர்பார்ப்புகளையும் நிறைவு செய்து இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு முன்மாதிரி மாநிலமாக மாற்றிவரும் முதலமைச்சருக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் வாழ்த்திப்பாராட்டுகிறேன்.


ஓராண்டு நிறைவையொட்டி ஐம்பெரும் அறிவிப்புகள். குறிப்பாக தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து வலியுறுத்தி வரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலைச் சிற்றுண்டி வழங்கப்படும் அறிவிப்பு மட்டற்ற மகிழ்ச்சியளிக்கிறது. பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய குடும்பங்களிலிருந்துதான் குழந்தைகளில் அரசுப் பள்ளிகளில் படிக்கிறார்கள். பெரும்பாலான மாணவர்கள் காலை உணவு சாப்பிடாமல் வருவதால் ஒருவிதமாக சோர்வாகவே காணப்படுவார்கள்.


இதனால் கல்வியில் கவனம் செலுத்தமுடியாது. உடலும் உள்ளமும் ஒருசேர அமைந்தால்தான் கற்றலும் கற்பித்தலும் சிறப்பாக நடக்கும். இதனையறிந்து தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தும் அதற்கு முன்மாதிரியாக நான் பணிபுரியும் பள்ளியில் 2018 முதல் 2020 மார்ச் மாதம் வரை (கொரொனாவிற்கு முன்பு) காலைச் சிற்றுண்டி வழங்கினேன் என்பது குறிப்பிடத்தக்கது.


மாநிலம் முழுதும் படிக்கும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு காலைச்சிற்றுண்டி வழங்கவேண்டும். உடலும் உள்ளமும் ஒருசேர இருந்தால்தான் கற்றல்-கற்பித்தலில் கவனம் செலுத்தமுடியும் என்பதை அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தியதன் பேரில் ஆட்சிக்கு வந்த ஓராண்டு நிறைவில் வரலாற்றுச் சிறப்பிக்க அறிவிப்பை வெளியிட்டு ஒட்டுமொத்த பெற்றோர்களின் வயிற்றிலும் பாலை வார்த்திருக்கிறார் முதல்வர்.


இதன் மூலம் கல்வித்திறன் வளர்வதோடு மாணவர் சேர்க்கையும் அதிகரிக்கும் என்பதில் மிகையில்லை. மேலும் குழந்தைகளின் ஊட்டச்சத்தையும் போக்கும் திட்டம், மேல்நிலைப்பள்ளிகள் அனைத்து வசதிகளையும் கொண்ட தகைசால் பள்ளிகள் அறிவிப்பு மேலும் ஒரு மைல்கல். மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க 5 அறிவிப்புகளை அறிவித்த மாண்புமிகு முதலமைச்சருக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன். 


கல்வியினை  தரம் உயர்த்தும் வகையில் முதற்கட்டமாகத் தொடக்கப் பள்ளிகளை மாதிரிப் பள்ளிகளாகவும் மாற்றுவதற்கு பரிசீலனை செய்தும், காலைச் சிற்றுண்டித் திட்டம் படிப்படியாக உயர்நிலைப்பள்ளி வரை உயர்த்திடவும் காலைச் சிற்றுண்டி திட்டத்திற்கு ‘டாக்டர். கலைஞர் காலைச் சிற்றுண்டி திட்டம்’ என்று பெயர் சூட்டிட   தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தடையின்றி குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும்” - தமிழக முதல்வர் உத்தரவு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Tamil Nadu Chief Minister's ordered Drinking water should be distributed without interruption

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. குறிப்பாக மதுரை, ஈரோடு போன்ற பகுதிகளில் வெப்ப அலை வீசி, மக்களைப் பாதிப்படைய செய்கிறது.

வெப்ப நிலை அதிகமாக இருக்கும் இந்த நிலையில் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தை எதிர்கொள்ளும் வகையில் அரசு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில், அதிகரிக்கும் வெப்பத்தை எதிர்கொள்ள சிறப்பு நடவடிக்ககளை மேற்கொள்ள நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, நீர்வளத்துறை அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (27-04-24) ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் பேசியதாவது, “கோடைகாலம் அதிக வெப்பம், அதிக குடிநீர் தேவை என்ற இரு நெருக்கடிகளை ஏற்படுத்தும். மேற்கு மாவட்டங்களில் மழை குறைவால் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறையை அதிகாரிகள் விளக்கினர். அணைகளின் நீரை சிக்கனமாக பயன்படுத்தி 2 மாதங்களுக்கு குடிநீர் தேவையை நிறைவு செய்ய வேண்டியுள்ளது. அணைகளில் தற்போது இருப்பில் உள்ள நீரை சிக்கனமாக பயன்படுத்தி சமாளிக்க வேண்டிய சூழல் உள்ளது. கோடை காலத்தில் தண்ணீரின் தேவை அதிகம் தேவை என்பதால் அனைத்து துறையினரும் இணைந்து செயல்பட்டு மக்கள் பாதிக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

குடிநீர் பற்றாக்குறை உள்ள 22 மாவட்டங்களுக்கு மாநில பேரிடர் நிதியில் இருந்து ஏற்கெனவே ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிதியை மாவட்டங்கள் பகிர்ந்து குடிநீர் வழங்கல் பணிகளை மேற்கொள்ள வேண்டும். கூட்டு குடிநீர் திட்டங்கள், நீரேற்று நிலையங்கள் செயல்பட தடையற்ற மின்சாரம் அவசியம் வழங்க வேண்டும். திட்டப்பணிகளுக்கு தடையற்ற மின்சாரம் கிடைப்பதை மின்வாரியத் தலைவர் உறுதி செய்ய வேண்டும். தேர்தல் விதிகள் அமலில் உள்ள நிலையில் குடிநீர் விநியோகம் போன்ற முக்கிய பணிகளில் சுணக்கமின்றி கண்காணிக்க வேண்டும். கிராமப்புறங்களில் வறண்ட ஆழ்துளை கிணறுகளுக்கு பதிலாக வேறு குடிநீர் ஆதாரங்களில் இருந்து தண்ணீர் வழங்க வேண்டும். ” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

“சர்.பிட்டி தியாகராயர் காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி” - தமிழக முதல்வர் புகழாரம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Chief Minister of Tamil Nadu felicitated for Pioneer of Sir Pitti Thiagarayar Breakfast Scheme

திராவிடக் கட்சியின் தாய் அமைப்பான நீதிக்கட்சியின் தலைவராக பொறுப்பு வகித்து வந்தவர் சர்.பிட்டி தியாகராயர். இந்திய சுதந்திரத்துக்கு பிறகு, முன்னாள் முதல்வர் காமராஜர் மதிய உணவுத் திட்டத்தை தொடங்குவதற்கு முன்பே, அந்த திட்டத்தை சென்னை மாநகராட்சி பள்ளிகளில், சர்.பிட்டி தியாகராயர் தொடங்கி வைத்து முன்மாதிரியாக திகழ்ந்துள்ளார். இவரது நினைவாக தான் சென்னை தியாகராயர் நகர் (தி.நகர்) பகுதிக்கு இவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது. இன்று (27-04-24) சர்.பிட்டி தியாகராயரின் 173ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. 

சர்.பிட்டி தியாகராயரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘பார்ப்பனரல்லதார் கொள்கைப் பிரகடனம் வெளியிட்டு திராவிட இனத்தின் உரிமைக்குரலை ஓங்கி ஒலித்த தீரர்! அப்பழுக்கற்ற அரசியல் வாழ்வினால் சென்னையின் கல்வி, மருத்துவ வளர்ச்சிக்குத் தூணாக விளங்கிய மக்கள் தொண்டர்!

காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி!. தேடி வந்த பதவியை மறுத்த மாண்பாளர், நம் வெள்ளுடை வேந்தர் தியாகராயரின் பிறந்தநாளில் அவரது வாழ்வையும் பணியையும் போற்றி வணங்குகிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.