Skip to main content

கலைஞரும் அவனும்...

Published on 12/09/2018 | Edited on 12/09/2018
kalaignar

 


ஆகஸ்ட் 7 மதியம் 3 மணிக்கு காவிரி மருத்துவமனை முன் நின்று கொண்டிருந்த ஜென் Z இளைஞன் அவன். இன்னும் சரியாக சொல்ல போனால் கலைஞர் நான்காம் முறை முதல்வரான பதினைந்தாவது நாளில் பிறந்தவன். அங்கிருந்த சூழலே அவனுக்கு உணர்த்தியது இன்று இரவுக்குள் வரும் தகவல் அவனுக்கு மகிழ்ச்சியை தராது என்று.
 

அங்கு அவன் தன் தோழமைகளுடன் பேசிக்கொண்டு இருத்தாலும் அவன் மனம் அவனை அவனது குழந்தை பருவத்திற்கு இழுத்துக்கொண்டு இருந்தது. 

அவனுக்கு சட்டென்று நினைவுக்கு வந்தது அவனது மூன்று வயதில் அதுவரை அவனுடனே இருந்த தாய் திடீரென காலை கிளம்பி சென்று மாலை திரும்பி வர தொடங்கினார். 
 

ஏன் இப்படி நடக்கிறது என்று அவனுக்கு புரியவே இல்லை. புரிந்துக்கொள்ள கூடிய வயதும் இல்லை. ஆனால் ஏன் அம்மா இப்படி போகிறாள் என்ற கேள்வி அவனுக்குள் எழுந்தது. அதை அம்மாவிடமே கேட்டுவிட்டான். அப்போது வீட்டில் இருந்த BPL தொலைக்காட்சியில் மஞ்சள் துண்டும் கருப்பு கண்ணாடியும் அணிந்திருந்த குள்ளமான ஒரு உருவத்தை காட்டி இவர்தான் எனக்கு வேலை தந்தார் என்றார். 
 

அந்த மூன்று வயது குழந்தைக்கு அவர் மீது கோபமே வந்தது. அதுவரை கூடவே இருந்த அம்மாவை சில மணி நேரங்கள் தன்னிடம் இருந்து பிரித்து விட்டதால், இப்படியாகவே அவனுக்கு கலைஞர் அறிமுகப்படுத்தப்பட்டார். ஆனால் தாய் கலைஞரை புகழ்ந்து பேச பேச அவர் என்ன சொல்கிறார் என்று புரியாமலேயே தன் தாய்க்கு கலைஞரை பிடிக்கும் என்பதால் அவனுக்கும் கலைஞரை பிடித்து போனது.
 

கலைஞரால் மூன்று வயதிற்கு சென்றிருந்த அவன் அங்கு எழுந்த வாழ்க வாழ்கவே டாக்டர் கலைஞர் வாழ்கவே என்ற கோஷத்தால் மீண்டும் கோஷமிட தொடங்கினான். இருந்தும் அவனுக்குள் தாய்ப்பால் போல ஊட்டப்பட்ட கலைஞர் என்ற மனிதன் அவனை மீண்டும் அவரின் நினைவுகளில் ஆழ்த்தினார்.
 

அவனின் ஐந்து வயது கலைஞர் தோற்றுவிட்டார் என்று அவன் அப்பா சொல்ல, அதை அவன் மனம் ஏற்கவே இல்லை ஏனெனில் அவனை பொறுத்தவரை கலைஞர் நல்லவர் நல்லதை மட்டுமே செய்யக்கூடியவர், இதை எல்லாம் தான்டி அவன் அம்மாவிற்கு அவர் வேலை தந்தவர். அப்படடிப்பட்ட மனிதனை தோற்கடித்த இந்த தமிழ் சமூகத்தின் மீது அவனுக்கு தீராத கோபம் வந்தது. 
 

அந்த ஐந்து சிறுவனால் கோபப்படுவதை தான்டி என்ன செய்துவிட முடியும். அந்த கோபம் தீரும் முன்னே அவன் பீறிட்டு அழும் படியாக அவரை நள்ளிரவில் தர தரவென்று இழுத்து கைது செய்த ஜெயலலிதா மீது அவனுக்கு வன்மம் வந்தது. அவர் கைது செய்யப்பட்ட அந்த காலை விடியல் இன்றும் நன்றாக நினைவிருக்கிறது. தொலைக்காட்சியில் அந்த காட்சிகள் மீண்டும் மீண்டும் ஒளிப்பரப்பு செய்யப்பட்டன. அந்த காட்சிகளை நினைத்து அவனே அறியாமல் விட்ட கண்ணீர் அவனை சுயத்தை நோக்கி அழைத்து வந்தது. 
 

காவிரி மருத்துவமனை முன் கூட்டம் அதிகரித்துக்கொண்டே இருந்தது. உடனிருந்த நண்பரிடம் தகவல் எதிர்மறையாக வந்தாலும் நான் அழ போவதில்லை, இந்த பத்து நாட்களில் நிறைய அழுதுவிட்டேன் என்று சொல்லியபடியே அவனது பத்து வயதிற்கு அவன் நினைவுகளோடு சென்றான்.
 

ஆம் அவன் முதலும் கடைசியுமாக கேட்ட மு.கருணாநிதி என்னும் நான் அந்த ஆண்டில் தான் நிகழ்ந்தது. 2006 தேர்தலில் திமு கழக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியில் அமைந்திருந்தது. மேடையிலேயே ஒரு கிலோ அரிசி இரண்டு ரூபாய், 7000 கோடி ரூபாய் விவசாய கடன்கள் தள்ளுபடி என்ற திட்டங்களில் கையெழுத்திட்டார். ஏன் அப்படி செய்தார் என்று தெரியாமலேயே அவன் துள்ளினான். 
 

அந்த ஆட்சி காலத்தில் தான் அவர் சமச்சீர் கல்வியை கொண்டு வந்தார். அவன் பத்தாம் வகுப்பு போகும்போது சமச்சீர் கல்வியை கொண்டுதான் தேர்வு எழுத போகிறான் என்ற சந்தோஷப்ட்டான். ஆனால் அதற்குள் ஆட்சி மாற காட்சிகள் மாற தொடங்கின உச்சநீதிமன்றம் வரை சென்று அவரின் திட்டம் காப்பாற்ற பெற்றது. சமச்சீர் கல்வி பயின்று வந்த முதல் செட் என்ற பெருமை அவனுக்கு இப்போதும் உண்டு.
 

 அந்த பெருமையோடு அவனிருக்க மணி ஐந்தை கடந்தது, காவிரி மருத்துவமனை முன்பு கூட்டம் பத்தாயிரத்தை தாண்டியது. அனைவருது கண்களிலும் ஏக்கம் நம் தலைவன் இந்த போராட்டத்திலும் வென்று வர மாட்டாரா என்று? இந்த ஏக்கத்தோடு அவன் தன் தலைவனின் வெற்றிக்காக ஏங்கிய 20 வயது நினைவுகளில் ஆழ்ந்தான்.
 

அவன் வாக்களிக்க போகும் முதல் தேர்தல் உதயசூரியன் சின்னத்திற்கு தான் தன் முதல் ஒட்டு என்று ஐந்து வயதிலேயே முடிவு செய்து வைத்திருந்தான். அவனிருக்கும் ஊருக்கு அவர் வேனில் பிரச்சாரம் செய்யுள்ளார் என்ற செய்தி அறிந்து எப்படியெனும் அவரை அருகில் சென்று பார்த்திட ஆசைப்பட்டான். அவருக்கு ஊரின் வாயிலில் வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததை அறிந்த அங்கு சென்றான், பத்து மணிக்கு அவர் வருவதாக இருந்தது, இதோ கிளம்பிவிட்டார் இங்கு வந்துவிட்டார், அங்கு வந்துவிட்டார் என அருகிலிருக்கோர் சொல்ல சொல்ல அவன் பரபரத்தான்.

 

pacha


இந்த கூட்டத்தில் வேன் அருகே செல்லவதே கடினம் என்ற மூளை சொல்லியது. இல்லை இன்று எப்படியும் அவரை அருகில் பார்த்துவிடுவாய் என்று மனம் நம்பிக்கை தந்தது. கூட்டத்திலிருந்து 200 மீட்டர் முன் சென்று தனியாக நின்றுக்கொண்டான். அவரை வரவேற்க கழக தோழர்கள் வெடி வைக்க அதற்காக நிறுத்தப்பட்ட அவர் வண்டி தன்னந்தனியாக நின்றிருந்த அவனை நோக்கி அவன் தலைவன் கையசைத்தார். அவன் மட்டுமே அங்கு நின்றிருந்தான் அவனுக்கு மட்டுமே அவர் கையசைத்தார் என்பதை எண்ணி பல நாட்கள் அவன் தூக்கம் தொலைத்திருந்தான்.
 

ஆனால் அந்த தேர்தலிலும் வெற்றிக்கு பக்கத்தில் வந்து திமு கழகம் ஆட்சியை இழந்திருந்து மனமுடைந்து போனான். சில மாதங்களிலேயே அவர் உடல் நலம் குன்றியது. அவருடன் ஒரு புகைப்படம் எடுத்து அதை தன் வீட்டில் மாட்ட வேண்டும் என்ற பேராசை எப்போதும் அவனுக்கு இருந்தது. இந்த செய்தி அவனுக்கு தன் ஆசை சாத்தியப்படுமா என்ற ஐயத்தை தந்தது. எப்படியேனும் எடுத்துவிட வேண்டும் என எண்ணியிருந்தான்.
 

மணி ஆறரை கடந்திருந்தது அறிவித்துவிட்டார்கள் என்று கூட்டத்தில் ஒருவர் சொல்ல பீறிட்டு அழுதான். அவன் வாழ்க்கையில் தந்தை மறைந்த பின் எந்த குறையுமின்றி வாழ அவன் தாய் அடிக்கடி சொன்னது ‘இந்த வேலை கலைஞர் தந்தது’ என்று சொன்னதுதான். அதுதான் அவனுக்கு கிடைத்த வேலையை விட்டு அவனை உயர்கல்வி படிக்க வாய்ப்பு தந்தது. அவனை ஒரு மானமுள்ள சுயமரியாதைக்காரனாக வாழ வழி செய்தது. இந்த வாழ்க்கையே அவரிட்ட பிச்சை என்று அழுதான் தன் பாதுகாப்பை இழந்தவிட்டதாக எண்ணி அழுதான். தன் தந்தை மறைந்த அன்று இருந்த அதே நிலைக்கு சென்றான். அவன் மட்டுமல்ல தமிழகமே தந்தையை இழந்தாக தான் உணர்ந்தது. ஆம் தமிழகத்தின் தந்தை கலைஞர் மு.கருணாநிதி…
 


எஸ்.ஜே.பச்சமுத்து,
முதுகலை அரசியல் மாணவர்,
சென்னைப் பல்கலைக் கழகம்.

சார்ந்த செய்திகள்

Next Story

“கலைஞர் உதவி பண்ணலைன்னா, அந்தப் படம் பிணவறைக்கு தான் போயிருக்கும்” - வடிவேலு

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
vadivelu about kalaignar

சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் எதிரில் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான கலைஞர் நினைவிடம் மற்றும் டிஜிட்டல் அருங்காட்சியகம் கடந்த 26ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறக்கப்பட்டது. பொதுமக்கள் பார்வைக்கு வரும் 6ஆம் தேதி முதல் இலவசமாக அனுமதிக்கப்படவுள்ளது. இந்த நிலையில் வடிவேலு கலைஞர் நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செய்தார். பின்பு திமுக சார்பில் நடத்தப்பட்ட நலத்திட்ட விழாவில் கலந்து கொண்டு பேசிய வடிவேலு, “கலைஞர் நினைவிடத்தை பார்த்தேன். அது சமாதி இல்லை. சன்னதி. தி.மு.க தொண்டன் ஒவ்வொருத்தருக்கும் அது குல தெய்வக் கோயில். மணிமகுடம் கலந்த மணிமண்டபம். எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன் நான். ஆனால், கலைஞருடைய தீவிர பக்தன். தீவிர விஸ்வாசி. 

கலைஞருடன் இருக்கும் போது, எம்.ஜி.ஆரை வெளியில் இருந்து தான் பார்த்திருக்கேன். இருவரும் நண்பர்கள் தான்.  ஆனால் கலைஞரின் கதை வசனத்தில் நடிச்சிருக்கேன். இவர் கூட பேசியிருக்கேன், பழகியிருக்கேன். நிறைய விஷயங்களில் அவர் எனக்கு தைரியம் சொல்வார். கலையுலகத்தை அவர் எந்தளவிற்கு நேசிச்சார் என எல்லா மக்களுக்கு தெரியும்.  

ஒரு முறை 23ஆம் புலிகேசி படத்தை ரிலீஸ் பண்ணமுடியல. அவருக்கு ஃபோன் போட்டு சொன்னே. என்ன பிரச்சனைன்னு கேட்டார். ராஜா குதிரைக்கு மேல் போகக்கூடாதாம், ப்ளு கிராஸ்லாம் பஞ்சாயத்தாம் என்றேன். அதற்கு அவர் ராஜா குதிரையில போகாம குவாலிஸ்-லையா போவார். அப்புறம் ஆ.ராசாவிடம் சொல்லி பார்க்க சொன்னார். அதே போல உன் எம்.ஜி.ஆர் நடிச்ச காஞ்சி தலைவன் படத்துல ஒரு பஞ்சாயத்து நடந்துச்சு,  அப்ப அத சரி பண்ண முடியல. அதுக்கப்புறம் இந்த மேட்டர் என்றார். கண்டிப்பா இந்த படம் ரிலீஸாகிடும் என்று தைரியம் கொடுத்தார். அப்புறம் ரிலீஸ் பண்ண வைச்சதும் கலைஞர் தான். அவர் பண்ணலைன்னா நேரா பிணவறைக்கு தான் போயிருக்கும். அதுக்கப்புறம் தான் படம் ரிலீஸாகி வெற்றி பெற்றுச்சு. அதுமட்டுமல்ல, கலைஞர் டிவி ஆரம்பித்த பிறகு, அந்தப் படத்தை அதில் வெளியிடச்செய்தார். 

திராவிடம்-னா என்னான்னு கேட்கிறவங்க எல்லாம் ஒரே ஒரு முறை மணிமண்டபத்தை சுத்தி பாக்கணும். உள்ள அவ்ளோ அழகா இருக்கு. அதை பார்க்க இரண்டு கண்ணு பத்தாது. ஆயிரம் கண்ணு தேவைப்படும். வரலாற்றில் இப்படி ஒரு மணிமண்டபத்தை கட்ட யாராலையும் முடியாது. யாருக்கும் அந்த வரலாறு கிடையாது” என்றார். மேலும், “சகோதரர் அமைச்சர் உதயநிதி. அவர் விளையாட்டா இருந்தாலும் அலர்ட்டா இருக்கணும். ரொம்ப பயங்கரமான ஆளு. அவர்கிட்ட பேசி தப்பிக்க முடியாது. பெரிய தைரியசாலி” என்றார். 

Next Story

கலைஞர் சிலை திறப்பு விழா; அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அழைப்பு

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
Minister Anbil Mahesh invites kalaignar Statue Unveiling Ceremony in trichy

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் மணப்பாறையில் இன்று (01-03-24) முன்னாள் முதல்வர் கலைஞரின் உருவச்சிலை திறப்பு விழா நடக்கிறது. இந்த விழாவில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கலந்துகொண்டு, கலைஞரின் உருவச்சிலையை  திறந்து வைக்கிறார்.

இதுகுறித்து திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ‘தி.மு.க தலைவரின் அறிவுறுத்தலின்படி, கலைஞர் நூற்றாண்டு விழா மிக சிறப்பாக திருச்சி தெற்கு மாவட்டத்தில் வருடம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. 

இதன் அடிப்படையில் இதுவரை 90 நிகழ்ச்சிகள் முடிக்கப்பட்டு தற்போது 91-வது நிகழ்ச்சியானது, கலைஞர் நூற்றாண்டு விழாவில் மற்றொரு நிகழ்வாக சட்டமன்ற தொகுதிக்கு ஒரு சிலை என்ற அடிப்படையில் திருச்சி தெற்கு மாவட்டத்தில் மணப்பாறை தொகுதியில் இன்று (01-03-24) மாலை 3.30 மணிக்கு மணப்பாறை மாட்டுச்சந்தை அருகில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர் கலைஞரின் திருவுருவச் சிலையைத் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி திறந்து வைக்க உள்ளார். இந்த விழா கழக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என். நேரு முன்னிலையிலும், எனது தலைமையிலும் நடைபெற உள்ளது.

இந்த நிகழ்வில் மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, வார்டு, கிளைக் கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், மாநகராட்சி, ஒன்றிய நகர, பேரூர் கழக சேர்மன்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கழகத் தொண்டர்களும் பொதுமக்களும் திரளாகக் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.