Skip to main content

கஜா புயல் - அரசு உருப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் : சிபிஐ(எம்) வலியுறுத்தல்

Published on 14/11/2018 | Edited on 14/11/2018
cpim



இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் இரண்டு நாள் மாநிலக்குழு கூட்டம்  நேற்றும் இன்றும் (2018 நவம்பர் 13,14) மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் தலைமையில்  நடைபெற்றறது.

இக்கூட்டத்தில் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி,  அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே. வரதராசன், டி.கே. ரங்கராஜன், உ. வாசுகி, அ. சவுந்தரராசன், பி. சம்பத் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 
 

இக்கூட்டத்தில், கஜா புயல் தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு வரும் தகவல்கள் மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.  குறிப்பாக தொடர்ந்து அடிக்கடி புயல் வெள்ள பாதிப்புக்குள்ளாகி வரும் கடலூர் முதல் ராமேஸ்வரம் வரை இந்த முறையும் பாதிப்புக்குள்ளாகும் என வானிமை மையம் அறிவித்துள்ளது. இப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அமைச்சர்கள் “அரசு தயார் நிலையில் உள்ளதாக”  அறிவிப்புகள் செய்து வருகின்றனர். 
 

ஆனால், கடந்த காலத்தில் ஏற்பட்ட புயல் மற்றும் பெருவெள்ளம ஏற்பட்டபோது மக்கள் தங்கள் உறவுகளையும், உடைமைகளையும் இழந்து பெரும் இழப்புக்கு ஆளாகியுள்ளனர் என்பதிலிருந்து அமைச்சர்களின் அறிவிப்பு மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை. நானோ புயல், ஒக்கி புயல், வர்தா புயல், 2015ல் ஏற்பட்டபெருவெள்ள பாதிப்பு ஆகியவை மக்கள் மனதில் இந்த அரசின் மீது மிகப்பெரிய அவநம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என்பதை சுட்டிக்காட்டுகிறோம். 
 

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்பு புயல் வெள்ள சேதங்களை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாவட்ட, வட்ட அளவில் அனைத்துக்கட்சி மற்றும் மக்கள் பிரதிநிதிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டம் நடத்துவது வழக்கமாக இருந்தது. ஆனால் தற்போது இந்த நடவடிக்கை கைவிடப்பட்டு விட்டது. இது வெறும் அதிகாரிகளை கொண்ட நிர்வாக ஏற்பாடாக மட்டும் நடைபெறுவதால் நிவாரண நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்படுகிறது.  
 

புயலும், கடும் மழையும் சேர்ந்து வரும் என்ற நிலையில் அதனால் எற்படும்  பாதிப்புகளிலிருந்து மக்களை பாதுகாக்க உருப்படியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு தமிழக அரசை கோருகிறது.
 

புயல் நிவாரண பணிகளை மேற்கொள்ள பேரிடர் மீட்பு குழுவினர் கடலூர் முதல் பாம்பன் வரை உள்ள அனைத்து பகுதிக்கும் உடனடியாக அனுப்பி வைத்திட வேண்டும். ஏற்படும் மின்துண்டிப்பினை உடனடியாக சரி செய்திட, தேவையான மின்மாற்றி, மின்கம்பங்களை அமைத்திட தமிழகத்தின் இதர மாவட்டங்களிலிருந்து தேவையான உபகரணங்களோடு மின் ஊழியர்களை  இப்பகுதிக்கு அனுப்பிட வேண்டும். அதிக மழை பெய்யும்போது- நீர்நிலைகள் உடையும் ஆபத்து ஏற்படாமலும் அல்லது திடீரென்று அதிக நீரை திறந்து விட்டு வெள்ள சேதம் ஏற்படாமலும் உரிய கண்காணிப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் .  புயலால் சாய்ந்து விடும் மரங்களை அப்புறப்படுத்தவும், வெள்ளத்தால் ஏற்படும் உடைப்புகளை சரி செய்யவும், ஆபத்தான பகுதியில் உள்ள மக்களை மீட்பதற்கும், மாநிலத்தின் இதர பகுதியிலிருந்து  தீயணைப்பு - பேரிடர் மீட்பு குழுவினரை இப்பகுதிக்கு அனுப்பிட வேண்டும். 
 

அடிக்கடி வெள்ள பாதிப்பு ஏற்படும் பகுதிகளை அடையாளம் கண்டு அங்கெல்லாம் மக்களை தங்க வைப்பதற்கான சிறப்பு முகாம்களை ஏற்பாடு செய்திடல், தங்க வைக்கப்படும் மக்களுக்கு மருத்துவம், சுத்தமான குடிநீர், உணவு ஏற்பாடுகள் செய்திட வேண்டும். பாதிக்கப்படும் அனைத்து மக்களுக்கும் உணவு வழங்கிட இப்பகுதியில் பொது மையங்களை ஏற்பாடு செய்து உணவு தயாரித்திட வேண்டும்.
 

தண்ணீர் தேங்கும் தாழ்வான பகுதிகள் கண்டறியப்பட்டு மக்களை மீட்கவும், தண்ணீர் வடியவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கால்நடைகளை பாதுகாப்பாக வைக்க தனி முகாம்கள் ஏற்படுத்த வேண்டும். மீட்பு  பணிகள் 24 மணி நேரமும் நடைபெறும் வகையில், அதிகாரிகள், ஊழியர்கள் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பது உட்பட இயற்கையின் பேரழிவிலிருந்து மக்களை பாதுகாக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்குமாறு தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு வலியுறுத்துகிறது.
 

இயற்கை பேரிடரை எதிர்கொள்ள தேவையான பேரிடர் மீட்பு குழு, விமானம், ஹெலிகாப்டர் போன்ற வசதிகளை அளிப்பதுடன் தேவையான நிதியினையும் மத்திய அரசு வழங்க முன்வர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு மத்திய அரசை வலியுறுத்துகிது. இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடி மீது காவல் நிலையத்தில் புகார்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Police complaint against Prime Minister Modi

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கியது. நாடு முழுவதும் மொத்தமாக ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இறுதிக் கட்ட தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று முன் தினம் (21.04.2024) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும். அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார்.

பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 

Police complaint against Prime Minister Modi

இந்நிலையில் வெறுப்பு பேச்சு தொடர்பாக பிரதமர் மோடி மீது டெல்லி மந்திர்மார் காவல் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர்  பிருந்தா காரத் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், “ஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பூட்டும் வகையில் பிரதமர் பதவியில் உள்ள மோடி பேசியுள்ளார். எனவே இந்த வெறுப்பு பேச்சு தொடர்பாக பிரதமர் மோடி மீது குற்ற வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் முறையிடவும் வழக்கறிஞர்கள் திட்டமிட்டுள்ளனர். மேலும் வெறுப்பு பேச்சுக்களை தடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் இன்று (23.04.2024) விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

Next Story

“கண்டிப்பாக ஆட்சி மாற்றம் ஏற்படும்” - கே. பாலகிருஷ்ணன்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
State Secretary of the Communist Party of India in Chidambaram K. Balakrishnan voted

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் நாடாளுமன்ற தேர்தலில் காலையில் இருந்து பொதுமக்கள் அவர்களது வாக்கினை ஆர்வமுடன் செலுத்தி வருகின்றனர். இதில் சிதம்பரம் மானா சந்து நகராட்சி நடுநிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் அவரது மனைவி கட்சியின் மாநில குழு உறுப்பினர் ஜான்சி ராணியுடன் சென்று வாக்கினை பதிவு செய்தார்.

அப்போது அவர் வாக்குச்சாவடி மையத்திற்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், கடந்த 2019 தேர்தலை விட இந்த தேர்தலில் தமிழகம் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் மகத்தான வெற்றி பெறுவார்கள்.  தமிழகத்தில் உள்ள வாக்காளர்கள் மத்தியில் ஒரு ஆட்சி மாற்றம் வேண்டும் என தெளிவாக உள்ளனர். மோடி வெற்றி பெற முடியாது என்பதை பல ஆய்வுகள் கூறுகிறது.

தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழக தலைவர் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இந்தியா கூட்டணி தலைவர்கள் மேற்கொண்ட பிரச்சாரம் பொதுமக்களின் வாழ்வாதாரம், அரசியல் பிரச்சனைகளை முன்னிறுத்தி இருந்தது. கூட்டாட்சி தத்துவத்தையும் இந்தியாவின் பன்முக தன்மையை பாதுகாப்பது. விலைவாசி உயர்வை தடுப்பது. வேலையில்லா திண்டாட்டத்தை தீர்க்க வேண்டும் என்ற மக்களின் அடிப்படையிலான பிரச்சனைகளை வலியுறுத்தி பிரச்சாரம் மேற்கொண்டுள்ளோம். இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கண்டிப்பாக ஆட்சி மாற்றம் ஏற்படும் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்  எனக்கூறினார்.