ஜெ.வுக்கு அளிக்கப்பட்டதுபோல் குருவுக்கும் உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டது: அன்புமணி 

kaduvetti guru

மறைந்த வன்னியர் சங்க தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான காடு வெட்டி குருவுக்கு நினை வேந்தல் நிகழ்ச்சி பா.ம.க. சார்பில் புதுவை அருகே உள்ள பட்டானூரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தலைமை தாங்கினார். கட்சி தலைவர் ஜி.கே. மணி முன்னிலை வகித்தார். இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ், கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

அன்புமணி ராமதாஸ் பேசும்போது,

குருவை நான் எனது மூத்த சகோதரராக பாவித்து வந்தேன். கட்சியில் அதிக நாட்டம் கொண்டு செயல்பட்டதால் குரு தனது உடல்நலத்தை சரியாக கவனிக்கவில்லை. இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டு விட்டது. கடந்த 4 வருடங்களாக அவர் இப்பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிந்ததும், அவரை சிகிச்சை எடுக்கமாறு கூறினோம். ஆனால் அவர் கண்டுகொள்ளவில்லை. சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெறலாம் என்று கூறினோம். அவர் ஒப்புக்கொள்ளவில்லை. அவர் மீது வழக்குகள் இருப்பதால் பாஸ்போர்ட் வாங்குவதில் சிக்கல் இருந்தது. சிகிச்சைக்காக செல்வதாக கூறி பாஸ்போர்ட் எடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டோம்.

இருப்பினும் அவர் எங்களுக்கு தெரியாமல் மருத்துவம் எடுத்து வந்தார். நாங்கள் யார் சொல்லிலும் அவர் கேட்கவில்லை. ராமதாஸ் சொல்லிதான் குரு சிகிச்சை எடுக்க ஒப்புக்கொண்டார். அவருக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரி மற்றும் அமெரிக்காவில் உள்ள டாக்டர்களின் ஆலோசனைகளை எல்லாம் பெற்று சிகிச்சை அளித்தனர்.

அவரை வெளிநாட்டுக்கு கொண்டு செல்லலாம் என நினைத்தோம். ஆனால், வெளிநாடு செல்லும் அளவுக்கு அவரது உடல் நிலை ஒத்துழைப்பு தரவில்லை.

kaduvetti guru

ஜெயலலிதாவுக்கு எந்த மாதிரி சிகிச்சைகள் எல்லாம் அளிக்கப்பட்டதோ அதே போல் உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் அவரை உயிருடன் மீட்டு வர முடியவில்லை.

அவரை இழந்ததால் எனது சொந்த சகோதரனை இழந்த உணர்வில் இருக்கிறேன். என்னைவிட 7 வயது மூத்தவர் குரு அவர்கள். இருப்பினும் என்னை அண்ணன் என்று கூப்பிடுவார். அப்படி கூப்பிடாதீர்கள் என்று பலமுறை கூறியும் அவர் என்னை அப்படித்தான் கூப்பிடுவார். எனக்கு உடன் பிறந்த சகோதரர் இருந்தால் கூட இப்படி பாசமாக, அக்கறையாக இருந்திருக்க மாட்டார்கள். ஒவ்வொரு பாமக மேடையிலும் என்னை முதல்வர், முதல்வர் என குறிப்பிடுவார்.

குருவை வன்னியர் சங்க தலைவராக பார்த்து விட்டு அந்த இடத்தில் இன்னொருவரை நினைத்து பார்க்க முடியவில்லை. எனவே, அந்த பதவியை நிரந்தரமாக குருவுக்கு விட்டு விட்டு 2 அல்லது 3 செயலாளர்களை நியமித்து வன்னியர் சங்கத்தை வழி நடத்தலாம் என ராமதாஸ் அவர்களுக்கு கோரிக்கை வைக்கிறேன்.

காடுவெட்டி குருவுக்கு அவரது சொந்த ஊரில் நினைவிடமும், மணி மண்டபமும் கட்டப்படும். கோனேரி குப்பத்தில் உள்ள கல்லூரியில் அவருக்கு சிலை அமைக்கப்படும். அங்கு அமைய உள்ள புதிய சட்டக்கல்லூரி வளாகத்துக்கு அவரது பெயர் சூட்டப்படும். இவ்வாறு பேசினார்.

anbumani jayalalitha Kaduvetti guru pmk Ramadoss
இதையும் படியுங்கள்
Subscribe