Skip to main content

கச்சநத்தம் கொலை வழக்கு; தீர்ப்பு ஒத்திவைப்பு! 

Published on 27/07/2022 | Edited on 27/07/2022

 

Kachannatham  case; Judgment deferred!

 

சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகில் உள்ள கச்சநத்தம் எனும் கிராமத்தில் ஆதி திராவிட மக்கள் மீது கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் 18 ஆம் தேதி ஆவாரங்காடு எனும் கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு பிரிவினரை சேர்ந்தவர்கள் இரவில் கொடூரமான வகையில்  தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் மூன்று நபர்கள் கொல்லப்பட்டனர். கொடுங்காயத்தால் உடல் நலிவடைந்து ஒரு வருடம் கழிந்து மேலும் ஒருவர் இறந்தார். ‌5 நபர்கள் கொடுங்காயமுற்று ஊனமுற்றவர்களாக வாழ்ந்து வருகின்றனர். காவல்துறையின் புலனாய்வு முடிவடைந்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிறார்கள் உள்ளிட்ட 10 நபர்கள் பிணையில் வெளியே வந்தனர்.

 

முதன்மைக் குற்றவாளிகளில் இரண்டு நபர்களின் பிணையை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தை அணுகி முறையிட்டதன் விளைவாகப் பிணையை ரத்து செய்து,  தொடர்புடையவர்கள் சரணடைய வேண்டுமென உச்சநீதிமன்றம் 10.04.2019 அன்று உத்தரவு பிறப்பித்தது. அதனால் சிறையில் இருக்கும் ஏனையோர் பிணையில் வருவது தடுக்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தால் பிணை ரத்து செய்யப்பட்ட சிலர் உயர்நீதிமன்றத்தை அணுகி பிணை பெற முயற்சித்தனர்.

 

கடந்த 26.09.2019 அன்று, குற்றம் சாட்டப்பட்டவர்கள் பிணையில் வருவது இவ்வழக்கிற்கே பெரும் அச்சுறுத்தலாக இருக்கக் கூடும் என்றும் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்ற நோக்கிலும் ஒரு பொதுநல வழக்கை எழுத்தாளர் இளம்பரிதி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இம் முறையீட்டில் கச்சநத்தம் தொடர்பாக, உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் அனைத்து வழக்குகளிலும் கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் முன்னிலையாக வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது. அடுத்த நாளே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட மனுதாரரின் கோரிக்கையை உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு ஆணையிட்டது.

 

இந்நிலையில் வழக்கானது, உயர்நீதிமன்ற உத்தரவுப்படி விரைவு வழக்காக எடுத்துக்கொள்ளப்பட்டு, அரசு சிறப்பு வழக்கறிஞராக சின்னராசு என்பவர் நியமிக்கப்பட்டு, சிவகங்கை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 33 நபர்களில் ஒருவர் இறந்துவிட, ஏனையோர் மீது வழக்கு நடந்து முடிந்திருக்கிறது. 

 

கச்சநத்தம் தொடர்பான வழக்கு சிவகங்கை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட வாய்ப்பிருப்பதாக கருதியிருந்த நிலையில், வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாஜக தேர்தல் அறிக்கை; ப.சிதம்பரம் சரமாரி கேள்வி!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
 BJP Election Manifesto; P. Chidambaram barrage of questions

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கும் வாக்குப்பதிவு ஜூன் 1 ஆம் தேதி வரை நாடுமுழுவதும் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. பின்பு பதிவான வாக்குகள் ஜூன் 4 எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் வெளியிடப்படவுள்ளது. ஆட்சியைத் தக்க வைக்கும் வகையில் பாஜகவும், இழந்த ஆட்சியை எப்படியாவது பிடிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

அந்த வகையில் காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளர்களை அறிவித்து, தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இத்தகைய சூழலில் பாஜகவின் தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி நேற்று (14.04.2024) வெளியிட்டார். பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான குழு உருவாக்கிய இந்த தேர்தல் அறிக்கை டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் வெளியிட்டப்பட்டது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர் பாஜக தேர்தல் அறிக்கை குறித்துப் பேசுகையில், “எல்லா ஊர்களுக்கும் குழாய் மூலம் தண்ணீரே சென்று சேராத நிலையில், குழாய் மூலம் எரிவாயு எப்படிக் கொண்டு செல்ல முடியும். அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் எரிவாயு விநியோகம் செய்வதாக பாஜக அளித்துள்ள வாக்குறுதி மிகப்பெரிய வேடிக்கையான செயல் ஆகும். பாஜக அரசு கடந்த 10 ஆண்டுகளில் 4 கோடி வீடுகளை கட்டிக்கொடுத்துவிட்டதாக தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பது பொய்க் கணக்கு ஆகும். அதாவது 4 கோடி வீடுகளை கட்டி இருந்தால் 52 ஆயிரம் வீடுகளை ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்டி இருக்க வேண்டும். சிவகங்கை மாவட்டத்தில் பாஜக அரசு கட்டிக்கொடுத்த 52 ஆயிரம் வீடுகளைக் காட்ட முடியுமா?. 

 BJP Election Manifesto; P. Chidambaram barrage of questions

நாடாளுமன்றத்தில் 33 சதவித மகளிர் இட ஒதுக்கீட்டு சட்டத்தை பாஜக அரசு நிறைவேற்றி இருந்தாலும் அந்த சட்டம் இப்போதைக்கு அமலுக்கு வராது. பெண்களுக்கான 33 சதவித இட ஒதுக்கீட்டை வேண்டுமென்றே பாஜக ஒத்திப் போட்டுள்ளது. அனைத்து ஊர்களுக்கும் புல்லட் ரயில் இயக்கப்படும் என்ற பாஜக வாக்குறுதி வேடிக்கையானது. ஒரு புல்லட் ரயிலுக்கு ரூ. 1.1 லட்சம் கோடி செலவு செய்யத் தயாராக உள்ள பாஜக அரசு, போதிய ரயில் விபத்து தடுப்புக் கருவிகளைப் பொருத்தாதது ஏன்?.

வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை என்பது ஏற்கெனவே உள்ள ஒன்றுதான். பழைய பல்லவிகளைப் பாடுவது புதிய சிந்தனை அல்ல. பாஜக தேர்தல் அறிக்கையில் புதிய அறிவிப்புகள் இல்லை. நாட்டில் 5% பேர் ஏழ்மை நிலையில் இருக்கிறார்கள் என்பதை ஏற்க முடியாது. பாஜக தேர்தல் அறிக்கையில் மக்களை ஏமாற்றும் தேர்தல் வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன” எனத் தெரிவித்தார். 

Next Story

காரைக்குடியில் அமித்ஷாவின் ரோடு ஷோ திடீர் ரத்து!

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Amit Shah's road show suddenly canceled in Karaikudi

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதன்படி திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக இரண்டு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை (12.04.2024) தமிழகம் வருகிறார். இந்த பயணத்தின் போது பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். அமித்ஷாவின் பயணத்திட்டத்தின் படி நாளை சிவகங்கை மற்றும் மதுரையில் வாகனப் பேரணி மூலம் வாக்கு சேகரிக்கிறார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து நாளை மறுநாள் (13.04.2024) கன்னியாகுமரியில் பரப்புரையில் ஈடுபடுகிறார். இதனையடுத்து அன்று மாலை நாகப்பட்டினத்தில் நடைபெறும் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். மேலும் தென்காசியில் நடைபெறும் வாகனப் பேரணியில் கலந்துகொள்கிறார். அதே சமயம் நாளை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமித்ஷா சாமி தரிசனம் செய்கிறார்.

இதன்படி சிவகங்கை பாஜக வேட்பாளர் தேவநாதனை ஆதரித்து காரைக்குடியில் அமித்ஷா நாளை ரோடு ஷோ நிகழ்ச்சி நடத்த உள்ளார் என பயணத்திட்டம் வகுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மத்திய அமைச்சர் அமித்ஷாவின் ரோடு ஷோ நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. முன்னதாக தேவநாதன் ரூ. 525 கோடி மோசடி செய்துள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டதும், சென்னையில் பிரதமர் மோடி நேற்று முன்தினம் நடத்திய ரோடு ஷோவுக்கு போதிய வரவேற்பு இல்லை என்ற விமர்சனமும் மக்கள் மத்தியில் எழுந்தது கவனிக்கத்தக்கது.