Skip to main content

வைரமுத்துவால் ஆவணப்படமாக தொடங்கப்பட்டது ஆக்ஷன் படமாக மாறிவிட்டது - கபிலன் வைரமுத்து

Published on 11/02/2019 | Edited on 11/02/2019

கவிஞர் வைரமுத்து அவர்கள் தமிழாற்றுபடை என்ற தலைப்பில் சங்க காலத்து புலவர்கள் பற்றிய ஆவணக்கட்டுரைகளை அரங்கேற்றி வருகிறார். அந்த வரிசையில் சமிபத்தில் ஒளவையார் தமிழாற்றுபடை அரங்கேற்ற விழாவில் கவிஞர் கபிலன் வைரமுத்து நிகழ்திய உரையின் தொகுப்பு. 

 

kabilan

 

நான் நினைவு தெரிந்ததிலிருந்து பல இலக்கிய விழாக்களுக்கு சென்றிருக்கிறேன். ஆனால் விசில் சத்தம் கேட்கிற விழா கவி பேரரசு வைரமுத்துவின் தமிழாற்றுப்படை அரங்கேற்ற விழாதான். விசில் என்பதை விசில் என்றும்  எடுத்துக்கொள்ளலாம் அல்லது ஜனரஞ்சகத்தின் குறியீடாகவும் கொள்ளலாம் அல்லது பார்வையாளர்களின் அதீத ஈடுபாடாகவும் எடுத்துக்கொள்ளலாம். சில அறிஞர்கள் இலக்கிய விழாக்களில் என்ன ஜனரஞ்சகம், இலக்கிய விழாக்கள் யாகம்போல், தியானம்போல், உள்ளுணர்வின் தளத்தில் இருந்தால் போதாதா என வாதிடுவார்கள். ஆனால், தமிழ் வெறும் அறிஞர்களின் மொழி அல்ல, தமிழ் கொண்டாட்டத்தின் மொழி, திருவிழாக்களின் மொழி, இந்த மண்ணின் அற்புதமான ஓசைகளை கொண்டு உருவான மக்களின் மொழி. இந்த மொழிக்கு ஆய்ந்தறிதலும் வேண்டும் ஆரவாரமும் வேண்டும்.

 

பொதுவாக வெற்றித்தமிழர் பேரவை கவிஞரின் தலைமையில் இலக்கிய விழாக்களை நடத்துகிறபோது உற்சாகம் இருக்கும், எனினும் வழக்கத்திற்கு மாறான கூடுதல் உற்சாகத்தையும் வரவேற்பையும் இந்த தமிழாற்றுப்படை அரங்கேற்ற விழாக்களில் காணமுடிகிறது. ஏனென்றால் ''தினமணி'' நாளிதழில் ஒரு கட்டுரை தொடராக இது தொடங்கியது. கவிஞர், கட்டுரைகளை எழுத தொடங்கினார். ஒரு குறுகிய வட்டத்திற்குள்தான் இவை நடந்துகொண்டிருந்தன, ஒரு குறிப்பிட்ட கட்டுரைக்கு சில இடர்பாடுகள் வந்தன. அந்த இடர்களுக்கு பிறகு இலக்கியமாக இருந்த தமிழாற்றுபடை இயக்கமாக மாறியது. எங்கள் மொழியில் கூறவேண்டுமென்றால் 'ஆவணப்படமாக தொடங்கப்பட்டது ஆக்ஷன் படமாக மாறிவிட்டது'. இது ஒரு புறக்காரணம், எனக்கு என்ன ஆச்சர்யமென்றால், கவிஞர் கட்டுரையை வாசிக்க தொடங்கி முடிக்கிற வரையில் அனைவரும் கவனம் சிதறாமல் அவரோடு பயணிப்பது எப்படி என்பதுதான். ஏனென்றால் அவர் படிப்பது ஒரு ஆராய்ச்சி கட்டுரை. எந்த ஆராய்ச்சி கட்டுரை வாசித்தாலும் இப்படி வரவேற்பார்களா என்றால் இல்லையென்றுதான் தோன்றுகிறது. பிறகு இங்கு மட்டும் இது எப்படி சாத்தியமென்றால், இங்கு வந்திருப்பவர்கள் அனைவரும் தமிழ் ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள். இவர்களுக்கு தமிழின் மீதான பற்றில் இது நடக்கிறதா, அல்லது கவிஞர் மீதுள்ள பற்றினாலா அல்லது கவிஞர் தனக்கே உண்டான ஏற்ற இறக்கங்களுடன் படிப்பதால் இது நடக்கிறதா என்றால், இதில் எல்லாமே உண்மையென்றாலும், இதை தாண்டிய உண்மை இருப்பதாக தோன்றுகிறது. கட்டுரை அரங்கேறப்போகிறது என்று, என்று முடிவானதோ அன்றே வாசிப்பு தன்மை, சொற்பொழிவு தன்மை இரண்டையும் கொண்டே கவிஞர் அதை உருவாக்க தொடங்கிவிட்டார். இந்த உருவாக்கமே புதிது. இந்தக் கட்டுரையை ஆராய்ந்து பார்த்தால், அதில் வரலாற்று குறிப்புகள் இருக்கும், தகவல்கள் இருக்கும், விவரங்கள் இருக்கும், விளக்கங்கள் இருக்கும், அதோடு ஒரு சிறுகதைக்கான ஓட்டம் இருக்கும் ஆக இந்தக் கட்டுரை என்ற வடிவத்தை அதன் கம்பீரம் குறையாமல் மக்கள்மயமாக்கிக் கொண்டிருக்கிறார் கவிஞர்.

 

vairamuthu

 

எப்படி இந்தக் கட்டுரை மேடை இவருக்கு புதிதோ அதுபோல இந்த படைப்பனுபவமே புதிதுதான். இதுவரைக்கும் அவரது நூல்கள் அனைத்தையும் மக்கள் ஊடகமாகத்தான் பார்க்கிறேன். கள்ளிக்காட்டு இதிகாசம் பேயத்தேவரின் வாழ்வு. பேயத்தேவரின் வாழ்வு, கவிஞர் வாழ்வோடு கலந்த வாழ்வு. கருவாச்சி காவியம் அதன் இன்னொரு பரிணாமம், மூன்றாம் உலகப்போர் அவர் நிலத்தில் நின்றுகொண்டு உலகத்தை பார்த்த பார்வை. அவரது சிறுகதைகள் அவர் வாழ்வில் சந்தித்த மனிதர்களின் தாக்கங்கள். ஆக இதுவரைக்கும் அவர் படைத்த எல்லா நூல்களிலும் அவர் நூலே ஊடகமாகவும், அவர் வாழ்வே செய்தியாகவும் இருந்திருக்கிறது. ஆனால், தமிழற்றுப்படையில் தமிழை இத்தனை நூற்றாண்டுகளாக சுமந்து வந்த முன்னோர்களின் வாழ்வை செய்தியாக்கி அதற்கு தானே சகலகலா ஊடகமாக செயல்படுகிறார். இதை அவரது எழுத்தின் அடுத்தகட்டமாக பார்க்கிறேன். ஒரு எழுத்தாளன், தன் எழுத்தில் மறைய மறைய அந்த எழுத்து ஒரு நிரந்தரத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருப்பதாக நான் நினைக்கிறன்.

 

இந்த தமிழாற்றுப்படையை பொறுத்தவரையில், கவிப்பேரரசு அவர்கள் ஒரு முக்கியமான உளவியலை கையாண்டிருக்கிறார். சமகாலத்தில் இருக்கிற இருவர் முயற்சி செய்தால் ஒருவர் மற்றோருவர் இடத்தில் இருந்து அவரை புரிந்துகொள்ள முடியும். ஆனால், பல நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நம் முன்னோர்களை அவர்களின் காலத்திற்கே சென்று, அவர்களின் இடத்தில் நின்று, இந்த மண்ணின் மொழியை, கலையை, இலக்கியத்தை, அறத்தை, ஆராய்ந்து இந்தக் கட்டுரைகளை அவர் படைத்துக் கொண்டிருக்கிறார். கபிலர் கட்டுரை அரங்கேற்ற விழாவில் அவர் கூறியிருந்தார் "குறிஞ்சி நிலத்தை கண்டு நான் மயங்கிவிட்டேன். ஒரு மாதமாவது குறிஞ்சி நிலத்தில் நான் வாழவேண்டுமென ஏங்கினேன்" என்று. அவருக்கு தெரிந்திருக்கவில்லை, அவ்வாறு அவர் வாழ்ந்ததால்தான் அந்தக் கட்டுரையை அவர் எழுத முடிந்தது.  இவ்வாறு ஒருவரை அவருடைய இடத்திலிருந்து புரிந்து கொள்வது "எம்பத்தி" என்று கூறுவார்கள். பெருநிறுவனங்களின் வேலைக்கான அடிப்படை தகுதியாக "எம்பத்தி" பார்க்கப்படுகிறது. பெருநிறுவனங்களில் மட்டுமல்ல அரசியலிலும் இது அவசியமான ஒன்று. "கஜா" புயலை விவசாயிகள் இடத்திலிருந்தும் ''ஓகி'' புயலை மீனவர்களின் இடத்திலிருந்தும் பார்க்கிற எம்பத்தி அரசாங்கத்திற்கும் வேண்டும். இத்தகைய புரிதலுக்கு எடுத்துக்காட்டாக கவிஞர் வைரமுத்துவின் கட்டுரைகள் திகழ்கின்றன” என்று அவ்விழாவில் கபிலன் வைரமுத்து பேசினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“சில வாரங்கள்; ஐந்தாண்டுகள்” - தேர்தல் குறித்து தனது ஸ்டைலில் வைரமுத்து

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
vairamuthu about election vote

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ள நிலையில், முதற்கட்ட வாக்குப் பதிவு நாளை (19.04.2024) தொடங்குகிறது. இதில் தமிழகம் உள்பட 21 மாநிலங்களில் மொத்தம் 102 மக்களவைத் தொகுதிகள் அடங்கும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டதையடுத்து நேற்று மாலை 6 மணியுடன் தேர்தல் ஆணையத்தின் விதிப்படி பிரச்சாரத்தை முடித்துக் கொண்டனர். 

இதனிடையே வாக்குரிமையின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் திரைப் பிரபலங்கள் பேசி வருகின்றனர். ஏற்கனவே விஜய் சேதுபதி, “நமக்காக இல்லைன்னாலும் நம்ம குழந்தைகளோட எதிர்காலத்திற்கும், நம்ம அடுத்த தலைமுறையோட எதிர்காலத்திற்கும் நிச்சயமா ஓட்டு போட வேண்டும். காசு வாங்கிட்டு ஓட்டு போடுவது, காசுக்காக ஓட்டை விற்பது எவ்ளோ பெரிய துரோகமோ, அதை விட பச்சை துரோகம் ஓட்டு போடாமல் இருப்பது” என விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டிருந்தார். பின்பு விஜய் ஆண்டனியும் சமீபத்திய செய்தியாளர்கள் சந்திப்பு அனைத்திலும் அனைவரும் ஓட்டு போட வேண்டும் என வலியுறுத்தி வந்தார். 

இவகளைத் தொடர்ந்து ஜெய் பீம் இயக்குநரும், “வாக்குரிமை என்பது என் உரிமைகளைக் காத்து, உணர்வுகளைப் புரிந்து ஆட்சி செய்கிற ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் சமூகக் கடமை” என அவரது எக்ஸ் வலைதளத்தில் குறிப்பிட்டு இந்தியா கூட்டணிக்கு அனைவரும் வாக்களிக்குமாறு வேண்டுகோள் வைத்தார்.

இந்த வரிசையில் தற்போது வைரமுத்துவும், அவரது எக்ஸ் பக்கத்தில் வாக்குரிமையின் முக்கியத்தும் குறித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “விரலில் வைத்த கருப்புமை நகத்தைவிட்டு வெளியேறச் சில வாரங்கள் ஆகும். பிழையான ஆளைத் தேர்ந்தெடுத்துவிட்டால் அநீதி வெளியேற ஐந்தாண்டுகள் ஆகும். சரியான நெறியான வேட்பாளருக்கு வாக்களியுங்கள். வாக்கு என்பது நீங்கள் செலுத்தும் அதிகாரம்” என குறிப்பிடப்பட்டுள்ளது. 

Next Story

“எறிகணைகள், கிழவியின் கூடையை உடைக்கின்றன” - வைரமுத்து 

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
vairamuthu about israel iran issue

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் இன்னும் நீடித்து கொண்டே இருக்கிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா நகர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபோது, பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்கள் சிலர் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள பிணைக் கைதிகளில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது.

இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படை மூத்த தளபதி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து இந்த நிலையில் இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவி வான்வெளி தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஏற்கெனவே இஸ்ரேலிய சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்திருந்த நிலையில், தற்போது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. ஆனால் ஈரான் தாக்குதலால் இஸ்ரேலியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிரியா, லெபனான் எல்லை பகுதியில் வசிக்கும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த நிலையில் ஈரான் தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியுள்ளது. ஈரானின் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புதுறை தெரிவித்துள்ளது. இதனிடையே ஈரான் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் வெளியுறவுத்துறை பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கவலை தெரிவித்தது. மேலும் உடனடியாக மோதலை நிறுத்தி, வன்முறையை கைவிட்டு அமைதிக்குத் திரும்ப வேண்டும் என அறிக்கை வெளியிட்டுருந்தது. 

vairamuthu about israel iran issue

இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து இஸ்ரேல் - ஈரான் இடையே நடக்கும் தாக்குதல் குறித்து அவரது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது, 

“இஸ்ரேல் மீது ஈரானும்
ஹமாஸ் மீது இஸ்ரேலும்
விசிறியடிக்கும் எறிகணைகள்,
பாப்பாரபட்டியில்
ஈயோட்டிக்கொண்டு
பலாச்சுளை
விற்றுக்கொண்டிருக்கும்
பஞ்சக் கிழவியின்
கூடையை உடைக்கின்றன

உலகப் பொருளாதாரம்
பின்னல் மயமானது

உலகு தாங்காது

நிறுத்துங்கள் போரை
ஐ.நாவால் முடியாது;
அவரவர் நிறுத்தலாம்” என பதிவிட்டுள்ளார். 

ஏற்கெனவே கடந்த ஆண்டு இஸ்ரேல் - காசா தாக்குதல் குறித்து, “யுத்த களத்தில் நம் தமிழ்ப் பாடல் ஒலிக்கட்டும்” எனக் குறிப்பிட்டு 'புத்தம் புது பூமி வேண்டும்...'(திருடா திருடா) என்ற பாடலை மேற்கோள்காட்டி தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.