Kabaddi players who went to Punjab returned to Chennai

பஞ்சாப் மாநிலத்தில் 2024-2025ஆம் ஆண்டிற்கான பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான மகளிர் கபடி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில், இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த கபடி வீராங்கனைகள் பங்கேற்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் இருந்து பெரியார் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், அன்னை தெரசா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து கபடி வீராங்கனைகள் பங்கேற்றனர்.

இத்தகைய சூழலில் தான், அன்னை தெரசா பல்கலைக்கழக கபடி வீராங்கனைகளுக்கும், தர்பங்கா பல்கலைக்கழக கபடி வீராங்கனைகளுக்கும் இடையே கடந்த 24ஆம் தேதி (24.01.2025) கபடி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியின் போது எதிர் அணியினர், அன்னை தெரசா பல்கலைக்கழக அணியின் வீராங்கனை மீது பவுல் அட்டாக் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால், இரு அணிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இதனையடுத்து, இரு அணிகளும் நடுவரிடம் சென்று முறையிட்டுள்ளனர்.

அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் நடுவர், அன்னை தெரசா பல்கலைக்கழக வீராங்கனையைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால், இரு அணிகளுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து இரு அணியினரும் அங்கு இருந்த நாற்காலிகளைத் தூக்கி வீசி சண்டையிட்டுக் கொண்டனர். இதனால், அந்த இடமே களேபரமானது. பஞ்சாபில் தமிழக வீராங்கனைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் பஞ்சாப் சென்ற தமிழக வீரர்கள் பஞ்சாபில் இருந்து டெல்லி அழைத்து வரப்பட்டனர். அதன் பின்னர் அங்கிருந்து ரயில் மூலம் இன்று (28.01.2025) சென்னை திரும்பியுள்ளனர். அப்போது தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அதிகாரிகள் வீராங்கனைகளுக்கு வரவேற்பு அளித்தனர்.

Advertisment

இதனையடுத்து சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டு மைதானத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த விளையாட்டு வீராங்கனைகளை விளையாட்டுத்துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர் மேகநாத ரெட்டி ஆகியோர் சந்தித்துப் பேச உள்ளனர். அதன் தொடர்ச்சியாக இந்த சம்பவம் தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.