K. Veeramani Dravidar Kazhagam

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குப் பெண்களை அனுமதிக்கவேண்டும் என்று 2006 இல் வழக்குப் போட்டதே ஆர்.எஸ்.எஸ்.தான்; அதற்கு மாறாக இப்பொழுது போராட்டம் நடத்துவதும் இதே ஆர்.எஸ்.எஸ்.தான் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

Advertisment

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

2006 இல் வழக்குப் போட்டதே ஆர்.எஸ்.எஸ்.தான்?

அய்யப்பன் கோவிலுக்குப் பெண்களை அனுமதிக்கக் கூடாது என்று கூறி, கேரளாவில் பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். வகையறாக்கள் அன்றாடம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதுகுறித்து கேரள அமைச்சர் தெரிவித்துள்ள தகவல் முக்கியமானது.

Advertisment

2006 இல் வழக்குத் தொடுத்தவர்கள் யார்?

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கக் கோரி ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர்கள் கடந்த 2006 ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது ஏன்? என்று கேரள அமைச்சர் கடக்கம்பள்ளி சுரேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. எனினும், தேசிய அய்யப்ப பக்தர்கள் சங்கம், நாயர் சொசைட்டி சர்வீசு உள்ளிட்ட அமைப்புகள் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுக்களை தாக்கல் செய்துள்ளன. இது தொடர்பாக அமைச்சர் கடக்கம்பள்ளி சுரேந்திரன் கூறியதாவது:

Advertisment

‘‘சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கவேண்டும் என்று கோரி ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர்கள் கடந்த 2006 ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இப்போது அவர்களே உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகப் போராடுகிறார்கள். பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் அரசியல் ஆதாயத்துக்காக மக்களைக் குழப்புகின்றன.

உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து பல்வேறு அமைப்புகள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதில் தீர்ப்பு வரும்வரை அனைவரும் அமைதி காக்கவேண்டும்.’’

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மாநில :அமைச்சரின் அதிகாரப்பூர்வ அறிக்கைக்கு எந்தவித மறுப்பும் பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். தரப்பில் வெளிவரவில்லையே, ஏன்?

அய்யப்பன் கோவிலில் பெண்களை அனுமதிப்பதா? மத சம்பிரதாயத்துக்கு விரோதம் - ஒவ்வொரு கோவிலுக்கென்று ஒவ்வொரு சம்பிரதாயம் உண்டு. அதனை மீற அனுமதிக்க முடியாது என்று கூறி, கேரளாவில் இடதுசாரி ஆட்சிக்கு எதிராக பக்திப் போதையில் மூழ்கியிருக்கும் மக்களை குறிப்பாக பெண்களை ஒன்று திரட்டி நாள்தோறும் போராட்டங்களை நடத்துபவர்களும் இதே பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். வகையறாக்கள்தான்.

‘‘பேச நா இரண்டுடையாய் போற்றி!’’

‘‘பேச நா இரண்டுடையாய்ப் போற்றி’’ என்று ஆரியத்தைப்பற்றி அண்ணா ‘ஆரிய மாயை’யில் எழுதினாரே, அது எந்த அளவுக்கு நூற்றுக்கு நூறு உண்மை என்பதைப் புரிந்துகொள்வீர்!

இவர்கள் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்துவோம்!

அரசியல் - தேர்தல் இலாபம்!

பெண்களுக்குக் கிடைத்திருக்கும் இந்த உரிமையைப் பயன்படுத்திக் கொள்வதில் பெண்கள் வீதிக்கு வந்து போராடவும் முன்வரவேண்டும்.

இது வெறும் மதப் பிரச்சினை மட்டுமல்ல; தேர்தல் - அரசியல் இதற்குள்ளிருக்கிறது என்பதையும் அம்பலப்படுத்துவோம்!

2019 இல் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை மய்யப்படுத்தி இதனைக் கையில் எடுத்திருக்கிறது பி.ஜே.பி. என்பதும் முக்கியமாகும்.

இவ்வாறு கூறியுள்ளார்.