Skip to main content

சபரிமலை விவகாரம்: வழக்குப் போட்டதும் ஆர்.எஸ்.எஸ்.தான்! போராட்டம் நடத்துவதும் அவர்கள்தான்: கி.வீரமணி

Published on 17/10/2018 | Edited on 17/10/2018
K. Veeramani Dravidar Kazhagam



சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குப் பெண்களை அனுமதிக்கவேண்டும் என்று 2006 இல் வழக்குப் போட்டதே ஆர்.எஸ்.எஸ்.தான்; அதற்கு மாறாக இப்பொழுது போராட்டம் நடத்துவதும் இதே ஆர்.எஸ்.எஸ்.தான் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

2006 இல் வழக்குப் போட்டதே ஆர்.எஸ்.எஸ்.தான்?
 

அய்யப்பன் கோவிலுக்குப் பெண்களை அனுமதிக்கக் கூடாது என்று கூறி, கேரளாவில் பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். வகையறாக்கள்  அன்றாடம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதுகுறித்து கேரள அமைச்சர் தெரிவித்துள்ள தகவல் முக்கியமானது.
 

2006 இல் வழக்குத் தொடுத்தவர்கள் யார்?
 

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கக் கோரி ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர்கள் கடந்த 2006 ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது ஏன்? என்று கேரள அமைச்சர் கடக்கம்பள்ளி சுரேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
 

சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. எனினும், தேசிய அய்யப்ப பக்தர்கள் சங்கம், நாயர் சொசைட்டி சர்வீசு உள்ளிட்ட அமைப்புகள் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுக்களை தாக்கல் செய்துள்ளன. இது தொடர்பாக அமைச்சர் கடக்கம்பள்ளி சுரேந்திரன் கூறியதாவது:
 

‘‘சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கவேண்டும் என்று கோரி ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர்கள் கடந்த 2006 ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இப்போது அவர்களே உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகப் போராடுகிறார்கள். பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் அரசியல் ஆதாயத்துக்காக மக்களைக் குழப்புகின்றன.
 

உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து பல்வேறு அமைப்புகள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதில் தீர்ப்பு வரும்வரை அனைவரும் அமைதி காக்கவேண்டும்.’’
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
 

மாநில :அமைச்சரின் அதிகாரப்பூர்வ அறிக்கைக்கு எந்தவித மறுப்பும் பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். தரப்பில் வெளிவரவில்லையே, ஏன்?


அய்யப்பன் கோவிலில் பெண்களை அனுமதிப்பதா? மத சம்பிரதாயத்துக்கு விரோதம் - ஒவ்வொரு கோவிலுக்கென்று ஒவ்வொரு சம்பிரதாயம் உண்டு. அதனை மீற அனுமதிக்க முடியாது என்று கூறி, கேரளாவில் இடதுசாரி ஆட்சிக்கு எதிராக பக்திப் போதையில் மூழ்கியிருக்கும் மக்களை குறிப்பாக பெண்களை ஒன்று திரட்டி நாள்தோறும் போராட்டங்களை நடத்துபவர்களும் இதே பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். வகையறாக்கள்தான்.
 

‘‘பேச நா இரண்டுடையாய் போற்றி!’’
 

‘‘பேச நா இரண்டுடையாய்ப் போற்றி’’ என்று ஆரியத்தைப்பற்றி அண்ணா ‘ஆரிய மாயை’யில் எழுதினாரே, அது எந்த அளவுக்கு நூற்றுக்கு நூறு உண்மை என்பதைப் புரிந்துகொள்வீர்!

இவர்கள் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்துவோம்!
 

அரசியல் - தேர்தல் இலாபம்!
 

பெண்களுக்குக் கிடைத்திருக்கும் இந்த உரிமையைப் பயன்படுத்திக் கொள்வதில் பெண்கள்  வீதிக்கு வந்து போராடவும் முன்வரவேண்டும்.
 

இது வெறும் மதப் பிரச்சினை மட்டுமல்ல; தேர்தல் - அரசியல் இதற்குள்ளிருக்கிறது என்பதையும் அம்பலப்படுத்துவோம்!
 

2019 இல் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை மய்யப்படுத்தி இதனைக் கையில் எடுத்திருக்கிறது பி.ஜே.பி. என்பதும் முக்கியமாகும்.
 

 

இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் நடத்தை விதிகள்; சமயோசிதமாகச் செயல்பட்ட திராவிடர் கழகத்தினர்

Published on 18/03/2024 | Edited on 19/03/2024
Rules of Conduct for Elections Dravidar Kazhagam who worked strategically

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன்தினம் (16.03.2024) நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. நாடு முழுவதும் மொத்தமாக ஏழு கட்டங்களாக இந்த தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அதே வேளையில் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளைத் தேர்தல் ஆணையம் அமலுக்கு கொண்டு வந்துள்ளது.

இது குறித்த அறிவிப்பில், ‘சமூக வலைத்தளங்களில் அரசியல் கட்சியினர் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். ஆன்லைன் மூலம் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதைத் தடுக்க ஆன்லைன் பரிவர்த்தனையும் கண்காணிக்கப்படும். தேர்தல் ஆணையர்கள் உள்பட யாரை வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம். ஆனால், வதந்தி பரப்பக் கூடாது. மாலை, இரவு நேரங்களில் வங்கிகள் வாகனங்களில் பணம் எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்கூட்டியே அறிவிக்கப்படாத தனி விமானப் பயணங்கள் அனைத்தும் கண்காணிக்கப்படும். வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்கள் படங்கள் அகற்றப்பட வேண்டும்’ என்று தெரிவித்திருந்தது. அந்த வகையில் தேர்தல் நடத்தை அமலுக்கு வந்த பிறகு தேர்தல் ஆணையம், போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிகளைக் காரணமாக வைத்து திண்டுக்கல்லில் தந்தை பெரியாரின் சிலையைத் துணியைக் கொண்டு மறைத்துள்ளனர். இத்தகைய செயலுக்கு திராவிடர் கழகத்தினர் கடும் கண்டனத்தைத் தெரிவித்தனர். மேலும் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த கழக அமைப்பாளர் இரா. வீரபாண்டியன், திண்டுக்கல் மாவட்டத் தலைவர் ஆனந்த முனிராசன், திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் காஞ்சித்துரை ஆகியோர், கடந்த 2011 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி பெரியாரின் சிலையை மூடக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்ற உத்தரவின் நகலைக் காண்பித்து சிலை மூடப்பட்ட அரை மணி நேரத்தில் பெரியார் சிலை மீண்டும் திறக்க வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாகக் காணப்பட்டது.

Next Story

“திராவிடர் கழகம் தான் எனக்கு தாய் வீடு” - முதல்வர் மு.க. ஸ்டாலின்

Published on 06/10/2023 | Edited on 06/10/2023

 

Dravidar Kazhagam is my mother's house says CM MK Stalin

 

திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞரின் நூற்றாண்டு விழா கடந்த ஜூன் மாதம் 3 ஆம் தேதி முதல் தமிழக அரசு சார்பிலும் திமுக சார்பிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இது தொடர்பாகப் பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

 

அந்த வகையில் தஞ்சாவூரில் கலைஞரின் நூற்றாண்டு விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் திராவிடர் கழகம் சார்பில் தாய் வீட்டில் கலைஞர் என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு பேசுகையில், “தந்தை பெரியாரின் திராவிடர் கழகம் தான் கலைஞருக்கு தாய் வீடு. தாய் வீட்டில் கலைஞர் என்ற புத்தகம் வெளியிடக் கூடிய நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தாய் வீட்டில் கலைஞர் மிக மிகப் பொருத்தமான தலைப்பு. எனக்கும் திராவிடர் கழகம் தான் தாய் வீடு. தாய் வீட்டில் கலைஞர் என்ற நூலை வெளியிடுவதற்காக மட்டுமல்லாமல் நானும் என் வீட்டிற்குச் செல்கிறேன் என்ற உணர்வோடு தான் இங்கு வந்துள்ளேன். அதிலும் குறிப்பாகத் திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அழைத்தால் எங்கும் போவேன். எப்போதும் போவேன். எந்த நேரத்திலும் போவேன். காரணம் என்னைக் காத்தவர். இன்றைக்கும் என்னைக் காத்துக் கொண்டிருப்பவர்.

 

அதிலும் குறிப்பாக மிசா காலத்தில் இருட்டறையில் எனக்கு தைரியம் கொடுத்தவர் தான் ஆசிரியர் கி. வீரமணி. தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும் இல்லாத நேரத்தில் எனக்கு ஆறுதலாக இருப்பவர் ஆசிரியர் கி. வீரமணி என்று கலைஞர் குறிப்பிட்டார். என்னைப் பொறுத்தவரையில் கலைஞர் இல்லாத நேரத்தில் கொள்கை வழிகாட்டியாக இருப்பவர் ஆசிரியர் கி. வீரமணி. அதனால் தான் நாம் போக வேண்டிய பாதை பெரியார் திடல் தான் என்பதை நான் பலமுறை குறிப்பிட்டுள்ளேன்” எனப் பேசினார்.