Skip to main content

அணைக்கிற கைதான் உடைக்கும்! -அமைச்சரின் ஆத்திரத்தில் நொறுங்கிய கேமரா?

Published on 21/06/2019 | Edited on 21/06/2019

 

காமெடியாகவும்,  சீரியஸாகவும்  “நாக்கை அறுப்பேன்” என்று விவகாரமாகவும் பேசிவருபவர் தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி. செய்தியாளர்கள் என்ன கேள்வி கேட்டாலும் சளைக்காமல் பதில் சொல்வார்.  ‘சுவாரஸ்யமாக ஏதாவது பேசுவார்;  அது  பிரேக்கிங் நியூஸ் ஆகிவிடக்கூடும்’  என்ற நம்பிக்கையுடன், செய்தியாளர்கள் அவருடைய வாயைக் கிளறுவதுண்டு. செய்தித்துறை அமைச்சர் பொறுப்பிலும் இருந்தவர் என்பதால், செய்தியாளர்களின் மனதறிந்து நடந்துகொள்வார். அப்படிப்பட்ட கே.டி.ராஜேந்திரபாலாஜி,  செய்தியாளர் ஒருவரிடம் இன்று ஏன் அப்படி நடந்துகொண்டார்? 

 

k

 

விவகாரம் இதுதான் - 

‘அதிமுகவின் கட்டுப்பாட்டை மீறி ஊடகங்களிடம் பேசினால் நிர்வாகிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை பாயும்’ என்று  ஆலோசனைக் கூட்டத்தில் கடுமையாக எச்சரித்திருக்கும் நிலையில், முன்புபோல் அதிரடி கருத்துக்களை செய்தியாளர்களிடம்  கே.டி.ராஜேந்திரபாலாஜி வெளியிடுவதில்லை. அரசின் திட்டங்கள் குறித்தும், அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்தும் அவர் தொடர்ந்து பேட்டி அளித்துவருவதால், பழைய விறுவிறுப்பு  ‘மிஸ்ஸிங்’ ஆகிவிட, உப்புச்சப்பு இல்லாத விஷயங்களுக்கு சேனல்களும் முன்புபோல் முக்கியத்துவம் தருவதில்லை. 

 

k

 

இன்று காலை,  அமைச்சரின் சொந்த ஊரான திருத்தங்கல்லில் நின்ற நாராயண பெருமாள் கோவில் ஆனி பிரமோற்சவ தேரோட்டம் நடந்தது. கே.டி.ராஜேந்திரபாலாஜிதான் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது,  பெருமளவில் பக்தர்கள் கூடிய தேரோட்டத்தை  ‘கவரேஜ்’ செய்வதற்கு, ஆளும்கட்சி சேனலின் நியூஸ் ஜெ செய்தியாளரை அமைச்சரின் கண்கள் தேடின. அவர் காணப்படவில்லை.   இன்று யோகா தினம் என்பதால், செய்தியாளர்களும் ஊடகவியலாளர்களும்,  பள்ளிகளில் நடந்த யோகா நிகழ்ச்சிகளுக்குச் சென்றுவிட்டனர். அதனால், வழக்கமாக அமைச்சர் நிகழ்ச்சிகளுக்குப் பெருமளவில் வரும் செய்தியாளர்கள் இன்று வரவில்லை. நியூஸ் ஜெ. சிவகாசி தாலுகா செய்தியாளர் விக்னேஷும் வராததால் டென்ஷன் ஆகிவிட்டார்.

 

நியூஸ் ஜெ மாவட்ட செய்தியாளர் கண்ணனிடம் அமைச்சர் தரப்பில் விசாரித்தபோது, “இல்லையே.. விக்கி அங்குதான் இருக்கிறார்.” என்று கூற, சில நிமிடங்களிலேயே, திருத்தங்கல் நகராட்சி அலுவலகத்தில் கே.டி.ராஜேந்திரபாலாஜி முன்பாக ஆஜரானார் விக்னேஷ்.  ‘முக்கிய நிகழ்ச்சி என்று தெரிந்தும் ஏன் வரவில்லை?’ என்று அமைச்சர் கேட்க,  “நான் வீடியோ எடுத்துட்டேன்..” என்று சமாளித்திருக்கிறார் விக்னேஷ். “எங்கே நீ எடுத்ததைக் காட்டு..” என்று கேமராவை வாங்கிப் பார்த்துவிட்டு, ஆத்திரத்தில் திட்டியிருக்கிறார். 

 

அடுத்த சில நிமிடங்களில்,   ‘நியூஸ் ஜெ செய்தியாளரிடமிருந்து கேமராவைப் பிடுங்கி அமைச்சர் உடைத்துவிட்டார்.. நொறுங்கி சுக்கு நூறான அந்தக் கேமராவின் விலை ரூ.55000’ என்று வாட்ஸ்ப்பில் தகவல் தீயாகப் பரவ, விருதுநகர் மாவட்ட ஜெ. நியூஸ் செய்தியாளர் கண்ணனைத் தொடர்புகொண்டோம். “என்னது கேமராவை அமைச்சர் உடைச்சாரா? நல்ல ஜோக்கா இருக்கு. கூட்ட நெருக்கடியில், கைதவறி கேமரா கீழே விழுந்து உடைஞ்சிருச்சு. தேவையில்லாம அமைச்சர் பேரை இதுல இழுத்து விட்டா எப்படி?” என்று,  ஜெ. நியூஸ் நிர்வாகத்தின் வழிகாட்டுதலின்படி பேசினார். 

 

அதிமுக திருத்தங்கல் நிர்வாகி ஒருவர் நம்மிடம் “என்னங்க பெரிய கேமரா? அது வெறும் இருபத்தைந்தாயிரமாம். ஐம்பதாயிரத்துக்குக்கூட அமைச்சர் புது கேமரா வாங்கித் தந்திருவாரு. நியூஸ் ஜெ எங்க கட்சி சேனல். அந்த விக்கி எங்க செய்தியாளர். இதெல்லாம் ஒரு விஷயமா? அமைச்சருன்னா டென்ஷன் இருக்கத்தான் செய்யும். ஒண்ணு தெரியுமா? அமைச்சர் யார் யாரைத் திட்டுறாரோ, அவங்களையெல்லாம் பின்னால பெரிசா கவனிச்சிருவார். அமைச்சர் இன்னைக்கு நம்மள திட்ட மாட்டாரா? என்று கட்சியில அவனவன் ஏங்கிக்கிட்டிருக்கான். அமைச்சருக்கு ரொம்ப நல்ல மனசுங்க.  அடிக்கிற கைதான் அணைக்கும்கிறது அமைச்சர் விஷயத்துல எப்பவுமே சரியா இருக்கும்.” என்று அமைச்சர் புராணம் பாடினார்.

 

அந்த அதிமுக நிர்வாகி சொல்வதைப் பார்த்தால், அமைச்சரின் கைதான் கேமராவை உடைத்திருக்கும் போல!  


 

சார்ந்த செய்திகள்

Next Story

ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி புகார்; இறுதிக்கட்டத்தில் போலீஸ் விசாரணை!

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
complaint against Rajendra Balaji Police investigation in the final stage

அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தபோது ஆவின் மற்றும் அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி பல்வேறு நபர்களிடம் மூன்று கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இத்தகைய சூழலில் அவர் தலைமறைவானார். அதன்பின்னர் போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து ராஜேந்திர பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று தற்போது ஜாமீனில் உள்ளார். அதே சமயம் நல்லதம்பி என்பவர் ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி புகார் தொடர்பான இந்த வழக்கின் விசாரணை மிகவும் மந்தமாக நடப்பதாகவும், அதனால் இதனை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை இன்று (11.04.2024) நீதிபதி ஜெயச்சந்திரன் அமர்வு முன்பு நடைபெற்றது. அப்போது காவல்துறை தரப்பில் வழக்கறிஞர் முகிலன், “இந்த வழக்கின் புலன்விசாரணை இறுதிக் கட்டத்தில் உள்ளது. விரைவில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்” என வாதிட்டார். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி நல்லதம்பியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story

விருதுநகர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் ராஜேந்திர பாலாஜி மீண்டும் ஆஜர்

Published on 15/02/2022 | Edited on 15/02/2022

 

kt rajendra balaji

 

அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி, அரசு வேலை வாங்கித்தருவதாகக் கூறி ரூ.3 கோடி வரை மோசடி செய்ததாகப் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர், கடந்த ஜனவரி 5ஆம் தேதி ராஜேந்திர பாலாஜியை கைது செய்தனர். அதன்பிறகு, உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்ட ராஜேந்திர பாலாஜி, கடந்த சனிக்கிழமை விருதுநகர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜரானார். அப்போது அவரிடம் 11 மணி நேரம் தொடர் விசாரணை நடைபெற்றது.

 

இந்நிலையில், இன்றும் விசாரணைக்காக ராஜேந்திர பாலாஜி அழைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது விருதுநகர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் அவர் ஆஜராகியுள்ளார். அவரிடம் விருதுநகர் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.