Skip to main content

தமிழக முதலமைச்சரை மன்றாடி கேட்டுக்கொள்கிறேன்... கே.எஸ்.அழகிரி

Published on 20/04/2020 | Edited on 20/04/2020

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், டாஸ்மாக் கடைகளை மூடினால், தமிழ் சமுதாயத்தின் மனித வளம் ஆக்கபூர்வமான பணிகளுக்கு பயன்பட்டு, வாழ்க்கையில் முன்னேறுவதற்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமையும் என்பதை தமிழக முதலமைச்சருக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். குடிப்பழக்கத்தால் வாழ்க்கை இழந்து கண்ணீரும் கம்பளையுமாக நிற்கிற லட்சக்கணக்கான அபலைப்பெண்கள், விதவைகள் சார்பாக தமிழக முதலமைச்சரை மன்றாடி கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.


  K. S. Alagiri



கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம்: கடந்த 28 நாட்களாக நடைமுறையில் உள்ள ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு சமூகத்தில் ஆரோக்கியமான ஒரு மாற்றம் தென்படுவது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் 90 சதவீதம் கள்ளச்சாராயம் தடுக்கப்பட்டு விட்டதாக காவல்துறை உயர் அதிகாரி கூறியிருப்பது கூடுதல் மனநிறைவை தருகிறது.


பல ஆண்டுகளாக தமிழ் சமுதாயத்தை கவ்விக்கொண்டிருக்கும் மது அரக்கனிடமிருந்து விடுபடுவதற்கு  ஓர் அரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. கரோனா என்கிற கொடிய தொற்றுநோயை ஒழிக்க நாம் நடத்திக்கொண்டிருக்கிற கடுமையான போரைப்போல, மது அரக்கனை ஒழிக்க கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டிய அவசியம் இல்லை. தமிழக முதலமைச்சர் ஒரு துளி மையை செலவிட்டு ஆணையில் கையொப்பமிட்டாலே தமிழகத்தில் உள்ள 5300 டாஸ்மாக் கடைகளை மே மூன்றாம் தேதியிலிருந்து மூடிவிடலாம்.

 

 nakkheeran app



தமிழக மக்கள் மீது ஆட்சியாளர்களுக்கு உண்மையிலேயே அக்கறை இருக்குமானால், வாராது வந்த மாமணிபோல மக்கள் ஊரடங்கை பயன்படுத்தி மதுவிலக்கை உடனடியாக கொண்டுவரவேண்டும். குடிப்பழக்கத்தால் வாழ்க்கை இழந்து கண்ணீரும் கம்பளையுமாக நிற்கிற லட்சக்கணக்கான அபலைப்பெண்கள், விதவைகள் சார்பாக தமிழக முதலமைச்சரை மன்றாடி கேட்டுக்கொள்கிறேன்.
 

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் நடத்துவதற்கு என்ன காரணம்? அதனால் மக்கள் பயனடைகிறார்களா? பாதிக்கப்படுகிறார்களா? குடிப்பழக்கத்தால் மக்கள் மனித வளத்தையும் வாழ்வாதாரத்தையும் இழந்துகொண்டிருக்கிறார்கள் என்பதை முற்றிலும் அறிந்த ஆட்சியாளர்கள் டாஸ்மாக் கடைகளை தொடர்ந்து நடத்துவது ஏன்?


டாஸ்மாக் கடைகள் மூலம் ஒரு நாளைக்கு ரூபாய் 100 கோடி, ஆண்டுக்கு 36 ஆயிரம் கோடி ரூபாய்  தமிழக அரசின் கஜானாவில் நிரம்பி, நிதி ஆதாரத்திற்கு அதிக வாய்ப்பாக இருக்கிற ஒரே காரணத்திற்காகதான் அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் டாஸ்மாக் கடைகளை நாடுமுழுவதும் நடத்தி வருகிறார்கள்.


ஒரு பக்கம் டாஸ்மாக் கடைகளை நடத்தி மக்கள் வாழ்வாதாரத்தை அழித்துக்கொண்டிருக்கிறார்கள். இன்னொருபக்கம் இலவச திட்டங்களை நிறைவேற்றி மக்களின் வாக்குகளை தேர்தலில் பறிப்பதற்கு பயன்படுத்துகிறார்கள். இத்தகைய இரட்டைவேட ஆட்சியை நடத்துபவர்கள் மக்கள் நலனில் அக்கறை உள்ளவர்களா?  மக்கள் விரோதிகளா? என அறிய தமிழக மக்களுக்கு  வாய்ப்பு கிடைத்திருக்கிறது. டாஸ்மாக் கடைகளை மூடினால், தமிழ் சமுதாயத்தின் மனித வளம் ஆக்கபூர்வமான பணிகளுக்கு பயன்பட்டு வாழ்க்கையில் முன்னேறுவதற்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமையும் என்பதை தமிழக முதலமைச்சருக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
 

கடந்த 40 ஆண்டுகளாக மது குடிப்பழக்கத்திற்கு ஏறத்தாழ ஒன்றரைக்கோடி பேர் ஆளாகியுள்ளனர் என்பது மிகுந்த அதிர்ச்சியை தருகிறது. இதன்மூலம் தமிழகத்தின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருப்பதும் இவர்கள்தான் என்பதை புரிந்துகொள்ளவேண்டும். தற்போது மதுக்கடைகள் மூடப்பட்டிருக்கிற நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் மனரீதியாக பாதிப்பிற்கு உள்ளாகிற நிலை ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

மன அழுத்தம், மன ரீதியாக - உடல்ரீதியாக சோர்வு, மன விரக்தி, அலைபாயும் எண்ணங்கள் - சிந்தனைகள், எரிச்சல், தூக்கமின்மை, ஆகியவற்றால் அவதிப்படுவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. இவர்களுக்கு மருத்துவ சிகிச்சை தருவதற்கும், உளவியல் ஆலோசனை வழங்குவதற்கும் அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மனநல மையங்களை உடனடியாக தொடங்கவேண்டும்.

இந்த மனநல மையங்களில் இவர்களுக்கு உரிய சிகிச்சையும், ஆலோசனையும் வழங்கினால் இவர்களை குடிப்பழக்கத்தில் இருந்து மீட்க முடியும். இதன்மூலம் இவர்களுக்கு மறுவாழ்வு அளித்து சமூகத்தில் செயல்படுகிற மனிதர்களாக மாற்றுவதற்கு மிகப்பெரிய வாய்ப்பு தமிழக அரசுக்கு கிடைத்திருக்கிறது. எத்தனை இலவச திட்டங்களோ, சமூக நல திட்டங்களோ நிறைவேற்றினாலும் அதன் மூலம் முழுமையாக பயன்பெறாமல் தடுப்பது பெரும்பாலான மக்களின் குடிப்பழக்கம்தான்.

எனவே சமூகத்தில் புற்று நோய்போல பரவிவரும் மதுப்பழக்கத்தில் இருந்து மது இல்லாத தமிழகம் என்ற லட்சியத்தை அடைய அனைத்து அரசியல் கட்சிகளும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் ஓரணியில் திரண்டு குரல் கொடுக்க வேண்டும் என அன்போடு வேண்டுகிறேன். இவ்வாறு கூறியுள்ளார். 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடித்துவிட்டு அடிக்கடி தகராறு; தந்தையைக் கொன்ற 15 வயது சிறுவன்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
incident in thoothukudi; police investigation

கன்னியாகுமரியில் பேரனின் மதுப்பழக்கத்தைத் தட்டிக்கேட்ட பாட்டி, தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதேபோல் மது போதையில் தாயை அடித்து துன்புறுத்தி வந்த தந்தையை 15 வயது மகனே கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் மேலும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் செல்சீனி காலனி பகுதியில் வசித்து வருபவர்கள் சக்தி-அனுசியா தம்பதியினர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கணவர் சக்தி சமையல் செய்யும் வேலை செய்து வருகிறார்.  குடிப்பழக்கத்திற்கு அடிமையான சக்தி மது அருந்திவிட்டு அடிக்கடி மனைவி அனுசியாவை துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில்  நேற்று இரவு வணக்கம் போல மது அருந்திவிட்டு வந்த சக்தி, மனைவி அனுசியாவை அடித்து காயப்படுத்தியுள்ளார்.

தந்தையின் இந்தச் செயலால் மன உளைச்சலில் இருந்த மூத்த மகனான 15 வயது சிறுவன், ஆத்திரத்தில் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தந்தை சக்தி மீது சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சக்தி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் சிறுவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? - ராமதாஸ்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Ramdoss has questioned when liquor will be abolished in Tamil Nadu

குடிப்பழக்கம் உள்ள பெற்றோரின் பிள்ளைகளுக்கு சுயமரியாதை குறைவு என ஆய்வில் வெளியாகியுள்ளது; குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான  பெற்றோர்களின் பிள்ளைகள் சுயமரியாதைக் குறைவு, தாழ்வு மனப்பான்மை உள்ளிட்ட மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர் என்று சென்னை மருத்துவக் கல்லூரியின் சமூக மருத்துவ நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. குடிக்கும் பெற்றோரின் பிள்ளைகள் இளம் வயதிலேயே மதுப்பழக்கம் மற்றும் புகையிலைப் பழக்கத்திற்கு அடிமையாகுதல், தீய செயல்களில் அடிக்கடி ஈடுபடுதல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கும் ஆளாவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.  இந்த ஆய்வு முடிவுகள் சிறிதும் அதிர்ச்சியோ, ஆச்சரியமோ அளிக்கவில்லை. மாறாக, மதுப்பழக்கத்தின் தீமைகள் குறித்து பல பத்தாண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி கூறி வரும் குற்றச்சாட்டுகளை உறுதி செய்திருக்கிறது.

அனைத்து சமூகக் கேடுகளுக்கும் ஆணிவேர் மதுப்பழக்கம் தான்.  தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் உள்ளவர்களை கொடுமைப் படுத்தும் தந்தை உள்ள வீட்டில், அவர்களின் பிள்ளைகளால் நிம்மதியாக படிக்க முடியாது; சமூகத்தில் தலை நிமிர்ந்து நடக்க முடியாது என்பது நடைமுறையில் நாம் கண்டு வரும் உண்மை ஆகும். தந்தை குடிப்பதைப் பார்க்கும் பிள்ளைகளும் மது எளிதாக கிடைக்கும் போது அந்தப் பழக்கத்திற்கு அடிமையாவது வழக்கம் தான். 

இந்த உண்மைகளைத் தான்  சென்னை மருத்துவக் கல்லூரியின் ஆய்வு உறுதி செய்திருக்கிறது. அதனால் தான் குடி குடியைக் கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும் என்ற எச்சரிக்கை வாசகங்கள் மதுப்புட்டிகள் மீது எழுதப்பட்டன. மதுவே முற்றிலுமாக ஒழிக்கப்பட  வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழ்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்து வரும் திமுகவும், அதிமுகவும் மதுவின் தீமைகளை கருத்தில் கொள்ளாமல் சட்டப்படியாக அரசுக்கு கிடைக்கும் வருமானத்தையும், சட்டவிரோதமாக தங்களுக்கு கிடைக்கும் லாபத்தையும் மட்டுமே கருத்தில் கொண்டு  தமிழகத்தின் அனைத்து வீதிகளிலும் மதுவை வெள்ளம் போல ஓட விடுகின்றன.

அதுமட்டுமின்றி, மதுப்புட்டிகளில் மதுவின் தீமைகளை குறிக்கும் வகையிலான, 'குடி, குடியை கெடுக்கும்; குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும்; மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்குக் கேடு' என்ற, விழிப்புணர்வு வாசகங்களை நீக்கி விட்டு, 'மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு; பாதுகாப்பாக இருப்பீர். மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டாதீர்' என்ற மென்மையான வாசகங்களை அச்சிட்டது தான் திமுக, அதிமுக அரசின் சாதனைகள் ஆகும்.

எந்த வகையில் பார்த்தாலும் மது மிகப்பெரிய சமூகக் கேடு என்பதில் மாற்றமில்லை.  மது இல்லாத தமிழகத்தில் குடும்பங்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்; குழந்தைகள் சுயமரியாதையுடன் நல்லவர்களாக வளர்வார்கள். எனவே, குடியைக் கெடுக்கும் குடிப்பழக்கத்திற்கு முடிவு கட்டும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளை மூடிவிட்டு முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.