Skip to main content

“ஜனநாயகத்தை வளர்க்க பத்திரிகை மிக முக்கியம்” - பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா

Published on 17/03/2023 | Edited on 18/03/2023

 

Justice D Raja said that journalism is very important   development  democracy

 

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு செய்தி சேகரிக்க வரும் காட்சி ஊடகத்தினர் பேட்டி எடுக்க தனியிடம் ஒதுக்கி கொடுக்க வேண்டும் என பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ், பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜாவிடம் கோரிக்கை வைத்தார்.

 

சென்னை உயர்நீதிமன்ற பத்திரிகையாளர்கள் சங்கத்தை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா துவக்கி வைத்தார். சங்கத்திற்கு  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து செய்தி அனுப்பி உள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்குகள் தொடர்பான விவரங்களை சேகரிக்கும் பணியில் பல்வேறு பத்திரிகைகள் மற்றும் மின்னணு ஊடகங்களைச் சேர்ந்த செய்தியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த செய்தியாளர்கள் உயர்நீதிமன்றத்தில் இருந்து செய்திகளை வழங்கி வரும் நிலையில் அவர்களுக்காக சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

 

சென்னை உயர்நீதிமன்ற பத்திரிகையாளர்கள் சங்கம் எனப் பெயரிடப்பட்டு பதிவு செய்யப்பட்ட இந்த சங்கத்தை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா துவக்கி வைத்தார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மூத்த நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஆர்.மகாதேவன் உள்ளிட்ட நீதிபதிகள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இந்த நிகழ்ச்சியில் ஓய்வுபெற்ற நீதிபதிகள், பார் கவுன்சில் நிர்வாகிகள், பல்வேறு வழக்கறிஞர் சங்கங்கள் மற்றும் பத்திரிகையாளர் சங்கங்களின் நிர்வாகிகள், மத்திய மாநில அரசு வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். சென்னை உயர்நீதிமன்ற பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு டைம்ஸ் ஆஃப் இந்தியா நிறுவனத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஏ.சுப்ரமணி தலைவராகவும், சன் டிவி குழுமத்தைச் சேர்ந்த மூத்த செய்தியாளர் டி.ரமேஷ்குமார் செயலாளராகவும், துணைத் தலைவராக ராம்ஜியும் தேர்வாகியுள்ளனர்.

 

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, மூத்த பத்திரிகையாளர் பி.எஸ்.எல்.பிரசாத் நினைவு சொற்பொழிவாற்றினார். ஊடகங்களும் லட்சுமண ரேகையும் என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றிய அவர், ஜனநாயகத்தில் பத்திரிகைகள் முக்கியமானவை என்றும் அரசியல் சாசனத்தின் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரமே பத்திரிகை சுதந்திரம் என்றும் குறிப்பிட்டார். பத்திரிகைகள் தங்கள் வரம்பை மீறாமல் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஊடக விசாரணை என்ற பெயரில் ஒருவர் மீது குற்றம்சாட்டி பின் நீதிமன்றத்தில் அவர் விடுதலை செய்யப்படும் போது அந்த நபருக்கு இழைக்கப்பட்ட அநீதியை ஈடுகட்ட முடியாது என்றும் பொறுப்பு தலைமை நீதிபதி சுட்டிக் காட்டினார்.

 

பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா உரை, “லட்சுமண ரேகையை பின்பற்றியவர்களுக்கு தங்கப்பதக்கங்களை வழங்கியுள்ளேன். சட்டம் இயற்றும் சட்டமன்றத்தின் அதிகாரத்தில் அதிகாரிகள் தலையிடும் போது நீதித்துறை தலையிடும். சட்டமன்றம், அதிகாரிகள், நீதித்துறை ஆகிய அமைப்புகளுக்கு பிறகு நான்காவது தூணாக பத்திரிகைத் துறை உள்ளது. வரம்பை தாண்டாமல் பணியாற்ற வேண்டும். இல்லாவிட்டால் விளைவுகள் பின்தொடரும். போஸ்ட் கார்டை கூட நீதிமன்றம் வழக்காக எடுத்துக் கொள்ள முடியும். அதுதான் பொது நல வழக்கு. நீதிமன்றத்தை அணுக முடியாதவர்களுக்கு பொது நல வழக்கு பலன் தரும். அதற்கு பத்திரிகையாளர்கள் தான் காரணம். அனைவருக்கும் கருத்து, பேச்சு சுதந்திரம் உள்ளது. பத்திரிகைக்கு என தனி உரிமை இல்லை. கருத்து, பேச்சு சுதந்திரம் தான் பத்திரிகைகளுக்கான சுதந்திரம்” என்றார். தொடர்ந்து பேசிய அவர், “2002-22 -வரை உள்ள கால கட்டத்தில் ஒரு லட்சத்துக்கும் மேல் பத்திரிகைகள் உள்ளன. பொள்ளாச்சி சம்பவம் குறித்து போலீஸ் விசாரிக்கும் முன், குறிப்பிட்டவரின் மகன், சகோதரர் சம்பந்தப்பட்டுள்ளதாக அனைவரும் சொல்லத் துவங்கி விட்டனர். ஊடக விசாரணை என்ற பெயரில் இவர்கள் அப்பாவி என நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு இழைத்த அநீதியை சரிப்படுத்த முடியாது. லட்சுமண ரேகையை பின்பற்ற வேண்டும். காவல் நிலையத்தில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தால் மட்டும் குற்றம் சாட்டப்பட்டவரை தண்டிக்க முடியாது. செய்திகளை வெளியிடும் முன் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.

 

1950ல் மும்பையைச் சேர்ந்த ரமேஷ் பாபு என்பவர் வெளியிட்ட பத்திரிகைக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டது. முதல் பிரதமரின் வெளியுறவு கொள்கையை விமர்சித்த அந்த பத்திரிகைக்கு தடை விதித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். செய்தி தெரிவிப்பது நாட்டுக்கு முக்கியம் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. வரம்புகளை மீறும்போது வரும் பின் விளைவுகளை நீங்கள் எதிர்கொள்ள வேண்டும். ஜனநாயகத்தை வளர்க்க பத்திரிகை முக்கியம் அதுமட்டுமல்லாமல் நியாயமாக நடக்க வேண்டும். ஜனநாயகத்தில் 4 தூண்கள் மட்டுமே உள்ளது. அதில் 4வது தூண் தான் ஊடகங்கள். இந்திய அரசியல் அமைப்பில் 19வது சரத்தில் பேச்சுரிமை மற்றும் கருத்துரிமை அடிப்படையில் ஊடகங்கள் நான்காவது தூணாக கருதப்படுகிறது. ஏழை எளிய சாமானிய நபர்களும் நீதிமன்றத்தை நாடலாம் என்று ஆழமாக விதைக்க முக்கிய காரணம் ஊடகங்கள். சில வழக்குகளில் நீதிமன்றம் சொல்லும் முன்பே பத்திரிகைகள், இவர் குற்றவாளி என்று சொல்வது நடக்கிறது.  இது எப்படி சரியாக இருக்கும்.? வழக்கு விசாரணை நடந்து நீதிமன்றத்தில் குற்றவாளி இல்லை என்ற நிலை கூட வரலாம். ஆனால் அவர் குற்றவாளி என்று பத்திரிகை எழுதிய பிறகு அவர் சமுதாயத்தில் சாதாரணமாக நடக்க முடியுமா? அதனால் தான் பத்திரிகைகள் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டும். 

 

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் பேசுகையில், சென்னை உயர்நீதிமன்றத்திற்கு செய்தி சேகரிக்க வரும் காட்சி ஊடகத்தினர் பேட்டி எடுக்க தனியிடம் ஒதுக்கி கொடுக்க வேண்டும் என பொறுப்பு தலைமை நீதிபதி டி. ராஜாவை கேட்டுக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குட்கா வழக்கு; சி.பி.ஐக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் கடும் கண்டனம்!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Chennai special court strongly condemns CBI at vijayabaskar case

தமிழகத்தில் குட்கா பொருட்கள் விற்பனை மற்றும் கிடங்குகளில் அவற்றை வைத்திருப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது. ஆனால் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தடையை மீறி குட்கா பொருட்கள் விற்கப்பட்டதாகவும், வரி ஏய்ப்பு நடைபெற்றதாகவும் வருமான வரித்துறையினர் கடந்த 2016 ஆம் ஆண்டு பல இடங்களில் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில், குட்கா கிடங்கு உரிமையாளர் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து, கைது செய்யப்பட்டதோடு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டி.ஜி.பி,  மற்றும் முன்னாள் காவல்துறை அதிகாரிகள், மத்திய, மாநில அரசு அதிகாரிகள் என 11 பேருக்கு எதிராக கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அந்தக் குற்றப்பத்திரிக்கையில் பல்வேறு தவறுகள் இருப்பதால் அவற்றைத் திருத்தி மீண்டும் தாக்கல் செய்ய சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு எதிரான இந்த வழக்கில் விசாரணை நடத்த கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். 

இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி மலர் வாலண்டினா முன்பு இன்று (15-04-24) விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ தரப்பில், வழக்கின் விசாரணைக்காக ஒப்புதல் அனுமதி இன்னும் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, நீதிமன்ற நீதிபதி, ‘அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா உள்ளிட்டோர் மீதான குட்கா வழக்கை கடந்த மூன்று ஆண்டுகளாக இழுத்தடிப்பதா? எனக். கூறி கண்டனம் தெரிவித்தார். மேலும், வழக்கின் நிலை என்ன என்பது தொடர்பாக அடுத்த விசாரணையின் போது பதில் அளிக்க வேண்டும் என்று சி.பி.ஐக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை மே மாதம் 2ஆம் தேதி ஒத்தி வைத்தார்.  

Next Story

“ஓ.பி.எஸ். இரட்டை இலையைப் பயன்படுத்தத் தடை தொடரும்” - உயர்நீதிமன்றம்

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
ban on using OPS aiadmk symbol will continue says Madras High Court

அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை பிரச்சனை பூதாகரமாகி ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். ஆகிய இருவரும் நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் முறையிட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராகத் தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதி (20.04.2023) அங்கீகரித்தது. இதன் மூலம் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி வசம் என்பது உறுதியானது. அதே சமயம் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தொடர்ந்து அ.தி.மு.க.வின் கொடிகள், பெயர், லெட்டர் பேடு, சின்னங்களைப் பயன்படுத்தி வந்தார். இதனால் அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுகிறது. எனவே அ.தி.மு.க.வின் கொடிகள், பெயர், லெட்டர் பேடு, சின்னங்களை ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி சதீஷ்குமார், ‘எத்தனை முறைதான் ஒரே ஒரு விவகாரத்திற்காக நீதிமன்றத்தின் கதவை தட்டுகிறீர்கள்’ என ஓ.பி.எஸ். தரப்புக்கு கண்டனம் தெரிவித்ததோடு, அ.தி.மு.க.வின் கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை ஓ.பி.எஸ். பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி அளித்த இந்த இடைக்காலத் தடையை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் தரப்பு மேல்முறையீடு செய்தது.

இந்த மேல்முறையீட்டு வழக்கு பல கட்ட விசாரணைக்குப் பிறகு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் கடந்த 18 ஆம் தேதி, “அ.தி.மு.க. இரட்டை இலை சின்னம், கொடி ஆகியவற்றை ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்த நிரந்தர தடை விதிக்கப்படுகிறது” என அதிரடி தீர்ப்பை வழங்கி இருந்தார். இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேலும் அந்த மனுவில், ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியானதா இல்லையா என்ற வழக்கு நிலுவையில் உள்ளதால்,  அந்த வழக்கின் தீர்ப்பு வரும் வரை தனக்கு கட்சியின் இரட்டை இலை, சின்னத்தையும் கொடியையும் பயன்படுத்த அனுமதியளிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணையின் போது, “அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பி.எஸ்க்கு தடை விதிக்கப்பட்டது தொடர்பாக இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது; ஓ.பி.எஸ். இரட்டை இலை, கட்சியின் பெயர் ஆகியவற்றை பயன்படுத்த விதிக்கப்பட்டிருந்த தடை தொடரும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த மேல்மூறையீடு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க உத்தரவிட்டதோடு, இது தொடர்பாக ஓ.பி.எஸ் தேர்தல் ஆணையத்தை அணுகத் தடையில்லை என்றும் கூறியுள்ளது. இந்த வழக்கின் இறுதி விசாரணை ஜூன் 10 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.