
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கியவுடன் இளைய தலைமுறையினர் பலரும் அவரது கட்சியில் இணைந்தனர். அந்த வகையில் கோவை கவுண்டப்பாளையம் பகுதியைச் சேர்ந்த வைஷ்ணவி என்ற இளம் பெண் த.வெ.க கட்சியில் இணைத்து மக்கள் பணிகளை செய்து வந்தார். மேலும் தனது சொந்த பணத்தில் மக்களுக்கு சில நலத் திட்டங்களை செய்து வந்தார். அதன் காரணமாகவே கட்சியினர் மத்தியில் குறுகிய காலத்திலேயே பிரபலமடைந்தார்.
அண்மையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் உரிய முக்கியத்துவம் தரவில்லை என்று கூறி வைஷ்ணவி த.வெ.க.வில் இருந்து விலகி இருந்தார். இதனைத் தொடர்ந்து சகோதரி வைஷ்ணவிக்கு அரசியல் ஆசை இருந்தால் எங்கள் கட்சிக்கு வரலாம் என்று பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் அழைப்பு விடுத்திருந்தார். அதேபோல் மதிமுகவில் இருந்தும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கோவையில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி முன்னிலையில் வைஷ்ணவி திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். அதனைத் தொடர்ந்து பேசிய அவர், 'நான் வைஷ்ணவி கவுண்டம்பாளையம் பகுதியில் இருந்து த.வெ.கவில் ஒரு வருட காலமாக பயணம் செய்து கொண்டிருந்தேன். த.வெ.கவை பொறுத்தவரை யூத் அண்ட் பாலிடிக்ஸ் ப்ரோமோட் பண்ணுவார்கள் என்பதால்தான் என்னைப் போன்ற இளம்பெண்களும், இளைஞர்களும் சேர்ந்தோம். ஆனால் எங்களுக்கு அதிருப்திதான் மிச்சம். இன்றைய தினம் திமுகவில் இணைந்து இருக்கிறேன். செந்தில் பாலாஜி தலைமையில் இணைந்திருக்கிறேன். த.வெ.கவை பொறுத்தவரை இன்னொரு பாஜக திரையாகும். இன்று முதல் திமுக வழியாக என்னுடைய மக்கள் பணி தொடரும்'' என்றார்.