Skip to main content

ஜூன் 9 தமிழகம் முழுவதும் போராட்டம் - இடதுசாரிக் கட்சிகள் அறிவிப்பு!

Published on 03/06/2020 | Edited on 03/06/2020

 

mutharasan - k. balakrishnan


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ) மாநிலச் செயலாளர் என்.கே.நடராஜன் ஆகியோர் கூட்டாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளனர். 
 


அதில், ''கரோனாவிற்கு  முன்பாகவே பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக சமூகத்தின் அனைத்துப் பகுதி மக்களும் மிகக் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள். இந்நிலையில் எந்தவித முன் தயாரிப்பும் இல்லாமல் நான்கு மணி நேர அவகாசத்தில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதனால் அனைத்துப் பகுதி மக்களும் மிகக் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். பிரதமரும் மத்திய அரசும் படாடோபமான வார்த்தைகளைத் தவிர உண்மையில் மக்களுக்குத் தேவையான நிவாரணம் அளிக்கும் திட்டங்கள் எதையும் அறிவிக்கவில்லை. எனவே, இடதுசாரிக் கட்சிகள் கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து இயக்கங்களை நடத்த வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு குடும்பத்திற்கும் மத்திய அரசு 7,500 ரூபாய், மாநில அரசு 5,000 ரூபாயும் வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

பொது மக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படுவது முறைப்படுத்தப்பட வேண்டும். அனைத்துப் பொருள்களும் அவர்களுக்கு முறையாகக் கிடைப்பதை உத்தரவாதப்படுத்த வேண்டும். பல இடங்களில் ரேஷன் கடைகளில்  முறையான ரேசன் விநியோகம் இல்லை எனவும் ஊழல் நடைபெறுவதாகவும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. மாநில அரசு உடனடியாக அதைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மக்களுக்கான அனைத்து விதமான வருவாய் வாய்ப்புகளும் அடைக்கப்பட்டுள்ள நிலையில் கரோனா  தொற்று பேரிடர் என்று அரசு அறிவித்துள்ள நிலையில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தின் படி கிராமப்புறத்தில் உள்ள அனைத்து அட்டைதாரர்களுக்கும் 200 நாள் வேலை வாய்ப்பை உத்தரவாதப்படுத்த வேண்டும். இதைப்போன்று பேரூராட்சி பகுதிகளுக்கும் இந்தத் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும்.

இரண்டரை மாதங்களுக்கு மேல் அனைத்தும் முடங்கியுள்ள நிலையில் விவசாயிகள் பலன் பெறும் வகையில் அவர்களுக்கான திட்டங்களை அறிவிக்க வேண்டும். ஊரடங்கால் ஏற்பட்ட சாகுபடி இழப்பிற்கு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும்.
 

 

 


சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்புரிவோர் மிகக் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில் மத்திய அரசின் அறிவிப்பானது உடனடியாக இந்தப் பிரச்சினையிலிருந்து அவர்கள் மீண்டு வருவதற்கான எந்த உருப்படியான திட்டத்தையும் முன்வைக்கவில்லை. எனவே அவர்கள் உடனடியாக தொழில் துவங்கவும், தங்களது ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கவும் எந்தவித நிபந்தனையும் இன்றி ரூபாய் 10 லட்சம் கடன் வழங்க வேண்டும். பல்வேறு பகுதியினரும் வங்கிகளிலும், தனியார் நிறுவனங்களிலும் வாங்கியுள்ள கடன்களுக்கு வட்டியை அந்நிறுவனங்கள் கட்டாயமாக வசூலித்துக் கொண்டிருக்கின்றன. வேறு பலருக்கு வட்டி தள்ளி வைக்கப்பட்டுள்ளதே தவிர தள்ளுபடி செய்யப்படவில்லை. 6 மாதங்களுக்குப் பிறகு தள்ளி வைக்கப்பட்ட வட்டியையும் சேர்த்துக் கட்டுவது மிகப்பெரும் சுமையாகவும் இயலாத காரியமாகவும் இருக்கும். எனவே, கடனுக்கான வட்டியை 6 மாத காலத்திற்கு முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும்.

கரோனாவை எதிர்த்த போராட்டத்தில் அனைவரும் ஒன்றிணைந்து நிற்கும் நிலையில் மத்திய அரசு வஞ்சகமாக மின்சாரத்தைத் தனியாருக்கு அள்ளிக் கொடுக்கவும் மாநில அரசுகளுக்கு மின்துறை மீதுள்ள அதிகாரத்தைப் பறிக்கும் வகையிலும், விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரங்கள் உள்ளிட்ட அனைத்து மானியங்களையும் ரத்து செய்யும் வகையிலும் மின்சார சட்டத்தில் திருத்தங்கள் செய்திருப்பதை உடனடியாகக் கைவிட வேண்டும்.

இடம்பெயர் தொழிலாளர்களுக்கு தங்கள் சொந்த மாநிலங்களுக்குச் செல்வதற்கு உரிய ஏற்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் செய்திட வேண்டும். அதுவரை அவர்களுக்கு உணவு, தங்குமிடம் உள்ளிட்ட வசதிகளை அரசு உத்தரவாதப்படுத்திட வேண்டும்.

மருத்துவ இளங்கலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பில் மத்திய அரசு தொகுப்பில் தமிழகத்தின் இடஒதுக்கீட்டு உரிமையை மத்திய அரசு உத்தரவாதப்படுத்த வேண்டும். மாநில அரசு இடஒதுக்கீட்டு உரிமையைப் பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

கரோனா தொற்று பரவல் சென்னை உட்பட பல இடங்களில் அதிகரித்திருக்கும் நிலையில் பரிசோதனைகளை அதிகப்படுத்தவும், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மருத்துவமனை மூலமாக சிகிச்சை வழங்க வலியுறுத்துவதோடு அவர்களது உடனடி தொடர்பாளர்களையும் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.

மத்திய அரசு மாநிலங்களைத் தவிக்க விட்டுவிட்டு எந்தவித உதவியும் செய்ய மறுத்து வருகிறது. இந்தப் போக்கைக் கைவிட்டுவிட்டு உடனடியாக மாநில அரசுகளுக்குத் தேவையான நிதி உதவிகளை வழங்குவதற்கும் மாநில அரசுகள் கோரியுள்ள கடன் வாங்கும் வசதியை நிபந்தனைகள் ஏதுமின்றி வழங்கிடவும் வலியுறுத்துகிறோம்.
 

http://onelink.to/nknapp


இவற்றை வலியுறுத்தி, ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று ஊரடங்கு விதிகளுக்கு உட்பட்டு, ஆனால் அதே சமயத்தில் இடதுசாரிக் கட்சிகளின் உறுப்பினர்கள் உள்ள அனைத்து இடங்களிலும் கூடுதலான இடங்களில் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்த வேண்டும் என்றும் காலை 10 மணி தொடங்கி பத்தரை மணி முதல் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம். அனைத்து இடதுசாரிக் கட்சிகளின் தோழர்களும் இந்த இயக்கத்தில் கலந்து கொண்டு இப்போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்'' எனக் கூறியுள்ளனர். 
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மோடியின் நாய்க்குட்டிபோல் அமலாக்கத்துறை செயல்படுகிறது” - முத்தரசன்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Mutharasan criticism of BJP

புவனகிரி பேருந்து நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் இரா.முத்தரசன் சிதம்பரம் நாடளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தொல்.திருமாவளவனுக்கு ஆதரவு திரட்டி பானைச் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். 

அப்போது பேசிய அவர், “அமலாக்கத்துறை மோடியின் நாய்க்குட்டி போல செயல்படுகிறது. காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு அபராதம் விதித்துள்ளனர். சம்பந்தபட்ட துறை அதிகாரிகளை மோடி, அமித்ஷா ஆட்டி படைக்கிறார்கள். மோடி, தேர்தலுக்குப் பிறகு திராவிட முன்னேற்ற கழகம் இருக்காது என கூறுகிறார். உத்திர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை அழித்து விடுங்கள் என கூறுகிறார். இதற்கு அர்த்தம் என்னவென்றால் ஒரே நாடு ஒரே தேர்தல் கொண்டு வந்து பாரதிய ஜனதா கட்சியை மட்டும் வைத்துக்கொண்டு சர்வாதிகாரி போல் செயல்படுவதற்காக அனைத்து கட்சிகளையும் ஒழிக்க திட்டமிட்டுள்ளார்.

மோடியின் தேர்தல் அறிக்கையில் சொன்னதை எதையுமே செய்யவில்லை. விவசாயிகளுக்கு ஆதார விலை, சாமிநாதன் கமிஷன் பரிந்துரை அமல்படுத்தவில்லை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. தற்போது கச்சத்தீவைப் பற்றி பேசுகிறார். கச்சத்தீவை கடந்த 10 ஆண்டுகளில் மீட்பதற்கான மோடி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுவரை அவர் யாருக்கு பேன் பார்த்துக் கொண்டு இருந்தார்.

மாநில உரிமைகள் பறிக்கப்படுகிறது. ஆளுநர் போட்டி அரசாங்கம் நடத்துகிறார். இது ஜனநாயகத்திற்கு விரோதமானது. இதனை திமுக, கம்யூனிஸ்ட் பிரச்சினையாக பார்க்காமல் பொது பிரச்சினையாக பார்க்க வேண்டும்.  மோடியிடம் சமூக நீதியை எதிர்பார்க்க முடியாது. அப்படி சமூக நீதி அவர்களுக்கு இருந்தால், இட ஒதுக்கீட்டை அமல்படுத்துகிறேன் என கூறியதால் வி.பி.சிங் ஆட்சியை கவிழ்த்திருக்கமாட்டார்கள்.

பாஜக பத்தாண்டுகளில் செய்த தவறு கொஞ்ச நஞ்சமல்ல. சிறுபான்மை மக்களுக்கு எதிராக, சிறு குறு தொழில் நடத்துபவர்களுக்கு எதிராக, விவசாயிகளுக்கு எதிராக 3 சட்டங்கள் நிறைவேற்றினார்கள். தொழிலாளர்களுக்கு எதிராக சட்டங்களை கொண்டு வந்தார்கள்.

இதற்கு அதிமுக ஆதரவளித்தது. தற்போது ஜனநாயகத்தை காப்போம் என  ஏமாற்று வேலை செய்கிறது. சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனுக்கு பானைச் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார். இவருடன் கட்சியின் மாநில கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் மணிவாசகம்,  மாவட்டச் செயலாளர் துரை, மாவட்ட துணைச் செயலாளர் சேகர், வட்டச் செயலாளர் தமிமுன் அன்சாரி உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.

Next Story

“இந்திய அளவில் சமூக நீதி காப்பாற்றப்பட வேண்டும்” - பாஜகவை விளாசிய து.ராஜா

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Cpi National Secretary D. Raja has severely criticized the BJP

தமிழகத்திற்கு பிரதமர் மோடி அடிக்கடி வருவதற்கு வெட்கப்பட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் து.ராஜா கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்தியா கூட்டணி சார்பில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் திருமாவளவனுக்கு வாக்கு சேகரித்தார். அப்போது  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த து.ராஜா, “அகில இந்திய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக இது மாறி இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் பாஜக நாசகார செயலில் ஈடுபட்டு வருவதால் இந்தியா ஒரு ஜனநாயக குடியரசாக நீடிக்குமா என்ற கேள்வி எழுகிறது. இந்தியா ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசாக, மக்கள் நலன் காத்திட, மாநில உரிமைகளை மதித்து செயல்படுகிற ஒன்றிய அரசாக இந்தியா தொடர்ந்து நீடிக்குமா? என்ற கேள்வியும் ஏற்பட்டு இருக்கிறது. அதனால் தான் இந்தத் தேர்தலை எல்லோருமே முக்கியமான தேர்தலாக கருதுகிறோம்.

பாஜகவை அதிகாரத்தில் இருந்து அகற்ற வேண்டும். மதவெறி பாசிசத்தை இந்தியாவில் நிலை நிறுத்த வேண்டும் எனவும், மதச்சார்பற்ற நாடு என்ற நிலையை மாற்றி மதவாத நாடாக்க முயன்று வருகிறது.  சட்ட நெறிகளை எல்லாம் அழித்து ஒழித்து விட்டு ஏற்றத்தாழ்வுகளை அப்படியே கட்டி காப்பாற்ற வேண்டும். ஆர்எஸ்எஸ் அஜண்டாவை நிறைவேற்றுகிற ஒரு கட்சியாக தான் பாஜக செயல்படுகிறது. இதற்கு பிரதமராக மோடி செயல்படுகிறார்

மோடி தமிழ்நாட்டுக்கு தற்போது அடிக்கடி வருகிறார். அவர் பிரதமர் என்ற முறையில் தேர்தல் காலத்தில் மக்களின் வாக்குகளைப் பெற வருவதற்கு வெட்கப்பட வேண்டும்.  தமிழ்நாடு பல பேரிடர்களை சந்தித்தபோதெல்லாம் மோடி வரவில்லை. தமிழ்நாட்டின் மீது அக்கறை இல்லை, நிவாரண நிதி கூட கொடுக்கவில்லை.

இந்தியாவில் முன்பிருந்ததை  விட அந்நிய கடன் அதிகரித்துள்ளது. இது பற்றி மோடி பொது வெளியில் விவாதிக்க தயாரா?  மோடி ஆட்சியில் அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் வளர்ச்சி பெற்று இருக்கிறார்கள். மக்களுக்கு  வளர்ச்சி இல்லை.  மோடியின் அரசு மக்கள் விரோத அரசாக நாட்டு நலனில் அக்கறை இல்லாத ஒரு அரசாக, பெரு முதலாளிகளின் எடுபிடி அரசாக மாறிவிட்டது.  மதச்சார்பின்மையை நிலை நாட்ட வேண்டும் என்பதற்காக இந்தியா கூட்டணியில் இருக்கிற கட்சிகள் தொடர்ந்து போராடுகிறோம். இந்தத் தேர்தல் களத்தில் மக்களிடம் வாக்கு கேட்கின்றோம்.

பாட்டாளி மக்கள் கட்சி பாஜகவோடு  அணி சேர்ந்து இருப்பது பெரிய துரோகம். பாட்டாளிகள் என்று சொல்லிக்கொண்டு பாஜகவோடு சேர்வது எவ்வளவு பெரிய கொள்கை மோசடி, துரோகம் என்பதை இன்றைக்கு மக்கள் கேட்கிறார்கள்.  அதேபோல் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இருக்கிற அதிமுக தமிழர்களின் உரிமைகளை மீட்போம் என்கிறார்கள். தமிழர்களின் உரிமைகள் பறிக்கப்பட்ட போது இவர்கள் என்ன செய்து கொண்டு இருந்தார்கள்? மோடியை ஆட்சியில் இருந்து அகற்றவேண்டும் என்று எடப்பாடி பேசுவாரா?

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இந்தியாவை காத்திட, பாசிசத்தை வீழ்த்திட  ஸ்டாலின் அழைக்கிறேன் என்று குரல் கொடுத்து இருக்கிறார். அது அவருடைய குரல் மட்டுமல்ல,  தமிழ்நாடும் இந்தியாவும் ஒன்று பட்டு முன்னேற வேண்டும் என்று விரும்புகிற எல்லோரும் எழுப்புகிற குரல்.  இந்தியாவைக் காத்திட பாசிசத்தை வீழ்த்திட நாம் ஒன்றுபட்டு குரல் கொடுக்க வேண்டும்.  ஒன்றுபட்டு போராட வேண்டும். இந்தப் பின்னணியில் தான் இந்தத் தேர்தல் நடைபெறுகிறது.

இந்திய அளவில் சமூக நீதி காப்பாற்றப்பட வேண்டும், ஜாதியை உடைத்து தகர்த்தெறிய வேண்டும், எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று  போராடுகிற முன் களப்போராளியாக தொல்.திருமாவளவன் இருக்கிறார். எனவே அவருக்கு சிதம்பரம் பாராளுமன்றத் தொகுதியில் பானை சின்னத்தில் வாக்களிக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்” என்றார்.

இவருடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருப்போரூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி, சிபிஐ மாநில கட்டுப்பாட்டுக் குழு மணிவாசகம், மாநில நிர்வாகக் குழு மருத்துவர் ரவீந்திரநாத், மாநிலக்குழு மருத்துவர் சாந்தி, மாவட்ட செயலாளர் துரை, மாவட்ட துணைச் செயலாளர் வி.எம் சேகர், வட்டச் செயலாளர் தமீம் முன் அன்சாரி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.