நீதிமன்ற வளாகத்தில் நீதிபதிக்கு கத்தி குத்து - சேலத்தில் பரபரப்பு  

Judge stabbed in court premises Salem

சேலத்தில் குற்றவியல் நடுவர்மன்ற நீதிபதியை கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலத்தில் 4ஆவது குற்றவியல் நடுவர்மன்ற நீதிபதியாக பொன்பாண்டியன் பதவி வகிக்கிறார். இன்று காலை வழக்கம்போல வழக்குகளை விசாரிப்பதற்காக சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு பொன்பாண்டியன் வந்திருக்கிறார். அப்போது அங்கிருந்த உதவியாளர் பிரகாஷ் என்பவர் நீதிபதி பொன்பாண்டியனை கத்தியால் குத்த முயற்சித்துள்ளார். அவர் உடனடியாக சுதாரித்தும்கூட, பொன்பாண்டியனின் உடலில் லேசான கத்தி குத்து விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, நீதிமன்ற வளாகத்தில் இருந்த வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள், பிரகாஷை சுற்றிவளைத்துள்ளனர்.

தற்போது நீதிபதி பொன்பாண்டியன் சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ள நிலையில், பிரகாஷ் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், பணி மாறுதலால் தனக்கு மன உளைச்சல் ஏற்பட்டதாகவும், எனவே அதற்கு காரணமான நீதிபதியை பழிவாங்க வேண்டும் என்று முடிவெடுத்து பொன்பாண்டியனை கத்தியால் குத்த முயற்சித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

Salem
இதையும் படியுங்கள்
Subscribe