/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kc-veeramani-admk-art_1.jpg)
கடந்த அதிமுக ஆட்சியின் போது வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சராக கே.சி. வீரமணி பதவி வகித்து வந்தார். இவர் கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டார். இந்த தேர்தலில் கே.சி. வீரமணி, 1,091 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். இந்த தேர்தலின்போது தாக்கல் செய்த வேட்புமனுவிலும், பிரமாண பத்திரத்திலும் தவறான தகவல்களைத் தெரிவித்ததாக கே.சி. வீரமணிக்கு எதிராகக் குற்றம் சாட்டி, இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி ராமமூர்த்தி என்பவர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது. அதில், “கே.சி. வீரமணிக்கு எதிராக, மனுதாரர் அளித்த புகாரின் பேரில் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தது. இந்த உத்தரவையடுத்து கே.சி. வீரமணி தாக்கல் செய்த வேட்புமனு, பிரமாண பத்திரம் மற்றும் வருமான வரி கணக்குகள் ஆகியவற்றைத் தேர்தல் ஆணையம் ஆய்வு செய்தது. இந்த ஆய்வில் கே.சி. வீரமணி, தனது பிரமாண பத்திரத்தில் ஏராளமான சொத்துகள், பணப் பரிவர்த்தனைகளை மறைத்திருப்பது தெரியவந்தது.
அதோடு வருமான வரி கணக்கில் தாக்கல் செய்யப்பட்டிருந்த கணக்கில் குறிப்பிட்டிருந்த வருமானமும், தேர்தல் பிரமாண பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருந்த வருமானமும் தொடர்பில்லாமல் முரண்பாடாக இருப்பது கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஜோலார்பேட்டை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சார்பில், திருப்பத்தூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் எண் 1இல் கே.சி. வீரமணி மீது வழக்கு தொடரப்பட்டது. அதாவது திட்டமிட்டு பொய்யான பிரமாண பத்திரத்தைத் தாக்கல் செய்தல், வேண்டுமென்றே சொத்து விவரங்களை மறைத்துக் காட்டியது போன்ற காரணங்களுக்காக மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 125 ஏ என்ற பிரிவின் கீழ் வழக்கு தொடரப்பட்டது.
இத்தகைய சூழலில் தான் திருப்பத்தூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு கடந்த பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி (12.02.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது கே.சி. வீரமணி நீதிமன்றத்தில் ஆஜரானர்.அதே சமயம் கே.சி. வீரமணி சார்பில் வழக்கறிஞர்கள் வாதிடுகையில், “காலதாமதமாக இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பிர்மானபத்திரம் தாக்கல் செய்யப்படும் போதே இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டிருக்க வேண்டும். ஆனால் 3 ஆண்டுகள் கழித்து காலதாமதமாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும்” என வாதிட்டனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/judgement-art_63.jpg)
அதனைத் தொடர்ந்து அரசு தரப்பு வழக்கறிஞர்கள் வாதிடுகையில், “பிரமான பத்திரம் தாக்கல் செய்தது முற்றிலும் தவறானது. அரசுக்கும், தேர்தல் ஆணையத்திற்கும் முறைகேடாக பிரமான பத்திரம் தாக்கல் செய்துள்ளார்” எனத் தெரிவித்தனர். இந்நிலையில் இந்த வழக்கு இன்று (19.03.2025) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி மகாலட்சுமி,” இந்த வழக்கை நீதிமன்றம் ஏற்று நடத்துகிறது. எனவே இந்த வழக்கில் கே.சி. வீரமணி வரும் ஏப்ரல் மாதம் 01ஆம் தேதி (01.04.2025) ஆஜராக வேண்டும்” என உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கில் கே.சி. வீரமணி மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 125 ஏ என்ற பிரிவின் கீழ் நாட்டிலேயே முதல்முறையாக கே.சி.வீரமணி மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)