Judge ordered Devanathan to be jailed

Advertisment

இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சிவகங்கை நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க. சின்னத்தில் போட்டியிட்டவர் தேவநாதன் யாதவ். இவர் சென்னை மயிலாப்பூர் தெற்கு மாடவீதி தி மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி லிட், நிதி நிறுவனத்தின் இயக்குநராகப் பதவி வகித்து வருகிறார். இத்தகைய சூழலில் தான் இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த 144 முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ. 24 கோடியே 50 லட்சம் மோசடி செய்ததாக தேவநாதன், குணசீலன், மகிமைநாதன் உள்ளிட்ட 3 பேரைப் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கடந்த ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி (13.08.2024) அதிரடியாகக் கைது செய்தனர்.

அதனைத் தொடர்ந்து தேவநாதன் உள்ளிட்ட மூவரும் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள முதலீட்டாளர்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் பொறுப்பு நீதிபதி மலர் வேலன்டீனா அமர்வில் கடந்த மாதம் 14ஆம் தேதி (14.08.2024) ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அவர்களுக்கு ஆகஸ்ட் 28ஆம் தேதி (28.08.2024) வரை என 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்று பேருக்குக் காவல் கேட்டுத் தாக்கல் செய்த மனு கடந்த 23ஆம் தேதி (23.08.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “இந்த வழக்கின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஆகஸ்ட் 28ஆம் தேதி பிறப்பிக்கப்படும்” என உத்தரவிட்டிருந்தார்.

Judge ordered Devanathan to be jailed

Advertisment

இதனையடுத்து தேவநாதனை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கப் பொருளாதார குற்றப்பிரிவுக்குச் சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. மேலும் செப்டம்பர் 3ஆம் தேதி மாலை 4 மணிக்கு மீண்டும் அவரை ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதனின் ஜாமின் மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதோடு கடந்த 7 நாட்களாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தேவநாதனை சம்பந்தப்பட்ட நிதி நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்கள்.

இந்நிலையில் தேவநாதன் உட்பட 3 பேரின் போலீஸ் காவல் இன்றுடன் (03.09.2024) முடிவடைந்த நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதனையடுத்து தேவநாதன், குணசீலன், மகிமைநாதன் உள்ளிட்ட மூன்று பேரையும் செப்டம்பர் 17ஆம் தேதி வரை என 14 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதன் மூலம் 3 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட உள்ளனர்.