
கோவை மாவட்டம் புரவிபாளையம் கிராமத்தில் உள்ள குவாரியில் இருந்து சட்டவிரோதமாக கனிம வளங்களை எடுத்ததாக அதன் உரிமையாளர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், உரிமையாளருக்கு ரூ.32.29 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பு வந்தது. அனைத்து தரப்பு வாதங்களைக் கேட்டு விசாரணை நடத்திய நீதிபதி கூறியதாவது, ‘தீராத பேராசைக்காரர்களான குவாரி உரிமையாளர்கள் பூமித்தாயின் மார்பை அறுத்து ரத்தத்தை குடிக்கின்றார்கள். பொதுநல விசாரணையின் போது குவாரியை மூடிவிட்டதாக அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்துவிட்டு, மறுபுறம் குவாரியை செயல்பட அனுமதிக்கிறார்கள். இதன் மூலம், உயர் நீதிமன்றத்தை அதிகாரிகள் ஏமாற்றுகிறார்கள்’ என்று வேதனை தெரிவித்தார்.
சட்டப்படி ஒட்டுமொத்த அபராத தொகையையும் மனுதாரரிடம் இருந்து அரசு வசூலிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி பரத சக்கரவர்த்தி, குவாரி மோசடியில் கள அதிகாரிகள் முதல் உயர் அதிகாரிகள் வரை என்ன பங்கு உள்ளது? என்பது குறித்து லஞ்ச ஒழிப்பு காவல் துறை மூலம் தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும் என்று ஆணை பிறப்பித்தார். மேலும், குற்றத்திற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது குற்றவியல் சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.