Skip to main content

திமுக எம்.எல்.ஏ. நடத்திய வேலைவாய்ப்பு முகாம்!

Published on 25/10/2020 | Edited on 26/10/2020

 

job fair kallakurichi district, rishivandiyam dmk mla

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்.எல்.ஏ.வும் கட்சியின் தெற்கு மாவட்ட செயலாருமான வசந்தன் என்கிற கார்த்திகேயன், கட்சியின் நிர்வாகிகளுடன் மிகவும் நெருங்கி பழக கூடியவர். அதேபோல் தொகுதி மக்களுக்கும் நெருக்கமாவும், அவர்களுக்கு தேவையான உதவிகளை தன்னால் இயன்றவரை செய்து வருகிறார்.

 

அதன் தொடர்ச்சியாக, கடந்த 23- ஆம் தேதி ரிஷிவந்தியம் தொகுதியில் உள்ள அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் வேலைவாய்ப்பு முகாம் ஒன்றை நடத்தினார். இந்த முகாமில் ஹோண்டா, நிப்பான் பெயிண்ட், பட்டர்பிளை உள்ளிட்ட 14 நிறுவனங்கள் கலந்துக் கொண்டனர். இந்த வேலை வாய்ப்பு முகாமில் பட்டப்படிப்பு முடித்தவர்கள், தொழில்நுட்பக் கல்வி படித்தவர்கள் என 2,500-க்கும் அதிகமானோர் கலந்துக்கொண்டனர்.

 

இதில் நிறுவனங்கள் நடத்திய நேர்முகத் தேர்வில் 500-க்கும் மேற்பட்டவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

 

வேலை வாய்ப்பு முகாமில் நிறுவனங்கள் மூலம் வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். மேலும், அப்பகுதி மக்களும் எம்.எல்.ஏ.வுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ளக்குறிச்சி, விழுப்புரம் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024

 

கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளர் மலையரசன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். திமுக கூட்டணி கட்சிகள், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெய்கணேஷ், சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம், சிபிஐ, சிபிஎம், முஸ்லீம் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் வந்தனர். 

அதேபோல் அதிமுக மாவட்டச் செயலாளரும் வேட்பாளருமான குமரகுரு கூட்டணி கட்சியான தேமுதிக நிர்வாகிகளுடன் சென்று தேர்தல் அதிகாரி ஷரவண்குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். திமுக, அதிமுக கட்சி வேட்பாளர்கள் ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்ததால் இரு கட்சி மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்கள் கூட்டம் கள்ளக்குறிச்சி நகரில் நிரம்பி வழிந்தது.

விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் துரை. ரவிக்குமார் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவரும் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலருமான பழனியிடம் வழங்கினார். ரவிக்குமாருடன் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, விசிக பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமமூர்த்தி, காங்கிரஸ் கட்சியின் குலாம் மொய்தீன் உட்பட கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர். 

அதேபோல் பா.ம.க. வேட்பாளர் முரளி சங்கர் பாமக மற்றும் பிஜேபி கட்சி நிர்வாகிகளுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். இவரைத் தொடர்ந்து அதிமுக சார்பில் போட்டியிடும் மாவட்ட மாணவர் அணி செயலாளர் காந்தலவாடி பாக்யராஜ், அதிமுக மாவட்டச் செயலாளர் சண்முகம், தேமுதிக மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்டோருடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். 

Next Story

ஏமாற்றிய வடமாநில இளைஞர்; தர்ம அடி கொடுத்த பொது மக்கள்

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
Two people were arrested for deceiving people by claiming were applying jewelry polish

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள நயினார்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு வாலிபர்கள் பழைய வெள்ளி, தங்கம், கண்ணாடி பொருட்கள், ஆகியவற்றிற்கு பாலிஷ் போட்டு தருவதாக கூறி கிராம மக்களை நம்ப வைத்துள்ளனர். அப்போது ஒரிஜினல் தங்க நகைகள் உள்ளிட்ட பொருட்களை பொதுமக்களிடம் வாங்கிய அந்த பீகார் இளைஞர்கள் பாலிஷ் போட்டு கொடுத்துள்ளனர்.

இதை பயன்படுத்திக் கொண்டு அந்த பீகார் இளைஞர்கள் ஒரிஜினல் நகைகளை பாலிஷ் போடுவதாக வாங்கிக் மறைத்து வைத்துக்கொண்டு அதற்கு பதிலாக போலியான நகை மற்றும் பொருட்களை திருப்பிக் கொடுத்துள்ளனர். இந்த விவகாரம் ஊர்மக்களுக்கு தெரியவர இருவரையும் பிடித்து தர்ம அடிகொடுத்து நயினார்பாளையம் வி.ஏ.ஓவுக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த வி.ஏ.ஓ ரஞ்சித் குமார் பீகார் இளைஞர்களிடம் விசாரணை நடத்தினார். 

விசாரணையில், பீகார் மாநிலத்தை சேர்ந்த பப்புகுமார்(31), அமர குமார் யாதவ்(34) இருவரும் தான் என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து பாலிஷ் போட வைத்திருந்த உபகரண பொருட்களுடன் இருவரையும் கீழ்குப்பம் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று ஒப்படைத்தனர். பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.