Skip to main content

சேலத்தில் நகை, பணம் திருட்டு; வடிவேலு பட பாணியில் தப்பிய கும்பல்!      

Published on 02/09/2023 | Edited on 02/09/2023

 

Jewelry stolen from a locked house in Salem

 

சேலத்தில், கட்டட ஒப்பந்ததாரர் வீட்டில் மர்ம நபர்கள் நகை, பணம் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம் சின்ன கொல்லப்பட்டி ஜிவிகே நகரைச் சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம் (67). கட்டட ஒப்பந்ததாரர். இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனிக்குடித்தனம் நடத்தி வருகின்றனர். 

 

இதையடுத்து மீனாட்சி சுந்தரமும் அவருடைய மனைவியும் மட்டும் தனியாக வசிக்கின்றனர். ஆகஸ்ட் 29ம் தேதி, மீனாட்சி சுந்தரம், விழுப்புரம் மாவட்டம் திருவக்கரையில் உள்ள வக்கிரகாளியம்மன் கோயிலுக்கு மனைவியுடன் சென்றிருந்தார். சாமி தரிசனத்தை முடித்துவிட்டு, ஆக. 31ம் தேதி அதிகாலை சேலம் திரும்பினர். வீட்டிற்கு வந்து பார்த்தபோது வெளிக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இதைப் பார்த்து அதிர்ந்து போன தம்பதியினர், உள்ளே சென்று பார்த்தனர். அங்கு பீரோவில் வைக்கப்பட்டு இருந்த நகைகள் திருட்டுப் போயிருப்பது தெரிய வந்தது.     

 

இதுகுறித்து மீனாட்சி சுந்தரம், காவல்துறைக்குத் தகவல் அளித்தார். உதவி ஆணையர் லட்சுமி பிரியா, கன்னங்குறிச்சி காவல் ஆய்வாளர் சிவகாமி மற்றும் காவலர்கள் நிகழ்விடம் விரைந்தனர். வீட்டின் பீரோ, அறைக் கதவுகளின் சாவிகள் ஆங்காங்கே தொங்கவிடப்பட்டு இருந்ததால் மர்ம நபர்கள் பதற்றமின்றி பீரோவை திறந்தே நகைகளைக் களவாடிச் சென்றுள்ளனர். கட்டிலுக்கு அடியில் மரப்பெட்டியில் வைக்கப்பட்டு இருந்த 8 லட்சம் ரூபாய் மற்றும் டிவி அலமாரியில் வைக்கப்பட்டு இருந்த 1.50 லட்சம்  ரூபாய் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடியுள்ளனர். பீரோவில் இருந்த 10 பவுன் நகைகளையும் திருடியுள்ளனர்.    

 

காவல்துறையின் மோப்ப நாய், மோப்பம் பிடித்து விடக்கூடாது என்தற்காக மர்ம நபர்கள் வீட்டில் உள்ள கழிப்பறை உள்பட அனைத்து அறைகளிலும் மிளகாய்ப்பொடியைத் தூவிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். விரல் ரேகைப் பிரிவு நிபுணர்கள், நிகழ்விடத்தில் பதிவாகி இருந்த தடயங்களைப் பதிவு செய்தனர். காவல்துறை மோப்ப நாய், நிகழ்விடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடிச்சென்று மீண்டும் திரும்பி வந்துவிட்டது. மீனாட்சி சுந்தரத்தின் குடும்பத்தினரின் நடவடிக்கைகள் மற்றும் வீட்டில் அவர்கள் சாவி, பணம் வைக்கும் இடங்களை நன்கு நோட்டமிட்டவர்கள் தான் இந்த துணிகர திருட்டில் ஈடுபட்டிருக்க வேண்டும் எனச் சந்தேகிக்கப்படுகிறது. திருட்டு நடந்த பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகள் அடிப்படையிலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சின்ன கொல்லப்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஏஓ தற்கொலை; தலைமறைவான இருவருக்கு போலீசார் வலை

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 VAO case; Police net for two fugitives

திருப்பூரில் விஏஓ ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலை தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கருப்பசாமி. சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு கடந்த 22ஆம் தேதி சென்ற விஏஓ கருப்பசாமி, தென்னை மரத்திற்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் உடனடியாக கருப்பசாமியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியிலேயே விஏஓ கருப்பசாமி உயிரிழந்தார்.

இந்த நிலையில் விஏஓ கருப்பசாமி தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று உறவினர்களிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கான காரணம் குறித்தும் தன்னுடைய இந்த முடிவுக்கு மணியன் என்பவரும், கிராம நிர்வாக உதவியாளரான சித்ரா என்பவரும் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை சான்றாக வைத்த அவருடைய உறவினர்கள் சம்பந்தப்பட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். அதேபோல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக  40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கருப்புசாமி எழுதிவைத்து கையெழுத்திட்ட கடிதங்களையும் தற்கொலைக்கு முன்னதாக கருப்பசாமி எழுதிய கடிதம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்த போலீசார் அதை உறுதி செய்தனர். முன்னதாக சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்கொலைக்கு தூண்டுதல் என்ற வழக்கிற்கு கீழ் மாற்றப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் சித்ரா மற்றும் மணியன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், சித்ராவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து சித்ரா தலைமறைவானதால் அவருடைய வீட்டில் பணியிடை நீக்கத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தற்பொழுது விஏஓ தற்கொலை தொடர்பாக கிராம உதவியாளர் சித்ராவையும் மணியன் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

பெண் மீதான தாக்குதல் வீடியோ; இளைஞரை கைது செய்த போலீசார்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Video of assault on woman; The police arrested the youth

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமர வைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெண்ணை தாக்கிய ரோஷன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பெண் அவரது மனைவி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.