Skip to main content

கூடா நட்பு... வெளிநாட்டில் சம்பாதித்த நகை, பணத்தை இழந்த வாலிபர் தற்கொலை

Published on 10/02/2020 | Edited on 10/02/2020

 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ளது விநாயம் பாடி. இந்த ஊரைச் சேர்ந்த விஜயரங்கம் மகன் பெருமாள். 24 வயதான இவர் வேலை நிமித்தமாக வெளிநாடு சென்று திரும்பியுள்ளார். இந்த நிலையில் அதே ஊரில் உள்ள திருமலை மனைவி கன்னியம்மாள் என்பவருடன் நெருக்கமாக பழகி உள்ளார். இதை பயன்படுத்தி கொண்ட கன்னியம்மாள் 8.50 லட்சம் பணம், ஐந்து சவரன் நகை ஆகியவற்றை பெருமாளிடம் ஆசை வார்த்தை பேசி பெற்றுக்கொண்டுள்ளார்.

 

Jewelry



இந்த நிலையில் அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட பெருமாள் தனது பணம் நகையை திரும்ப தருமாறு கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இதனிடையே கன்னியம்மாள், பெருமாளை நயந்து பேசி நள்ளிரவில் சுடுகாட்டுக்கு அழைத்துச் சென்று அவருக்கு மொட்டையடித்து அவரை உட்கார வைத்து மாந்திரீகம் செய்துள்ளார்.
 

இதனால் பெருமாள் பயந்து மிரண்டுள்ளார். வீட்டுக்கு வந்த பெருமாள் தனது செல்போனில் அழுதுகொண்டே பேசி அதனை பதிவு செய்துள்ளார். அதில், ''என்னிடம் பணம், நகைகளை பறித்துக்கொண்ட கன்னியம்மாள் சுடுகாட்டில் என்னை வைத்து பூஜை போட்டதிலிருந்து எனக்கு உடல் முழுவதும் எரிகிறது. தூக்கம் வரவில்லை. உடல் உபாதை அதிகமாக உள்ளது. இதற்கு காரணம் கன்னியம்மாள் தான். எனக்கு பில்லி சூனியம் வைத்து, மாந்திரீகம் செய்துள்ளார். அதிலிருந்து எனக்கு வாழவே பிடிக்கவில்லை'' என தனது சகோதரி தேவி பெயரை குறிப்பிட்டு அவருக்கு பேசியுள்ளார்.


 

 

மேலும், ''கன்னியம்மாளோடு பழகிய எனக்கு பெரிய பெரிய கொடுமை செய்துள்ளார். அவரும், அவர் மகனும் சேர்ந்துதான் செய்துள்ளனர். அவர்கள் இருவரும் தான் என் சாவுக்கு காரணம். இனிமேல் எனக்கு வாழவே பிடிக்கவில்லை. எனவே தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன். நீ அம்மாவை நல்ல முறையில் பார்த்துக்கொள், அதேபோல் தம்பியும் நன்றாக பார்த்துக் கொள், இதை யாரிடமும் சொல்வதற்கு அவமானமாக உள்ளது. எனவே நான் தற்கொலை செய்து கொள்கிறேன்'' என்று வீடியோவில் பேசி தனது சகோதரி தேவிக்கு அனுப்பிவிட்டு பெருமாள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
 

இதையடுத்து காவல் நிலையத்தில், கன்னியம்மாள் அவரது மகன் சூர்யா ஆகியோர் மீது பெருமாள் சகோதரி தேவி புகார் அளித்துள்ளார். பெருமாளது உடலை போஸ்ட் மார்ட்டம் செய்ய போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர். அதேநேரத்தில் பெருமாள் தற்கொலைக்கு காரணமான கன்னியம்மாள் அவர் மகன் சூரியா ஆகியோரை ஏன் கைது செய்ய வில்லை என்பதை கண்டித்து பெருமாளின் உறவினர்கள் சாலை மறியல் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதையடுத்து சாலை மறியலை கைவிட்டனர். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

நூதன முறையில் திருடிய கொள்ளையர்கள்; கள்ளக்குறிச்சியில் துணிகரம்

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
Robbery with metal detector; Venture in Kalakurichi

கள்ளக்குறிச்சியில் வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் நூதன முறையில் எந்த பகுதியில் நகைகள் உள்ளது என கண்டறிந்து கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் உள்ள எஸ்.வி.பாளையம் பகுதியில் வசித்து வருபவர் அருள்ஜோதி. அரசு பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவரின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்களால் 67 சவரன் நகை மற்றும்  23 லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது.

இது குறித்து போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை செய்து வந்த நிலையில், வளவனூர் பகுதியைச் சேர்ந்த மாரி என்பவர் அவருடைய கூட்டாளிகளுடன் சேர்ந்து கொண்டு இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. உதயா மற்றும் மாரி ஆகிய இருவரை கைது செய்த போலீசார், உருக்கப்பட்ட நிலையில் வைக்கப்பட்டிருந்த கொள்ளை அடிக்கப்பட்ட 25 சவரன் தங்கத்தை கைப்பற்றினர். மேலும் 2 லட்சம் ரூபாயையும் பறிமுதல் செய்தனர்.

இந்த கொள்ளை வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் தங்க நகை எங்கே இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள மெட்டல் டிடெக்டரை பயன்படுத்தி இவர்கள் கொள்ளையடித்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Next Story

அடுத்தடுத்து மூன்று கடைகளில் கொள்ளை;போலீசார் விசாரணை

Published on 03/03/2024 | Edited on 03/03/2024
Robbery in three shops in succession; police investigation

ஈரோட்டில் மூன்று கடைகளில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு கொல்லம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜாபர். இவர் அந்த பகுதியில் துரித உணவு கடை வைத்திருந்தார். நேற்று இரவு 12 மணியளவில் வியாபாரம் முடிந்தவுடன் கடையை பூட்டிவிட்டு சென்று விட்டார். இன்று காலை கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது கல்லாப்பெட்டியில் சாவியை திறந்து அதில் இருந்த ரூ.3000 பணம் திருட்டுப் போய் இருப்பது தெரியவந்தது.

அதனருகே உள்ள மற்றொரு குளிர்பான கடையின் பூட்டை  உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் பணம் இல்லாததால் திரும்பிச் சென்று விட்டனர். குளிர்பானம் கடை அருகே ஊத்துக்குளி பகுதியைச் சேர்ந்த யுவராஜ் என்பவர் காய்கறி கடை நடத்தி வந்தார். நேற்றிரவு வழக்கம்போல் வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டிவிட்டு சென்றவர் இன்று காலை வந்து பார்த்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே கல்லாப்பெட்டியில் இருந்த ரூ. 26 ஆயிரம் ரொக்க பணம் திருட்டுப் போய் இருந்தது.

இது குறித்து சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர். அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.  ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து மூன்று கடைகளில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டி இருப்பது அந்த பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.