Skip to main content

நெல்லையை உலுக்கிய நகை கொள்ளை; நகைக்கடை அதிபர் மீது கொடூர தாக்குதல்

Published on 14/04/2022 | Edited on 14/04/2022

 

Jewelry flushing incident Nellai

 

நெல்லை மாவட்டத்தின் வீரவநல்லூரில் அலி ஜூவல்லர்ஸ் எனும் நகைக்கடை வைத்திருப்பவர்கள் மைதீன் பிச்சை(55)யும் அவரது சகோதரர் அலியாரும். இருவரும் 20 ஆண்டுகளாக மெயின் பஜாரில் நகைக்கடை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு சுமார் 8.30 மணியளவில் நகைக்கடையை வழக்கம்போல் பூட்டிவிட்டு மைதீன் பிச்சை நகைப்பையுடன் தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு போய்க்கொண்டிருந்தார். அப்போது மைதீன் பிச்சையை  வேவு பார்த்த கும்பல் ஒன்று டூவீலரில் அவரை பின்தொடர்ந்து சென்று திடீரென அரிவாளால் வெட்டியது. இதனால் மைதீன் பிச்சை நிலைகுலைந்து சரிந்தார். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் அவர் வைத்திருந்த நகைப் பையைப் பறித்துச் சென்றுள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார்  படுகாயத்துடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த மைதீன் பிச்சையை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

இதன் பின்னர்  மைதீன் பிச்சையிடம் போலீசார் நடத்திய விசாரணையில் நகைப் பையில் 5 கிலோ தங்க நகைகள் மற்றும் ரொக்கம் ரூ.75 ஆயிரம்  இருந்ததாகத் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து அலர்ட் ஆன போலீசார் மாவட்டம் முழுக்க உள்ள சோதனை சாவடிகளை உஷார் படுத்தியதுடன் வாகன சோதனையிலும் ஈடுபட்டனர்.  கொள்ளை போனது 5 கிலோ தங்க நகைகள் என்பதால் நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ் குமார் எஸ்.பி. சரவணன், ஏ.டி.எஸ்.பி. மாரிராஜன் உள்ளிட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணையைத் தீவிரப்படுத்தினர். கடை மற்றும் பிற பகுதிகளில் சோதனை செய்த போலீசார் அங்கிருந்த சி.சி.டிவி ஆய்வு செய்தனர். அதில்  கொள்ளையர்களில் ஒருவன் டூவீலரில் மைதீன் பிச்சையை பின்தொடர்ந்து வந்ததும் மற்ற மூன்று பேர் மைதீன் பிச்சையைத் தாக்கி நகைப் பையைப் பறிக்கப் பதுங்கியிருந்ததும் தெரியவந்தது. இதனடிப்படையில் எஸ்.பி. சரவணன்  கொள்ளைக் கும்பலைப் பிடிப்பதற்காக 6 தனிப்படைகளை அமைத்துள்ளார்.

 

திருடுபோன 5 கிலோ தங்க நகைகளின் மதிப்பு 2.51 கோடி என்கிறார்கள். தினமும் நகைக்கடையை பூட்டிவிட்டு நகை பையுடன் வீட்டிற்கு திரும்பும் மைதீன் பிச்சையை வேவு பார்த்து திட்டமிட்டு இச்சம்பவம் நடந்திருப்பதாக விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும், அண்மையில் அவரது கடைக்கு வந்து போனவர்களின் விவரங்களையும் சேகரித்து வருகின்றனர். இந்தக் கொள்ளைச் சம்பவம் நெல்லை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரம்; வெளியான பகீர் வாக்குமூலம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Rs 4 crore confiscation issue confession

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

மேலும் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு சம்மன் அனுப்ப காவல்துறை முடிவு செய்துள்ளது.

Next Story

அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு?

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Cuddalore Dt Kullanjavadi Near Ambedkar statue incident

அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச முயற்சித்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று அதிகாலை வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அபப்குதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.