Skip to main content

மனைவிபோல் வாழ்ந்து நூதன முறையில் நகை மற்றும் பணம் மோசடி! -மாநகர காவல் ஆணையருக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவு!

Published on 11/08/2020 | Edited on 11/08/2020
 Money

 

சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த சங்கையா என்பவர் மனைவியைப் பிரிந்து வாழ்கிறார். அவருக்கு, ஏற்கனவே திருமணமான மற்றொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும்,  சங்கையா வீட்டில் கணவன்-மனைவி போல் வாழ்ந்துள்ளனர். அந்தப் பெண்ணின் மீதான நம்பிக்கையில், வங்கிக் கணக்குகள், நகைகள் ஆகியவற்றை சங்கையா கொடுத்துள்ளார்.

 

ஒரு நாள்,  பணம் மற்றும்  நகை ஆகியவற்றை எடுத்துக்கொண்டு, சங்கையாவை ஏமாற்றிவிட்டு,  தன் கணவருடன் அந்த பெண் சென்றுவிட்டார். இதுபோல் நூதனமான முறையில் மோசடி செய்வதை வழக்கமாகக் கொண்ட அந்தப் பெண், தன்னையும் ஏமாற்றியதால், அந்தப் பெண் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, அரும்பாக்கம் காவல் நிலையத்திலும், அண்ணாநகர் துணை ஆணையரிடமும் சங்கையா புகார் அளித்துள்ளார்.

 

இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்காததால், அண்ணாநகர் காவல் நிலையம் முன் தீக்குளித்து, சங்கையா தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில், தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.

 

சங்கையா அளித்த புகார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, புகார் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என,  மூன்று வாரங்களில் அறிக்கை அளிக்க சென்னை மாநகர காவல் ஆணையருக்கு, மனித உரிமை ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ் உத்தரவிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 7 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்; சென்னையில் பரபரப்பு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Rs. 7 crore worth of gold seized; Sensation in Chennai
மாதிரிப்படம்

சென்னை விமான நிலையத்திற்கு இன்று (27.03.2024) துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் என்ற விமானம் ஒன்று வந்துள்ளது. இந்த விமானத்தில் வந்தவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது கேரள மாநிலம் கோட்டையம் பகுதியைச் சேர்ந்த 37 வயதான பெண் ஒருவர் தனது 14 வயது மகளுடன் வந்துள்ளார்.

இவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது ரூ. 7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் லண்டனில் இருந்து துபாய் வழியாக வந்த போது கடத்தல் தங்கத்தோடு சிக்கியது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து 37 வயதான அப்பெண்ணை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் நீதிமன்ற காவலில் அடைத்தனர். அண்மைக் காலத்தில் பயணி ஒருவரிடம் இருந்து 12 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டது இதுவே முதல்முறை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மேலும், ரூ.7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னை விமான நிலைய அதிகாரிகள் மற்றும் விமான பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

'எனக்கு என்ன ஆசையா இப்படி நடக்க வேண்டும் என்று...' - விமர்சனத்திற்குப் பதிலளித்த தமிழச்சி தங்கபாண்டியன்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Tamilachi Thangapandian responded to the criticism

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் திமுக சார்பில் தமிழச்சி தங்கபாண்டியனும், பாஜக சார்பில் தமிழிசை சௌந்தரராஜனும்,  நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்ச்செல்வி என்ற பேராசிரியரும், அதிமுக சார்பில் ஜெயவர்தனும் களத்தில் உள்ளனர். இந்த நிலையில், அண்மையாகவே கையில் ஸ்டிக் உடன் காலில் பேண்டேஜ் அணிந்தபடி தமிழச்சி தங்கபாண்டியன் தேர்தல் பரப்புரையில் கலந்து கொண்ட நிலையில், செய்தியாளர்கள் இது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பினர்.

சமூக வலைத்தளங்களில் நீங்கள் கையில் வாக்கிங் ஸ்டிக் உடன் வருவது குறித்து விமர்சனங்கள் வைக்கிறார்கள். இதற்கு உங்கள் கருத்து என்ன எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''என்ன விமர்சனம் வைக்கிறார்கள். ஸ்டிக்குடன் நடக்க வேண்டும் என எனக்கு என்ன ஆசையா? உண்மையிலேயே எனக்கு புரியவில்லை. ஸ்டிக்கோடு நடப்பதற்கு யாராவது ஆசைப்படுவாங்களா? இது மிக மிக முக்கியமான தருணம். இந்த நேரத்தில் நான் நடக்கக்கூடாது ஓட வேண்டும். அப்படிப்பட்ட நேரத்தில் யாராவது ஸ்டிக்குடன் நடக்க வேண்டும் என அவசியம் இருக்கா? எனக்கு மம்தா பானர்ஜி மீதும் அவருடைய கொள்கை மீதும் மிகப்பெரிய மரியாதை உண்டு. இந்த மாதிரியான விமர்சனங்கள் வைப்பவர்களுக்கு நீங்கள் தான் பதில் சொல்ல வேண்டும்'' என்றார்.