Money

Advertisment

சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த சங்கையா என்பவர் மனைவியைப் பிரிந்து வாழ்கிறார். அவருக்கு, ஏற்கனவே திருமணமான மற்றொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும், சங்கையா வீட்டில் கணவன்-மனைவி போல் வாழ்ந்துள்ளனர். அந்தப் பெண்ணின் மீதான நம்பிக்கையில், வங்கிக் கணக்குகள், நகைகள் ஆகியவற்றை சங்கையா கொடுத்துள்ளார்.

ஒரு நாள், பணம் மற்றும் நகை ஆகியவற்றை எடுத்துக்கொண்டு, சங்கையாவை ஏமாற்றிவிட்டு, தன் கணவருடன் அந்த பெண் சென்றுவிட்டார். இதுபோல் நூதனமான முறையில் மோசடி செய்வதை வழக்கமாகக் கொண்ட அந்தப் பெண், தன்னையும் ஏமாற்றியதால், அந்தப் பெண் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, அரும்பாக்கம் காவல் நிலையத்திலும், அண்ணாநகர் துணை ஆணையரிடமும் சங்கையா புகார் அளித்துள்ளார்.

இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்காததால், அண்ணாநகர் காவல் நிலையம் முன் தீக்குளித்து, சங்கையா தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில், தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.

Advertisment

சங்கையா அளித்த புகார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, புகார் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என, மூன்று வாரங்களில் அறிக்கை அளிக்க சென்னை மாநகர காவல் ஆணையருக்கு, மனித உரிமை ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ் உத்தரவிட்டுள்ளார்.