Skip to main content

நகைக்கடன், சிறுகடன் விதிகளை வங்கிகள் எளிமையாக்க வேண்டும்! ராமதாஸ் வலியுறுத்தல்

Published on 24/05/2020 | Edited on 24/05/2020
ramadoss



கடன் விதிகளை சற்று தளர்த்தி ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு வங்கிகள் அதிக அளவில் கடன் கொடுத்தால் அனைத்துத் தரப்பினரும் பயனடைவார்கள என்றும், நகைக்கடன், சிறுகடன் விதிகளை வங்கிகள் எளிமையாக்க வேண்டும் என்றும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊடங்கு விதிகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வரும் நிலையில், இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப நினைக்கும் ஏழை & நடுத்தர மக்களுக்கு பொருளாதார நெருக்கடி பெரும் சுமையாக உருவெடுத்துள்ளது. கடன் வாங்கியாவது நெருக்கடியை சமாளிக்கலாம் என்று நினைக்கும் மக்களுக்கு, அதற்கான வட்டி பெரும் தண்டனையாக அமைந்துள்ளது.
 


சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்கள் தவிர்த்து பிற மாவட்டங்களில் பெரும்பான்மையான ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டு விட்டன. ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டு விட்டாலும் கூட, ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு வாழ்வாதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை; அடுத்த சில வாரங்களுக்கு மக்களுக்கு வாழ்வாதாரங்கள் கிடைப்பதற்கான அறிகுறிகளும் தென்படவில்லை. முதற்கட்ட ஊரடங்கு நடைமுறை படுத்தப்பட்ட போது, அரிசி குடும்ப அட்டை வைத்துள்ள அனைத்து குடும்பங்களுக்கும் தலா ரூ.1000 நிதியுதவி வழங்கப்பட்டது. அதன்பின் அந்த குடும்பங்களுக்கு மே மாதத்தில் நியாயவிலைக் கடைகளில் உணவுப் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டன; ஜூன் மாதமும் இலவசமாக வழங்கப்படவுள்ளன. அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு இரண்டாவது முறையாக ரூ.1,000 உதவி வழங்கப்பட்ட போதிலும், அனைவருக்கும் அந்த உதவி கிடைக்கவில்லை. இதனால் வருவாய்க்கு வழி இல்லாத மக்கள் கடன் வாங்கித் தான் காலம் கழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது என்பதை எவரும் மறுக்க முடியாது.


மக்களுக்கு மிகவும் எளிமையாகக் கிடைக்கும் கடன் என்பது நகைக்கடன் தான். எந்த சிக்கலும் இல்லாமல் சில நிமிடங்களில் நகைகளை அடகு வைத்து பணம் ஈட்டி விட முடியும். ஆனால், தனியார் வட்டிக் கடைகளில் மிக அதிக வட்டி வசூலிக்கப்படுகிறது. ஒரு பவுன் தங்கத்திற்கு அதிகபட்சமாக ரூ.17,000 வரையில் கடன் வழங்கப்படும் நிலையில், அதற்காக ஆண்டுக்கு 24% முதல் 36% வரை  வட்டி வசூலிக்கப்படுகிறது. நகை இல்லாமல் தனிநபர் கடனாக ரூ.50,000 வரை வழங்கப்படுகிறது; அதற்காக அதிகபட்சமாக 48% வரை வட்டி வசூலிக்கப்படுகிறது. இது மிக அதிகமான வட்டி விகிதம் ஆகும். இவ்வளவு அதிக வட்டிக்கு கடன் வாங்கும் ஏழைகளால் கடன் சுமையிலிருந்து மீள முடியாது.
 

அதேநேரத்தில் பொதுத்துறை வங்கிகளில் தங்க நகைகளுக்கு அவற்றின் மதிப்பில் குறைந்தது 80% முதல் 90% வரை நகைக்கடன் வழங்கப்படுகிறது. அதன்படி ஒரு பவுன் தங்க நகைக்கு சராசரியாக ரூ.30,000 வரை கடன் கிடைக்கும். அதுமட்டுமின்றி, நகைக்கடனுக்கு ஆண்டுக்கு 4% முதல் 8% வரை மட்டுமே வட்டி வசூலிக்கப்படுகிறது. அதேபோல் வங்கிகளில் தனிநபர் கடனுக்கு 10.80% முதல் 13.00% வரை வட்டி வசூலிக்கப்படுகிறது. இது மிகக்குறைந்த வட்டியாகும்; மக்களுக்கு சுமையாக இருக்காது.
 

ஒருவர் தனியார் அடகுக்கடையில் ரூ.1 லட்சம் நகைக்கடன் பெற்றால், அதற்காக ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ.36,000 வரை வட்டி செலுத்த வேண்டியிருக்கும். ஆனால், பொதுத்துறை வங்கிகளில் அதிகபட்சமாக ரூ.8,000 செலுத்தினால் போதுமானது. ஆண்டுக்கு ரூ.28,000 சேமிக்கலாம். அதேபோல், ரூ.1 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் தனியாரிடம் ரூ.48 ஆயிரமும், வங்கிகளில் ரூ.13 ஆயிரமும் வட்டியாக செலுத்த வேண்டும். வங்கிகளில் கடன் பெற்றால் ஆண்டுக்கு ரூ.35,000 வரை சேமிக்க முடியும். இது தான் கடன்தாரர்களை கசக்கிப் பிழியாத கடனாகும்; இது தான் மக்களுக்கு உதவியாக இருக்கும்.

ஆனால், பொதுத்துறை வங்கிகளில் கடன் பெறுவது வானத்தை வில்லாக வளைப்பதற்கு ஒப்பானது ஆகும். பொதுத்துறை வங்கிகளில் கடன் பெறுவதற்கான நடைமுறைகள் மிகவும் கடுமையானவை ஆகும். அதன்காரணமாகவே பெரும்பான்மையான மக்கள் தனியார் அடகுக்கடைகளை தேடிச் சென்று  அதிக வட்டிக்கு கடன் வாங்கி மீள முடியாத கடன் சுமையில் சிக்கிக் கொள்கின்றனர். பொதுத்துறை  வங்கிகளில் கடன் பெறுவதற்கான நடைமுறையை எளிமையாக்குவதன் மூலம் இந்நிலையை மாற்றலாம்.
 

கொரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கின்றனர். அரசு சார்பில் பெரிய அளவில் நிதியுதவி வழங்க முடியாத சூழலில் மக்களுக்கு குறைந்த வட்டியில் கடனாவது கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மற்றொருபுறம் கடன் வாங்க ஆளில்லாத நிலையில் பொதுத்துறை வங்கிகள் தங்களிடம் இருந்த பணத்தில் ரூ.10 லட்சம் கோடியை ரிசர்வ் வங்கியில் வைப்பீடு செய்துள்ளன. இது வங்கிகளுக்கு இழப்பையே ஏற்படுத்தும். கடன் விதிகளை சற்று தளர்த்தி ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு வங்கிகள் அதிக அளவில் கடன் கொடுத்தால் அனைத்துத் தரப்பினரும் பயனடைவார்கள்.

 

ே்ி


 

பொதுத்துறை வங்கிகளில் நகைக்கடன் பெற விரும்புவோருக்கு வங்கிக் கணக்கு இல்லை என்றால் உடனடியாக புதியக் கணக்கு தொடங்கி, சில மணி நேரங்களில் நகைக்கடன் வழங்க வேண்டும். அதேபோல், வங்கிகளில் கணக்கு வைத்திருப்போருக்கு ஓராண்டில் திருப்பி செலுத்தும் வகையில்,  அதிகபட்சமாக ரூ.10,000 சிறு கடனை குறைந்த வட்டியில் வழங்க வேண்டும். இது ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு உதவியாக இருப்பது மட்டுமின்றி நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் பெரும் ஊக்குவிப்பாக அமையும் என்பதால் இதை மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் செயல்படுத்த வேண்டும். இவ்வாற கூறியுள்ளார். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

ஓடும் பேருந்தில் இருக்கையுடன் தூக்கி வீசப்பட்ட நடத்துநர்; அன்புமனி கண்டனம்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anbumani condemns conductor being thrown with his seat in   moving govt bus

ஓடும் பேருந்தில், நடத்துநர் இருக்கையுடன் தூக்கி வீசப்பட்டதற்கு பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி திருவரங்கத்தில் இருந்து கே.கே.நகருக்கு சென்று கொண்டிருந்த அரசு நகரப் பேருந்து, வளைவு ஒன்றில் திரும்பும் போது, நடத்துநர் அமர்ந்திருந்த இருக்கை கழன்று வெளியில் விழுந்துள்ளது. இருக்கையுடன் நடத்துநரும் வெளியில் தூக்கி வீசப் பட்டுள்ளார். நல்வாய்ப்பாக பேருந்துக்கு பின்னால் வேறு வாகனங்கள் வரவில்லை என்பதால், நடத்துனர்  லேசான காயங்களுடன் உயிர்த் தப்பியுள்ளார். காயமடைந்த ஓட்டுநர் விரைவில் நலம் பெற எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை அமைந்தகரை பகுதியில் கடந்த பிப்ரவரி  6-ஆம்  தேதி  மாநகரப் பேருந்தின் தளம் உடைந்து  ஏற்பட்ட ஓட்டை வழியாக பெண் பயணி ஒருவர் சாலையில் விழுந்து காயமடைந்தார்.  அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகும் முன்பாகவே  திருச்சியில்  பேருந்தின் இருக்கை கழன்று  நடத்துநர்  தூக்கி வீசப்பட்டுள்ளார்.  பேருந்தின் டயர் தனியாக கழன்று ஓடுவது, பேருந்தின் மேற்கூறை  தனியாக கழன்று காற்றில் பறப்பது போன்ற நிகழ்வுகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தினமும் 2 கோடி மக்கள் பயணிக்கும் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை  திமுக அரசு எவ்வளவு மோசமாக பராமரிக்கிறது என்பதற்கு இதை விட மோசமான எடுத்துக் காட்டு இருக்க முடியாது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்களில் உள்ள 20,926 பேருந்துகளில் 1500 பேருந்துகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன என்பதை  தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரே  ஒப்புக் கொண்டிருக்கிறார்.  15 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகளை இயக்குவதே சட்ட விரோதம் ஆகும். இதைத் தவிர 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  பேருந்துகள்  12 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன.  திமுக  ஆட்சிக்கு வந்த பிறகு விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் தான் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.

புதிய பேருந்துகள் வாங்கப்படாததால், காலாவதியான பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுவதும்,   அவற்றை பராமரிப்பதற்கும், உதிரி பாகங்கள் வாங்குவதற்கும் கூட போதிய நிதி ஒதுக்கப்படாததுதான்  இத்தகைய அவல நிலை  ஏற்படுவதற்கு காரணம் ஆகும்.  இத்தகைய அவல நிலைக்கு திமுக தலைமையிலான திராவிட மாடல் அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான மகிழுந்துகள் அவர்கள் விரும்பும் நேரத்தில் மாற்றப்படுகிறது. முதலமைச்சரின் வாகன அணிவகுப்பில் வரும் மகிழுந்துகள்  கருப்பு வண்ணத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக, ஏற்கெனவே வாங்கப்பட்டு சில மாதங்கள் மட்டுமே ஆன மகிழுந்துகள்  ஓரங்கட்டப்பட்டு, கோடிக்கணக்கில் செலவு செய்து 6 புதிய மகிழுந்துகள்  வாங்கப்படுகின்றன. ஆனால், பொதுமக்கள் பணம் கொடுத்து பயணம் செய்யும்  பேருந்துகள் மட்டும்  15 ஆண்டுகளைக் கடந்து இயக்கப்படுகின்றன. இது என்ன கொடுமை?

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு அவற்றிற்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கி இயக்கப்பட வேண்டும்.  பழைய பேருந்துகளைப் பராமரிக்கவும்,  உதிரி பாகங்கள் வாங்கவும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு  போதிய நிதி ஒதுக்கீடு  செய்ய வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

Next Story

“டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது” - ராமதாஸ்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
“Cancellation of TNPSC Group 2 Interview is welcome says Ramadoss

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது என்றும் நிலையான தேர்வு அட்டவணை, கூடுதல் சீர்திருத்தம் தேவை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குரூப் 2 பணிகளுக்கு இனி நேர்முகத்தேர்வுகள் நடத்தப்படாது என்பது உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது. தேர்வர்கள் நலன் கருதியும், தேர்வுகளை விரைவுபடுத்தவும் அறிவிக்கப்பட்டுள்ள இச்சீர்திருத்தங்கள் வரவேற்கத்தக்கவை.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை காலத்திற்கும், தேவைக்கும் ஏற்ற வகையில் மாற்ற வேண்டும்; அதற்காக பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. பா.ம.க. வலியுறுத்திய சில சீர்திருத்தங்களை தேர்வாணையம்   செயல்படுத்தியுள்ள போதிலும், தேர்வாணையத்தை நவீனப்படுத்துவதற்கு இவை மட்டும் போதுமானதல்ல.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அனைத்து பணிகளுக்கும் நேர்முகத் தேர்வு கூடாது என்பது தான் பா.ம.க.வின் நிலைப்பாடு. இதை கடந்த ஐந்தாண்டுகளாக பா.ம.க.வின் நிழல் நிதிநிலை அறிக்கை மூலம் வலியுறுத்தி வருகிறோம். ஆள்தேர்வில் நடைபெறும் முறைகேடுகளுக்கு முதன்மைக் காரணம் நேர்முகத் தேர்வுகள் தான். அவை அகற்றப்பட்டால் தான் நேர்மையான முறையில் பணியாளர்களைத் தேர்ந்தெடுக்க முடியும். அப்போது தான் ஏழை, நடுத்தர மக்களுக்கும் வேலை கிடைக்கும்.

மத்திய அரசுப் பணிகளை பொறுத்தவரை குரூப் ஏ, குரூப் பி அரசிதழ் பதிவு பணிகள் தவிர மற்ற அனைத்து பணிகளுக்கும் நேர்காணல் முறை ரத்து செய்யப்பட்டு விட்டது. ஆந்திர மாநிலம் அதை விட அடுத்தக்கட்டத்திற்கு சென்று மாவட்ட துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட முதல் தொகுதி பணிகளுக்குக் கூட நேர்காணலை ரத்து செய்து விட்டது. ஆந்திராவைப் பொறுத்தவரை அரசு பணிகளுக்கு நேர்காணல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது. ஆந்திரத்தைப் போலவே தமிழ்நாட்டிலும் முதல் தொகுதி பணிகளுக்கும் நேர்முகத் தேர்வை நிரந்தரமாக நீக்க வேண்டும்.

2 ஏ தொகுதியில் இதுவரை இருந்து வந்த நகராட்சி ஆணையர், தலைமைச் செயலக உதவி பிரிவு அதிகாரி ஆகியவை தொகுதி 2 க்கு மாற்றப்பட்டு விட்டன. இவை தவிர 2 ஏ தொகுதியில் உள்ள அனைத்து பணிகளும் சாதாரணமானவை தான். அப்பணிகளுக்காக முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரு தேர்வுகளை நடத்த வேண்டிய தேவையில்லை. எனவே, 2 ஏ தொகுதி பணிகளுக்கு  இனி ஒரே தேர்வை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முன்வர வேண்டும்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எதிர்கொள்ளும் மிகக் கடுமையான விமர்சனம் தேர்வு முடிவுகளை குறித்த காலத்தில் வெளியிடுவதில்லை என்பது தான். தொகுதி 1, தொகுதி 2 பணிகளுக்கான தேர்வு நடைமுறைகளை பல நேரங்களில் 30 மாதங்கள் வரை ஆகின்றன. இதனால் தேர்வர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இந்த நிலையை மாற்றி குறித்த நேரத்தில் முடிவுகளை வெளியிட வேண்டும்.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிமைப்பணி அதிகாரிகளை தேர்தெடுப்பதற்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்கும் அத்தேர்வுகளின் முடிவுகள் அறிவிக்கை வெளியான நாளில் இருந்து ஓராண்டுக்குள் வெளியிடப்படுகின்றன. அடுத்தத் தேர்வுக்கு தேர்வர்கள் தயாராவதற்காக இத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமைப்பணி தேர்வுக்கான முடிவுகள் ஒரு முறை கூட தாமதமாக வெளியிடப்பட்டதில்லை. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தைப் பின்பற்றி ஒவ்வொரு தொகுதி பணிக்கும் எந்த மாதத்தில் அறிவிக்கை வெளியிடப்படும்? எந்த மாதத்தில் தேர்வு நடைபெறும்? எந்த மாதத்தில் முடிவுகள் வெளியாகும்? என்ற விவரங்கள் அடங்கிய நிலையான தேர்வு அட்டவணையை  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமும்  வெளியிட வேண்டும்.

முதல் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டு, ஏப்ரல் மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஜூலை மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட்டு, திசம்பர் மாதத்தில் இறுதி முடிவுகள் வெளியிடப்பட வேண்டும். இரண்டாம் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை மார்ச் மாதம் வெளியிடப்பட்டு, மே மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஆகஸ்ட் மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும்  இரண்டு முறை தொகுதி 4 பணிகளுக்கான அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு, மார்ச், செப்டம்பர் மாதங்களில் தேர்வுகளை நடத்தி முறையே மே, நவம்பர் மாதங்களில் முடிவுகளை வெளியிட வேண்டும்.

பொறியியல் பணிகள், வேளாண் பணிகள், புள்ளியியல் பணிகள் உள்ளிட்ட முதல் 4 தொகுதிகளுக்குள் வராத பணிகளுக்கான அறிவிக்கைகள் ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்பட்டு, அடுத்த 5 மாதங்களில் தேர்வுகள் நடத்தி, முடிவுகளை வெளியிட வேண்டும். இதற்கேற்ற வகையில் தேர்வு நடைமுறையில் சீர்திருத்தங்களைச் செய்ய தமிழ்நாடு அரசுப் பணியாளர்  தேர்வாணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.