Skip to main content

 ஜெகதீஸ் துரை கொலைக்கு  காரணமானவர்களைக் கைது செய்ய வேண்டும் -  வைகோ வலியுறுத்தல்

Published on 07/05/2018 | Edited on 07/05/2018
vaiko1

 

நெல்லை மாவட்டம் பரப்பாடியில் தனிப்பிரிவு காவலர் ஜெகதீஸ்வரன் கொலைசெய்யப்பட்ட சம்பவம் குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் அறிக்கை: ‘’நெல்லை மாவட்டம், நான்குநேரி - பரப்பாடி பகுதியில் நள்ளிரவு நேரங்களில் சட்ட விரோதமாக மணல் கடத்தப்பட்டு வருகிறது என்றும், அதைத் தடுக்க சம்பவ இடத்திற்கு உடனடியாகப் புறப்பட்டுச் செல்லுமாறும் விஜயநாராயணம் காவல்நிலையத்திலிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (06.05.2018) இரவு விஜயநாராயணம் காவல் நிலைய உளவுப் பிரிவு காவலர் ஜெகதீஸ் துரை சென்றுள்ளார். 

 

மணல் கடத்தல் கும்பல் தாக்கியதில் காவலர் ஜெகதீஸ்துரை கொல்லப்பட்டதாக இன்று (07.05.2018) காலை சுமார் 6 மணி அளவில் அவரது துணைவியார் திருமதி மரியரோஸ் மார்க்ரெட் அவர்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது.

 

காவல்துறையும், தமிழக அரசும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாளையங்கோட்டை அரசு பொது மருத்துவமனை அருகில் சிந்தாமணி கத்தோலிக்க சபை அருட் தந்தை குழந்தை ராஜன்  தலைமையில் மறுமலர்ச்சி தி.மு.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு மற்றும் சிந்தாமணி சுற்றுவட்டார மக்கள் மறியலில் ஈடுபட்டுள்ளனர். 

 

தமிழக அரசும், நெல்லை மாவட்டக் காவல்துறையும், விரைந்து செயல்பட்டு, காவலர் ஜெகதீஸ் துரையின் படுகொலைக்குக் காரணமானவர்களைக் கைது செய்திட வேண்டும் என உயர் அதிகாரிகளிடம் கோரிக்கைகள் எழுத்து மூலமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

 

   கொலையுண்ட 32 வயது நிரம்பிய காவலர் நேர்மையாகப் பணியாற்றக் கூடியவர். அவருக்கு மூன்று வயதில் ஜோயல் என்ற ஆண் குழந்தை உள்ளது. கணவனை இழந்துவிட்ட சகோதரி மரியரோஸ் மார்க்ரெட் 5 மாத கர்ப்பிணி என்பது இதயத்தைப் பிளக்கும் சோகச் செய்தியாகும்.

 

தங்களுக்கு நீதி வேண்டும் என்றும், தனது கணவர் காவல்துறையில் உள்ள சில அலுவலர்களாலும், சட்ட விரோத மணல் கடத்தல் கும்பலாலும் பணியின் போது படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதற்குக் காரணமான குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். அப்பகுதியில் சட்ட விரோத மணல் கடத்தலில் நீண்ட காலமாக ஈடுபட்டுள்ள சமூக விரோத சக்திகள் கைது செய்யப்பட வேண்டும். தமது கணவர் பணியில் வீர மரணம் அடைந்ததாகக் கருதி, குடும்பப் பாதுகாப்பு நிதி ஒரு கோடி வழங்கிட வேண்டும். எம்.காம்., பி.எட். படித்துள்ள தமக்கு அரசு ஆசிரியை பணி வழங்கிட வேண்டும். தமது மகன் ஜோயல் மற்றும் வயிற்றில் இருக்கும் தமது குழந்தையின் கல்விச் செலவு முழுவதையும் அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும். இக்கோரிக்கைகளை நிறைவேற்றிட எழுத்துபூர்வமாக தங்களுக்கு உறுதி அளிக்க வேண்டும் எனவும் திருமதி மரியரோஸ் மார்க்ரெட் அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளார்.

 

காவலர்  குடும்பத்திற்கு தமிழக முதலமைச்சர் அறிவித்த 10 இலட்சம் ரூபாய் நிவாரணத் தொகை ஏற்கத்தக்கது அல்ல, ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்கிட உத்தரவிட வேண்டும்.


  கணவரைப் பறிகொடுத்த இளம் விதவை திருமதி மரியரோஸ் மார்க்ரெட் தெரிவித்துள்ள கோரிக்கைகள் முழுவதையும் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என மறுமலர்ச்சி தி.மு.க., சார்பில் வலியுறுத்துகிறேன்.

’’

சார்ந்த செய்திகள்

Next Story

பிடிபட்ட 4 கோடி; ஒரே நேரத்தில் அவகாசம் கேட்கும் நயினார் நாகேந்திரன் & இ.டி

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
4 crore caught; ED, Nayanar Nagendran, who asked for time at the same time

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

முன்னதாக தமிழகத்தில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக சென்று கொண்டிருந்த நேரத்தில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 06.04.2024 அன்று இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பைகளில் கட்டுக்கட்டாக இருந்த 500 ரூபாய் நோட்டுகளைப் பறக்கும் படையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சம்பவத்தில் ரொக்கமாக நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன்  அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருநெல்வேலியைச் சேர்ந்த ராகவன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், நெல்லையில் பாஜக சார்பில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் சார்பில் கொண்டு செல்லப்பட்ட நான்கு கோடி ரூபாய் பணம் தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

அதேபோல் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் சார்பாக வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக திருநெல்வேலி திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் இருந்து 28 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. இந்தச் சம்பவங்கள் தொடர்பாக இருவரும் மீதும் பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் அமலாக்க துறையில் புகார் அளித்துள்ளேன். உயர்நீதிமன்றம் அமலாக்கத்துறை இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' எனத் தெரிவித்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு இருவர் மீதும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவித்தார். இந்த வழக்கு அமலாக்க துறையின் பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் விசாரணைக்கு வருவதற்கான முகாந்திரம் உள்ளதா? என அமலாக்கத்துறை தரப்பிற்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமலாக்கத்துறை வழக்கறிஞர், சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் இந்த வழக்கு வராது. இருப்பினும் மனு தொடர்பாக விரிவான பதிலளிக்க அவகாசம் வேண்டும் எனப் பதில் அளித்தனர். அதனைத் தொடர்ந்து வழக்கை நாளை மறுநாளுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Next Story

பாஜகவுக்குத் தீயாய் வேலை பார்க்கும் வைகோ சகோதரி மகன்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Vaiko, who works as an opposite to mdmk, is his sister's son

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தீவிரப்படுத்தியுள்ளன.

இந்நிலையில், விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாருக்காக கிராமப்புறங்களில் தேர்தல் வேலை பார்த்துக்கொண்டிருந்தார் ஒருவர். அவரை நம்மிடம் சுட்டிக்காட்டிப் பேசிய நண்பர் “இவரோட தாத்தா மடத்துப்பட்டி கோபால் நாயக்கர் அந்தக் காலத்து காங்கிரஸ்காரர். பெருந்தலைவர் காமராஜரிடம் நெருக்கமாக இருந்தவர். அவருடைய பேரன்தான் இந்தக் கார்த்திகேயன். மதிமுகவுல இருந்தவர் 2019-ல் அதிமுகவுல சேர்ந்தார். இப்ப தேசிய நீரோட்டத்துல கலந்துட்டேன்னு பாஜகவுல சேர்ந்திருக்கார். மனுஷன் தீயா வேலை பார்க்கிறாரு. எதுக்கு கட்சி மாறிக்கிட்டே இருக்கீங்கன்னு கேட்டதுக்கு, கொள்கை பிடிக்காமத்தான் மதிமுகவுல இருந்து வெளிய வந்தேன். அப்புறம் அதிமுகவுல கடம்பூர் ராஜு கிட்ட என்னைப் பத்தி தப்பா சொல்லிட்டாங்க. அதனால அதிமுகவுல நீடிக்க முடியலன்னு சொல்லுறாரு. என்ன கொள்கையோ?” என்று சலித்துக்கொண்டார்.

‘தேர்தல் பணி எப்படிப் போகிறது?’ என்று கார்த்திகேயனிடம் கேட்டோம். “என்னோட நெருங்கிய வட்டத்துல.. சொந்தபந்தங்கள் கிட்ட தாமரைக்கு ஆதரவு திரட்டுறேன். இங்கே கிராமங்கள்ல என்னைத் தெரிஞ்சவங்க நிறைய பேர் இருக்காங்க. அவங்கள எல்லாம் பார்க்கிறேன். பாஜக வேட்பாளர்கள் வெற்றிக்கு அணில் மாதிரி உதவிக்கிட்டிருக்கேன். விருதுநகர், தென்காசின்னு ரெண்டு பார்லிமென்ட் தொகுதிக்கும் நான் வேலை பார்க்கிறேன்.” என்றார்.

பாஜக தலைமை கார்த்திகேயனைக் கட்சிக்குள் இழுத்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ-வுடைய சகோதரி 
சரோஜாவின் மகன் என்ற அடையாளம் இவருக்கு உண்டு.