Skip to main content

தூர் வாரிய ஜேசிபி; துயரத்தில் கிராமம்

Published on 14/01/2023 | Edited on 14/01/2023

 

JCP falls into well and one person passed

 

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். 25 வயதான இவர், ஏற்காடு மாரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பானுமதி என்பவரைத் திருமணம் செய்துகொண்டு அதே கிராமத்தில் வசித்து வருகிறார். ஜேசிபி ஓட்டுநராக வேலை செய்து வரும் சதீஷ்குமார். சிவகுமார் என்பவருக்குச் சொந்தமான ஜேசிபி வாகனத்தை, வாடகைக்கு எடுத்து ஓட்டி வருகிறார். இவருக்கு உதவியாளராகக் கரியமலை என்கிற 60 வயது முதியவர் உடன் இருந்து வருகிறார்.

 

இந்நிலையில், கடந்த சில நாட்களாக மாரமங்கலம் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளி கட்டும் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. அதில், ஜேசிபி ஓட்டி வந்த சதீஷ்குமார் கடந்த 12 ஆம் தேதி காலை 10 மணியளவில், செந்தில் என்பவருக்குச் சொந்தமான விவசாய கிணற்றுக்கு அருகில் தன்னுடைய ஜேசிபி வாகனத்தை நிறுத்தி, மண் வாரும் பக்கெட்  மூலம் கிணற்றுக்குள் இருக்கும் நீரை எடுக்க முயன்றுள்ளார்.

 

அப்போது கிணற்றின் ஓரத்தில் இருந்த கல்பாறைகள் திடீரென சரிந்ததால், சதீஷ்குமார் ஓட்டிய ஜேசிபி வாகனம் கிணற்றுக்குள் தலைக்குப்புற கவிழ்ந்தது. அந்த சமயம், வாகனத்தில் இருந்த சதீஷ்குமாரும், கரியமலையும் நிலை தடுமாறி கிணற்றுக்குள் விழுந்தனர். அந்த கிணற்றில் 5 அடிக்கு மேல் தண்ணீர் இருந்ததால் இருவரும் தண்ணீரில் மூழ்கினர். அதே நேரம், சதீஷ்குமாருக்கு நீச்சல் தெரிந்ததால் கிணற்றிற்கு மேலே வந்து விட்டார்.

 

ஆனால், ஜேசிபி வாகனத்தின் அடியில் மாட்டிக்கொண்ட கரியமலை, மேலே வர முடியாமல் கிணற்றுக்குள் பரிதாபமாகச் சிக்கிக்கொண்டார். இதுகுறித்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர், பொதுமக்கள் உதவியுடன் கரியமலையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து, கிணற்றுக்கு அடியில் அதிகப்படியான சேர் இருந்ததால் கரியமலையை மீட்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. ஒருவழியாக 3 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, கரியமலையை இறந்த நிலையில் கிணற்றைவிட்டு மேலே எடுத்தனர்.

 

பின்னர், கரியமலையின் உடலைக் கைப்பற்றிய ஏற்காடு போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

- சிவாஜி

 

 

 

சார்ந்த செய்திகள்