Skip to main content

"ஜெயமோகன் என்னை தகாத வார்த்தையில் திட்டினார்.." - கடைக்கார பெண்மணியின் வாக்குமூலம்!

Published on 15/06/2019 | Edited on 16/06/2019

சமூக வலைதளங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் தாக்கப்பட்ட விவகாரம். இதுகுறித்து பல்வேறு தகவல்கள் உலாவிக்கொண்டிருக்க, நாகர்கோயில் பார்வதிபுரத்தில்  ஜெயமோகனால் அவமானப்படுத்தப்பட்டதாக காவல்துறையில் வாக்குமூலம் கொடுத்த   கடைக்கார பெண்மணி கீதாவிடம் நான் பேசியபோது,

 

"காய்கறிகடை, மளிகைகடை, டீ கடை என மூணு கடைகள் வெச்சிருக்கோம்ங்க. நேற்று( 14 ந்தேதி) இரவு வந்தவரு(எழுத்தாளர் ஜெயமோகன்)  1/2 லிட்டர் பால், 2 மாவுப்பாக்கெட்டும் கேட்டாரு. 13 ந்தேதி மாவுதான் சார் இருக்கு. ஃப்ரெஷ் மாவு நாளைக்குத்தான் சார் வரும்னேன். சரி கொடுங்கன்னு வாங்கிட்டுப்போனாரு. திமுக வட்டசெயலாளரா இருக்கிற என் கணவர் செல்வம் பார்ட்டி ஆஃபிஸ் போயிட்டு வந்ததும் தண்ணீ கேட்டார். கொண்டு வந்ததும் குடிச்சுட்டு மளிகைக்கடையை திறந்து பொருட்கள் கொடுத்துக்கிட்டே கடைக்காரப் பையனுடன் கணக்குப் பார்த்துக்கிடிருந்தார். திடீர்ன்னு, மாவு பாக்கெட்டோடு  பைக்குல வந்தவர்( ஜெயமோகன்) ஏண்டி நாயே தே...மவளே... என்ன மாவடி கொடுத்திருக்கன்னு கேட்டுக்கிட்டே மாவு பாக்கெட்டை தூக்கி வீசினாரு. 

 

இந்தமாதிரி, நம்பள யாருமே பேசினதில்லையேன்னு எனக்கு ஒருமாதிரி கைக்கால் எல்லாம் நடுக்க ஆரம்பிச்சிடுச்சி. நான் சொல்றது பொய்யின்னா டீகடையில வேலைபார்க்கிற பையன் பக்கத்துல இருந்தான். அவனே, என்னக்கா இப்படில்லாம் பேசிட்டாரேன்னு சொன்னான்.

 

 

w

 

அவர், அப்படி பேசினதும் நான் நிலைகுலைஞ்சிபோயிட்டேன். கோபமாகி, 'நீதானே பார்த்து எடுத்துட்டுப்போன? இப்பவந்து இப்படி பேசுற?' ந்ன்னு கேட்டேன். உடனே, தண்ணீர் சொம்பை வேகமாக தள்ளிவிட்டுட்டு உள்ளவந்து என் முடியப்பிடிச்சு இழுக்க முயற்சி பண்ணினார். இதைப்பார்த்து டென்ஷனான என் கணவர் அவரை (ஜெயமோகன்) புடிச்சு நெட்டித்தள்ள கடையிலிருந்து வெளியில வந்து விழுந்துட்டாரு. என் கணவரை அடிச்சது உண்மைதான். அவரும் இவரை திருப்பி அடிச்சாரு. அவரோட, மனைவி எங்க கடையோட ரெகுலர் கஸ்டமர். ரொம்ப நல்லவங்கன்னு அவங்கக்கிட்டப் போயி நியாயத்தை சொல்லலாம்னு போனாரு. ஆனா, அவமானப்படுத்தி அனுப்பிட்டாங்க. எனக்கு பி.பியே கிடையாது ஆனா பிரஷர் அதிமாகி மூச்சுதிணறல் ஏற்பட ஆரம்பிச்சிடுச்சு. ஏற்கனவே, ஹார்ட் பிராப்ளம் இருக்கிறதால எதுவும் ஆகிடக்கூடாதுன்னுதான் பயந்துபோய் ஆசாரிப்பள்ளம் ஜி.ஹெச்சுல அட்மிட் ஆனேன். பி.பி. 179 இருந்துச்சு. 

 

ஒருமணிநேரம் கழிச்சுப்பார்த்தா நான் அட்மிட் ஆகியிருக்குற அதே இடத்துல ரெண்டு மூணு பெட்டு தள்ளி அவரும் அட்மிட் ஆனாரு. எனக்கு ஒண்ணுமே புரியல. அப்புறம்தான் தெரிஞ்சது. நான், கொடுத்த வாக்குமூலத்தை எடுத்துக்காம அவர் கொடுத்த வாக்குமூலத்தின்படி என் கணவரை அரெஸ்ட் பண்ணியிருக்காங்க. 

 

என் கணவர் குடிச்சிட்டு அடிச்சதா சொல்றாங்க. உண்மை என்னன்னா? அவரு குடிப்பாரு இல்லைன்னு சொல்லல. ஆனா, கடைக்கு வரும்போது சிகரெட், குடியை தொடவே மாட்டாரு. கடையை கோயில்மாதிரி நினைக்கிறவரு. கடை மூடினபிறகுதான் குடிப்பார். அந்தமாதிரிதான், பிரச்சனையெல்லாம் முடிஞ்சபிறகு வழக்கம்போல் குடிச்சிட்டார். ஆனா, அரெஸ்ட் பண்ணினதும் போதையில இருந்ததால ஜெயமோகனிடம் சண்டபோதும் குடிச்சிருந்தமாதிரி பரப்பிவிட்டுட்டாங்க. எனக்கு மூணு பெண் குழந்தைங்க சார். அந்தாளால எங்க மானமே போயிடுச்சு. முந்தினநாள் மாவு பிடிக்கல. காச கொடுன்னு கேட்ட்டிருந்தா கொடுத்திருப்பேன். இப்படி பேசலாமா? எனக்கு அவரை யார்ன்னுக்கூட தெரியாது. ஆனா, என் கணவருக்கு அவரைத் தெரியுமாம். தெரிஞ்சிருந்தும் அடிச்சார்ன்னா அதுக்குக்காரணம், ஒரு மனைவியை கண்ணு முன்னாடி அப்படி தரக்குறைவா பேசி அசிங்கப்படுத்தினா எந்தக்கணவன் தான் பார்த்துக்கிட்டு சும்மா நிற்கமுடியும்? நீங்களே சொல்லுங்க என்று குமுறிவெடிக்கிறார். இதுதொடர்பாக, ஜெயமோகனால் பாதிக்கப்பட்ட கீதா திமுக தலைவர் ஸ்டாலின், எம்.பி. கனிமொழி ஆகியோருக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.

 

இதுகுறித்து, விளக்கம் கேட்க எழுத்தாளர் ஜெயமோகனை பலமுறை தொடர்புகொண்டபோதும் எஸ்.எம்.எஸ். அனுப்பியபோதும் லைனில் வரவில்லை. இச்செய்திக்குப்பிறகு அவர் விளக்கமளித்தால் பிரசுரிக்கத் தயாராக இருக்கிறது நக்கீரன் இணையதளம். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்தியாவுக்கு தனியாகச் செல்ல வேண்டாம் எனத் தோழிகளிடம் கூறினேன்” - பிரபல எழுத்தாளரின் பரபரப்பு கருத்து

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
sensation by America writer says I have told my friends not to go to India alone

ஸ்பானிஷ் பெண் ஒருவர் தன்னுடைய கணவருடன் மோட்டார் சைக்கிளிலேயே உலகின் பல்வேறு நாடுகளில் சுற்றுலா மேற்கொண்டு வந்தார். கடந்த ஐந்து ஆண்டுகளாக சுமார் 66 நாடுகளுக்கு இந்த தம்பதி பயணம் செய்துள்ளனர். 

இதுவரை இத்தாலி, ஈரான் எனப் பல நாடுகளுக்குச் சென்ற இந்த தம்பதி ஆப்கானிஸ்தான் சென்றதைத் தொடர்ந்து அடுத்த பயணமாக இந்தியாவை தேர்ந்தெடுத்தனர். அந்த வகையில், கடந்த மார்ச் ஒன்றாம் தேதி இருவரும் தனித்தனி பைக்கில் ஜார்க்கண்ட் வழியாக பாகல்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அன்று இரவு தும்கா மாவட்டத்தில் உள்ள குர்மஹாட் என்ற ஒரு குக்கிராமத்தில் தற்காலிகமாக டெண்ட் அமைத்து இருவரும் தங்கினர். அப்போது அந்த பகுதிக்கு வந்த இளைஞர்கள் சிலர், இருவரையும் தாக்கியதோடு அப்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.

தங்களுக்கு நேர்ந்த கொடுமை குறித்து சமூக வலைத்தளங்களில் அந்த தம்பதி வீடியோ பதிவிட்டனர். அந்த பகுதியில் ரோந்து பணிக்கு வந்த காவல்துறையினர், காயமடைந்த அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்பொழுது பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்தது.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், தங்களுக்கு நேர்ந்த முழு துயரத்தையும் அப்பெண் போலீசாரிடம் தெரிவித்தார். அவர் சொன்ன அடையாளங்களை வைத்து விசாரித்த நிலையில், குற்றவாளி ஒருவன் சிக்கினான். அவனிடம் நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில் மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மற்ற குற்றவாளிகளைப் போலீசார் தேடி வருகின்றனர்.

sensation by America writer says I have told my friends not to go to India alone

இந்த நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல எழுத்தாளரும், ஊடகவியலாளருமான டேவிட் ஜோசப் வோலோட்ஸ்கோ, இந்த சம்பவம் குறித்து தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “பல ஆண்டுகளுக்கு முன்பு நான் இந்தியாவில் வாழ்ந்தபோது, நான் கண்ட பாலியல் தொல்லைகள் போல் வேறு எங்கும் கண்டதில்லை. சில நாட்கள் மட்டுமே அங்கு தங்கியிருந்தாலும், துன்புறுத்தப்படாமலோ அல்லது தாக்கப்படாமலோ அல்லது பாலியல் வன்கொடுமை செய்யப்படாமலோ கூட ஒரு பெண் பயணியை நான் சந்தித்ததில்லை.

நான் இந்தியாவை நேசிக்கிறேன். உலகில் எனக்கு மிகவும் பிடித்த இடங்களில் ஒன்றாக இந்தியா எப்போதும் இருக்கும். ஆனால் அங்கு தனியாக பயணம் செய்ய வேண்டாம் என்று பெண் தோழிகளுக்கு அறிவுரை கூறியிருக்கிறேன். இந்திய சமூகத்தில் இது ஒரு முக்கியப் பிரச்சனையாகவே இருக்கிறது. இதில் இந்தியா அதிக கவனம் செலுத்த வேண்டும்’ என்று பதிவிட்டுள்ளார். இவருடைய கருத்துக்கு பலரும் எதிர்வினையாற்றி வருகின்றனர்.  

Next Story

எழுத்தாளர் தேவிபாரதியை நேரில் சென்று வாழ்த்திய அமைச்சர்!

Published on 27/12/2023 | Edited on 27/12/2023
Writer Devibharathi greeted the minister in person

ஒவ்வொரு வருடமும் இலக்கிய ஆளுமைகளுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் மத்திய அரசின் சார்பில் சாகித்திய அகாடமி விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது. இந்த வருட விருது தமிழ் எழுத்தாளரான தேவிபாரதிக்கு அவர் எழுதிய ‘நீர்வழிபடூஉம்’ என்ற நாவலுக்காக சாகித்திய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் டெல்லியில் அவருக்கு மத்திய அரசின் சார்பில் விருது வழங்கி சிறப்பு சேர்க்கப்படுகிறது.

எழுத்தாளர் தேவிபாரதி சாதாரண எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர். திருப்பூர் மாவட்டம் பழைய கோட்டை அருகே உள்ள நொய்யல் நதிக்கரையில் இருக்கும் புது வெங்கரையாம்பாளையம் என்ற குக்கிராமத்தில்தான் அவர் வசித்து வருகிறார். சாகித்திய அகாடமி விருது அறிவிக்கப்பட்டவுடன் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முதல் பல்வேறு தலைவர்கள் தொலைப்பேசி மூலமும் பல எழுத்தாளர்கள், அவரின் நண்பர்கள் எனப் பலரும் நேரில் சென்று தேவிபாரதியை வாழ்த்தி வருகிறார்கள்.

அந்த வரிசையில் தமிழக செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சரான மு.பெ. சாமிநாதன், எழுத்தாளர் தேவிபாரதியை அவர் வசித்து வரும் கிராமத்திற்குச் சென்று எழுத்தாளர் தேவிபாரதியை தமிழக அரசின் சார்பாகவும் முதல்வர் சார்பாகவும் வாழ்த்தி கௌரவித்தார். அப்போது அவருடன் திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் உடன் இருந்தார். சாகித்திய அகாடமி விருது பெறும் எழுத்தாளர் தேவிபாரதியை அமைச்சர் நேரில் சென்று வாழ்த்தியது அந்த கிராம மக்களையும், எழுத்தாளர்களையும், இலக்கிய ஆர்வலர்களையும் உற்சாகமடையச் செய்துள்ளது.