Skip to main content

ஜெயலலிதா நினைவில்ல உத்தரவை ரத்து செய்யக் கோரிய ஜெ.தீபா வழக்கு தள்ளிவைப்பு!

Published on 04/08/2020 | Edited on 04/08/2020

 

chennai high court

 

வேதா நிலையத்தை மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு இல்லமாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து ஜெ.தீபா தொடர்ந்த வழக்கின் விசாரணையை,  7-ஆம் தேதிக்கு தள்ளிவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

 

இது தொடர்பாக ஜெ.தீபா சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான என்னையும், என் தம்பி ஜெ.தீபக்கையும்,  சட்டப்படியான வாரிசாக சென்னை உயர் நீதிமன்றம் கடந்த மே மாதம் 29ஆம் தேதி அறிவித்தது. எனது அத்தை ஜெயலலிதாவும், பாட்டி சந்தியாவும், போயஸ் கார்டனில் உள்ள அவர்களுக்கு சொந்தமான வேதா நிலையத்தில் அவர்களின் இறுதிக் காலம் வரை வாழ்ந்தனர்.

 

ஜெயலலிதா பல்வேறு சமயங்களில் வேதா நிலையத்தின் மீதுள்ள பற்று குறித்து உணர்ச்சிபூர்வமாக பேட்டியளித்துள்ளார். பாட்டி சந்தியா இறந்தபிறகு, அவர் எழுதிவைத்த உயிலின்படி அந்தச் சொத்து முழுவதும் ஜெயலலிதா பெயருக்கு மாற்றப்பட்டது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அவர் வாழ்ந்த வேதா நிலையத்தை ஜெயலலிதா நினைவு இல்லமாக மாற்ற முடிவு செய்து, கடந்த 2017-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17-ஆம் தேதி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு வெளியிட்டார்.

 

இதை எதிர்த்து நான் தொடர்ந்த வழக்கில், எனது கோரிக்கையைப் பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்குமாறு தலைமைச் செயலாளருக்கு உத்தரவிடப்பட்டது. வேதா நிலையம் 24 ஆயிரத்து 322 சதுர அடி பரப்பளவைக் கொண்டது. இந்தச் சொத்தை, எங்களின் விருப்பத்திற்கு மாறாக ஆர்ஜிதம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக 2018-ஆம் ஆண்டு நவம்பரில், அந்தப் பகுதி மக்களிடம் கருத்து கேட்க சென்னை மாவட்ட கலெக்டர் அறிவிப்பு வெளியிட்டார். அதற்கான நாளும், நேரமும் அறிவிக்கப்பட்டது. ஆனால், பொது கருத்துக் கேட்பு எதுவும் நடத்தப்படவில்லை. விதிமுறைகளுக்கும் சட்டத்திற்கும் முரணாக, போயஸ் கார்டன் வேதா நிலையத்தை அரசு ஆர்ஜிதம் செய்துள்ளது.

 

நியாயமான இழப்பீடு மற்றும் வெளிப்படையான நில ஆர்ஜிதம், மறுவாழ்வு, செட்டில்மெண்ட் உரிமைச் சட்டத்துக்கு முரணாக தமிழக அரசு செயல்பட்டுள்ளது. சொத்துகள் மீது உரிமையுள்ள நபர்களிடம் எந்தக் கருத்தையும் கேட்கவில்லை. வேதா நிலையத்தை ஜெயலலிதாவின் நினைவு இல்லமாக மாற்றுவதால் எந்தக் குடும்பமும் பாதிக்காது, மறுவாழ்வு மற்றும் செட்டில்மெண்ட் தேவையில்லை என்று நில ஆர்ஜித அதிகாரி அறிவித்துள்ளார். இந்த நிலையில், சட்டபூர்வ வாரிசுகளான எங்களைக் கேட்காமல், வேதா நிலையம் மற்றும் அங்குள்ள அசையா சொத்துகள் அனைத்தும் ஜெயலலிதா நினைவு இல்லத்திற்கு பயன்படுத்தப்படும் என்று தமிழக அறிவித்துள்ளது.

 

நாடு முழுவதும் கரோனா பாதிப்பால் திணறிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், வேதா நிலையத்தை ஜெயலலிதாவின் நினைவு இல்லமாக மாற்ற அரசு அவசரம் காட்டுகிறது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை இன்னும் முடிவடையவில்லை. அதிகாரிகள், டாக்டர்கள் என 147 பேரிடம் ஆணையம் விசாரணை நடத்தியுள்ளது. இந்த நேரத்தில், வழக்கில் சம்மந்தப்பட்ட இடத்தை அரசு தன்வசம் எடுத்துக்கொள்வது, ஆணையத்தின் விசாரணையை முழுவதுமாக அழித்துவிடும். உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஜெயலலிதாவுக்கு சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துகள் அனைத்திற்கும் நாங்கள்தான் உரிமை கோர முடியும். இவற்றை எல்லாம் தற்காலிகமாக தங்கள் வசம் அரசு எடுத்துக்கொண்டிருப்பது நியாயமற்றது, சட்ட விரோதமானது.

 

வேதா நிலையத்தில் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகளை,  சென்னை மாவட்ட ஆட்சியர் மற்றும் நில ஆர்ஜித அதிகாரி எடுத்துவிடக்கூடாது எனக் கோரி, தமிழக அரசுக்கு கடந்த ஜூன் 12-ஆம் தேதி மனு அனுப்பினேன். இந்நிலையில்,  என்னை ஜெயலலிதாவின் சொத்துகளுக்கு நிர்வாகியாக நியமனம் செய்தும், 6 மாதங்களுக்குள் ஜெயலலிதாவின் சொத்துகள், அவரது கடன்கள் ஆகியவற்றை கண்டறிந்து தேவையான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், போயஸ் கார்டன் வீட்டை ஆய்வு செய்யக்கூட எனக்கு அதிகாரிகள் அனுமதி தரவில்லை. மெரினா கடற்கரையில் ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் கட்டப்பட்டு வரும் நிலையில், அவர் வாழ்ந்த வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்ற வேண்டிய அவசியம் எழவில்லை.

 

எனது மூதாதையர்களின் சொத்துகளை, குறிப்பாக நகைகள், உடைகள், பெண்களின் உடமைகளை அரசு எடுப்பது பெண்மையை இழிவுபடுத்தும் செயலாகும். எனது தாய்போல் இருந்த ஜெயலலிதாவை அவமானப்படுத்துவதை அனுமதிக்க முடியாது. வேதா நிலையத்தில் உள்ள ஏராளமான மதிப்பு மிக்க பொருட்கள், தங்க, வைர, பிளாட்டின, வெள்ளி நகைகள் போன்றவை புராதனமானவை. அவை எனது தாத்தாவிற்கு, மைசூர் ராயல் பேலஸ் டாக்டர் ஒருவரால் வழங்கப்பட்டவை. அவற்றை ஜெயலலிதா மிக பத்திரமாக பராமரித்து வந்தார். அவற்றைத் தொட யாருக்கும் அனுமதி வழங்கமாட்டார். அப்படிப்பட்ட பொருட்களை அரசு கையகப்படுத்துவது, ஜெயலலிதாவுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகமாகும். ஜெயலலிதாவின் உயர் மதிப்புள்ள நகைகளை பொதுமக்கள் பார்வைக்கு வைப்பது ஏற்கத்தக்கதல்ல.

 

http://onelink.to/nknapp

 

ஜெயலலிதாவின் நினைவு இல்லமாக வேதா நிலையத்தை மாற்ற, தமிழக மக்கள் விரும்பவில்லை. நாங்கள் எடுத்த கருத்துக் கணிப்பில் பல மாவட்டங்களைச் சேர்ந்த 89 சதவீதம்பேர், வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்ற விரும்பவில்லை. ஜெயலலிதாவின் உண்மையான, சட்டப்பூர்வ வாரிசுகளான நாங்கள் இதற்கு அனுமதிக்க மாட்டோம். எனவே, வேதா நிலையத்தை ஜெயலலிதாவின் நினைவில்லமாக மாற்றும் தென் சென்னை வட்டார வருவாய் அதிகாரி, கடந்த ஜூலை 22-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

 

இந்த மனு,  நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. பின்னர் வழக்கு  விசாரணை,  வரும் 7 -ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.  

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஓ.பி.எஸ். இரட்டை இலையைப் பயன்படுத்தத் தடை தொடரும்” - உயர்நீதிமன்றம்

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
ban on using OPS aiadmk symbol will continue says Madras High Court

அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை பிரச்சனை பூதாகரமாகி ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். ஆகிய இருவரும் நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் முறையிட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராகத் தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதி (20.04.2023) அங்கீகரித்தது. இதன் மூலம் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி வசம் என்பது உறுதியானது. அதே சமயம் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தொடர்ந்து அ.தி.மு.க.வின் கொடிகள், பெயர், லெட்டர் பேடு, சின்னங்களைப் பயன்படுத்தி வந்தார். இதனால் அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுகிறது. எனவே அ.தி.மு.க.வின் கொடிகள், பெயர், லெட்டர் பேடு, சின்னங்களை ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி சதீஷ்குமார், ‘எத்தனை முறைதான் ஒரே ஒரு விவகாரத்திற்காக நீதிமன்றத்தின் கதவை தட்டுகிறீர்கள்’ என ஓ.பி.எஸ். தரப்புக்கு கண்டனம் தெரிவித்ததோடு, அ.தி.மு.க.வின் கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை ஓ.பி.எஸ். பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி அளித்த இந்த இடைக்காலத் தடையை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் தரப்பு மேல்முறையீடு செய்தது.

இந்த மேல்முறையீட்டு வழக்கு பல கட்ட விசாரணைக்குப் பிறகு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் கடந்த 18 ஆம் தேதி, “அ.தி.மு.க. இரட்டை இலை சின்னம், கொடி ஆகியவற்றை ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்த நிரந்தர தடை விதிக்கப்படுகிறது” என அதிரடி தீர்ப்பை வழங்கி இருந்தார். இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேலும் அந்த மனுவில், ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியானதா இல்லையா என்ற வழக்கு நிலுவையில் உள்ளதால்,  அந்த வழக்கின் தீர்ப்பு வரும் வரை தனக்கு கட்சியின் இரட்டை இலை, சின்னத்தையும் கொடியையும் பயன்படுத்த அனுமதியளிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணையின் போது, “அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பி.எஸ்க்கு தடை விதிக்கப்பட்டது தொடர்பாக இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது; ஓ.பி.எஸ். இரட்டை இலை, கட்சியின் பெயர் ஆகியவற்றை பயன்படுத்த விதிக்கப்பட்டிருந்த தடை தொடரும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த மேல்மூறையீடு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க உத்தரவிட்டதோடு, இது தொடர்பாக ஓ.பி.எஸ் தேர்தல் ஆணையத்தை அணுகத் தடையில்லை என்றும் கூறியுள்ளது. இந்த வழக்கின் இறுதி விசாரணை ஜூன் 10 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Next Story

மீன்வளப் பல்கலைக்கழகம்; ஜெயலலிதாவின் பெயரை நிராகரித்த குடியரசுத்தலைவர்

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
President rejects Jayalalitha name for Fisheries University

நாகை மீன்வளப் பல்கலைக்கழகத்திற்கு முன்னால் முதல்வர் ஜெ.ஜெயலலிதா பெயரை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை குடியரசு தலைவர் நிராகரித்து விட்டார்.

நாகப்பட்டினத்தில் உள்ள மீன்வளப் பல்கலைக்கழகம் கடந்த 2012 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் அதிமுக ஆட்சியின் போது நாகப்பட்டினத்தில் துவங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைந்த பிறகு நாகப்பட்டினத்தில் உள்ள மீன்வள பல்கலைக்கழகத்திற்கு அவரது பெயரை வைக்க வேண்டும் என்று  சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரின் ஓப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் 4 ஆண்டுக்கும் மேல் ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் கிடப்பில் வைத்திருந்தார்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு கிடப்பில் போடப்பட்ட 10 மசோதாக்களுடன் ஜெயலலிதா பெயர்மாற்றம் தொடர்பான மசோதவையும் திருப்பி அனுப்பியிருந்தார். இதையடுத்து தமிழக அரசு மீண்டும் பல்கலைக்கழகத்திற்கு ஜெயலலிதாவின் பெயர் வைக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. இந்த மசோதாவை ஆளுநர் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்திருந்தார்.

இந்த நிலையில் நாகப்பட்டினம் மீன்வளப் பல்கலைகழகத்திற்கு ஜெயலலிதா பெயர் மாற்றம் தொடர்பான பரிந்துரையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நிராகரிப்பதாக அறிவித்துள்ளார்.