இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்து காணப்படுகின்றது. சென்னை அதிக பாதிப்புகளுடன் முதல் இடத்தில் இருந்து வருகின்றது. அதையும் தாண்டி வட மாவட்டங்களில் அதன் பாதிப்பு என்பது அதிகமாக இருந்து வருகின்றது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் பாதிப்பு அதிகமாக இருந்து வருகின்றது.
தினமும் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 4000ஐ கடந்து வந்த நிலையில், இன்று பாதிப்பு 4500ஐ கடந்துள்ளது. இந்த கரோனா பாதிப்பு காரணமாக சென்னை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் முழு முடக்கம் அறிவிக்கப்பட்டது. மதுரையில் இன்றுடன் முழு முடக்கம் நிறைவடைய உள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மீண்டும் தமிழகம் முழுவதும் பொதுமுடக்கம் அறிவிக்கப்படும் என்ற செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இதுதொடர்பாக பேசிய அமைச்சர் ஜெயக்குமார், "கரோனா முழுவதும் குறையும் வரை பொதுமுடக்கத்தை நீட்டித்துக்கொண்டே இருக்க முடியாது. அதுவரை மக்களை கட்டிப்போட முடியாது. கரோனா குறைய 6 மாதம் அல்லது ஒரு வருடம் கூட ஆகலாம். அரசாங்கம் கூறும் வழிமுறைகளை பின்பற்றினாலே கரோனாவை கட்டுப்படுத்தலாம்" என்றார்.