Skip to main content

ஜெயக்குமார் தனசிங் மரண வழக்கு; சிபிசிஐடி விசாரணை தொடக்கம்!

Published on 23/05/2024 | Edited on 23/05/2024
Jayakumar danasingh case CBCID investigation begins

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ஜெயக்குமார் தனசிங் கடந்த 2 ஆம் தேதி (02.05.2024) வெளியே சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அதனைத் தொடர்ந்து அவரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் எனப் பலரும் பல இடங்களிலும் தேடிப் பார்த்துள்ளனர். அப்போதும் ஜெயக்குமார் கிடைக்கவில்லை. இதனையடுத்து அவருடைய மகன் கருணையா ஜப்ரின் (வயது 28) உவரி காவல்துறையில் இது தொடர்பாக கடந்த 3 ஆம் தேதி (03.05.2024) புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், காணாமல் போன ஜெயக்குமாரைத் தீவிரமாக தேடி வந்தனர்.

இத்தகைய சூழலில் ஜெயக்குமார் கரைச்சுத்து புதூரில் உள்ள வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் உடல் பாதி எரிந்த நிலையில் கடந்த 4 ஆம் தேதி (04.05.2024) சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பாக 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் பலரிடமும் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இருப்பினும் இந்த விசாரணையில் எந்த துப்பும் கிடைக்கவில்லை என்ற தகவலும் வெளியாகி இருந்தது. அதனைத் தொடர்ந்து ஜெயக்குமார் மரண வழக்கு விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில் இன்று (23.05.2024) காலை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதற்கான உத்தரவைத் தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் பிறப்பித்திருந்தார். 

Jayakumar danasingh case CBCID investigation begins

மேலும் சிபிசிஐடி ஆய்வாளர் உலகராணி இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இதனையடுத்து ஜெயக்குமார் மர்ம மரணம் தொடர்பாக சிபிசிஐடி வசம் வழக்கு மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டது. அச்சமயத்தில் காவல்துறை கொடுத்த வழக்கு தொடர்பான ஆவணங்களின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதில் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிபிசிஐடி விசாரணையை தொடங்கினர். இந்நிலையில் ஜெயக்குமார் மரண வழக்கு தொடர்பாக கரைச்சுத்து புதூரில் உள்ள அவரது வீட்டில் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதோடு ஜெயக்குமாரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட தோட்டத்திலும் விசாராணையை மேற்கொண்டனர். 

சார்ந்த செய்திகள்