Published on 11/08/2018 | Edited on 11/08/2018
![Jayachithra](http://image.nakkheeran.in/cdn/farfuture/dXgukr2jRWjb9EdJeVWVjtkrQV9TjZ56KtVvUgFamNw/1533986792/sites/default/files/inline-images/Jayachithra%20600.jpg)
தி.மு.க. தலைவர் கலைஞரின் உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம் பின்புறம் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அங்கு கலைஞரின் மிகப்பெரிய படம் வைக்கப்பட்டு, தி.மு.க. கொடி நடப்பட்டுள்ளது. நினைவிடம் பூக்களால் அலங்காரம் செய்து வைக்கப்பட்டுள்ளது. கலைஞரின் உடல் அடக்கம் செய்யப்பட்ட நாளிலிருந்து திமுக தொண்டர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நேற்று 3வது நாளாக அஞ்சலி செலுத்தனிர். இன்று 4வது நாளாக இன்றும் திமுக தொண்டர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர். இன்று திரைப்பட நடிகை ஜெயச்சித்ரா கலைஞரின் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயச்சித்ரா, கலைஞர் ஒரு களஞ்சியம். அரசியலில் மட்டுமல்ல அத்தனை துறைகளிலும் திறமையானவர். அவர் ஒரு நடமாடும் கலைக்கூடம். மாபெரும் கலா ரசிகர். அவரும் ஒரு கலைஞர், கவிஞர், எழுத்தாளர் என அடுக்கிக்கொண்டே போகலாம். அவர் இருந்த அந்தக் காலக்கட்டத்தில் நானும் இருக்கிறேன் என்று சொல்லும்போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர்களின் அஞ்சுகம் பிச்சர்ஸ் தயாரித்த பூக்காரி, வண்டிக்காரன் மகன் படங்களில் கதாநாயகியாக நடித்தேன். அந்தப் படங்களும் வெற்றி பெற்றது. அதில் நடித்தது எனக்கு பெருமையாக இருக்கிறது. சூரியன் எப்படி உலகம் இருக்கும் வரை இருக்கோ, அதுபோல இந்த உலகம் இருக்கும் வரை அவரின் பெயர், புகழ் என்றென்றும் இருக்கும்.