Skip to main content

பெரிய விருதா? இல்லை நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இலக்கா? - இளையராஜாவுக்கு ஜேம்ஸ் வசந்த் கேள்வி!

Published on 18/04/2022 | Edited on 18/04/2022

 

kl;

 

'மோடியும் அம்பேத்கரும்' என்ற தலைப்பில் வெளியாகியுள்ள புத்தகத்தில் இசையமைப்பாளர் இளையராஜா மோடி தொடர்பாக புகழ்ந்து எழுதியிருந்தார். இளையராஜாவின் இந்த முன்னுரை தற்போது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.  பிரதமர் நரேந்திர மோடியையும் அம்பேத்கரையும் ஒப்பிடுவது தவறானது என்று ஒருதரப்பும்,  இல்லை அது சரியான கருத்து என்று மற்றொரு தரப்பும் சமூக வலைத்தளங்களில் இருவேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், இதுதொடர்பாக பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்த் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

 

அதில், " மிகத் திறமையானவர்தான். அதை ஒட்டுமொத்த தமிழினமே புரிந்துகொண்ட உண்மை. அதனால்தான் அவரை கிட்டத்தட்ட அரை நூற்றாண்டாக அங்கீகரித்துக் கொண்டாடி வருகிறோம். அது வியாபாரத் தளந்தான். இருந்தாலும் அதன் வழியாக வருகிற இந்த உயரிய கலையின் படைப்புகளைக் கேட்டு இன்புற்று அவரை உயர்ந்த இடத்தில் வைத்திருக்கிறோம். அவர் ஒரு தனி மனிதர். அவருக்கென்று விருப்பு வெறுப்புகளும், கொள்கைகளும் தேர்வுகளும் இருக்கும் - நம் ஒவ்வொருவருக்கும் இருப்பதைப் போல. அதனால் அந்தக் களத்தைத் தாண்டிய அவரது தனிப்பட்ட செயல்பாடுகளை நாம் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. 

 

ஆனாலும் ஒருவருக்கு இருக்கிற சமூக அடையாளத்தை வைத்து அவருடைய கூற்றுகளும் கொள்கைகளும் கூர்ந்து நோக்கப்படுவதைத் தவிர்க்க இயலாது. அந்த அடிப்படையில், இப்படிப்பட்ட இடத்தில் உள்ளவர்கள் எச்சரிக்கையுடன் தங்களை நடப்பித்துக்கொள்ள வேண்டும். ஒரு இனத்தின், சமூகத்தின், நாட்டின் நலன்சார்ந்த விஷயங்களில் கருத்துகளை வெளியிடும்போது மிக மிகக் கவனமாக இருக்கவேண்டும். சமீபத்தில் இவர் சொல்லியிருக்கிற ஒரு கருத்து அவருக்கு இருக்கிற கருத்துரிமையின் வெளிப்பாடு. ஆனால் அது எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைக் கொஞ்சம் சிந்தித்திருக்க வேண்டும். கடந்த 20 ஆண்டுகளாக இந்த நாடு பார்த்து வருகிற சர்ச்சைக்குரியவரை, ஒரு இனக்கலவரத்தின் கறைபடிந்தவரை, இந்திய வரலாற்றின் பொன்னேடுகளில் பொறிக்கப்பட்டிருக்கிற சமத்துவச் சிந்தனையுள்ள ஒருவரோடு ஒப்பிட்டுப் பேசுவது எப்படி ஏற்றுக்கொள்ளப்படும்?

 

எனக்குப் பிடித்தவர், என் அபிமானத்துக்குரியவர் என்று சொல்லியிருந்தால் ஒன்றும் பிரச்சனையில்லை. சந்தேகத்துக்கு இடமான ஒருவரை நிகரற்ற ஒரு வரலாற்றுத் தலைவனுடன் ஒப்பிட்டதால்தான் எதிர்ப்பு வருகிறது. எஞ்சியிருக்கிற அந்த ஒரே உன்னத விருது இலக்கா? கலைத்துறை சார்பாக நியமிக்கப்படுகிற அந்த நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இலக்கா? அல்லது மாநில ஆளுகை மீது ஏதாவது சொந்தப் பகையா?இப்படிப் பலவற்றைத் தூண்டுகிறது அவரது கூற்று. ஏனெனில், இது உண்மைக்குப் புறம்பான பாராட்டு.  அரசியல் கட்சிகள் இதைவிட கேலிக்கூத்தான பட்டங்களையும் பாராட்டுகளையும் தங்கள் தலைவர்களுக்குச் சூட்டி மகிழ்வர். அது அரசியல். யாரும் கண்டுகொள்ளப் போவதில்லை. ஆனால், இவர் கலைத்துறையைச் சேர்ந்தவர். அதனால் பல ஐயங்கள் பிறக்கின்றன. தவிர்த்திருக்கலாம். 

 

சின்னவர் ரஹ்மான் தன்னை உயர்த்திய தன் இனத்துக்கு திரும்பச் செய்கிறார் - பல வழிகளில். வந்தே மாதரம், செம்மொழியான தமிழ்மொழியாம், மூப்பில்லா தமிழே தாயே என தன் மொழிக்கும், இனத்திற்கும், நாட்டிற்கும் மனமுவந்து பல இசைப்பணிகள் ஆற்றிக்கொண்டிருக்கிறார்.  இசைக்கல்லூரி வைத்து அடுத்தத் தலைமுறைக்கு இசை பயிற்றுவிக்கிறார். அரசுப் பள்ளியில் பயிலும் ஏழை மாணவ மாணவியரை அழைத்து வந்து மேற்கத்திய சாஸ்திரிய இசையைப் பயிற்றுவித்து இன்று அவர்களை சர்வதேச தளத்திற்கு உயர்த்தி அரிய அங்கீகாரத்தையும், வாழ்வாதாரத்தையும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். அதுபோல ஆக்கப்பூர்வமான ஏதாவது ஒன்றை இந்த இனத்துக்குச் செய்ய முயலலாம் - இதைப் போன்றவைகளை விட்டுவிட்டு.... என்று பதிவிட்டுள்ளார்
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“அப்போதான் இளையராசான்னு பேரை கேக்கிறேன்” - நினைவலைகளைப் பகிர்ந்த சேரன்

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
Cheran shared his memories about ilayaraja

இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது. கனெக்ட் மீடியா, பி.கே. ப்ரைம் புரடக்‌ஷன் மற்றும் மெர்குரி மூவிஸ் என மூன்று நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்தில், இளையராஜா கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார். இளையராஜா எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. அறிவிப்பு போஸ்டர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.

ராக்கி, சாணிக் காயிதம், கேப்டன் மில்லர் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் அருண் மாதேஷ்வரன் இயக்கும் இப்படத்தின் தொடக்க விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில், கமல்ஹாசன், தனுஷ், இளையராஜா, பாரதிராஜா, வெற்றிமாறன், அருண் மாதேஷ்வரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இளையராஜா கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கும் தனுஷ் புகைப்படம் கொண்ட போஸ்டரை கமல்ஹாசன் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தார். 

இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவாக்குவதற்கு பலரும் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் சேரன், தன்னுடைய நினைவலைகளைப் பகிரிந்து வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது, “சின்ன வயசுல ஊர்ல நாடகம் போட்டா முதல்ல போடுற பாட்டு மச்சானை பாத்தீங்களா தான்.. படம் அன்னக்கிளி. அப்போதான் இளையராசான்னு பேரை கேக்கிறேன். புதுப்பய பாட்டு போட்டிருக்கான்னு எங்க ஊரு பெரியவங்க சொல்றாங்க.

அப்பறம் கறுப்பு வெள்ளைல போட்டோ பாக்குறேன். ஒருத்தர் மீசை இல்லாம ஹிப்பி ஸ்டைல், பாபி காலர் சட்டைல அழகா சிரிக்கிறார். அவர் மேல பிரியம் வருது. (அவர்கூட பின்னாளில் பணிபுரிய போறேன்னு அப்போ தெரியாது). எனக்கு பிடிச்ச சிவாஜிக்கு பாட்டு போடுறாரு. தியாகம் படம். தேன் மல்லிப்பூவேன்னு... படம் வெறித்தனமா ஓடுது. ராசா பாட்டுத்தான் காரணம்னு சொல்றாக. அந்த ராசா அப்போ எப்படிலாம் இருந்திருப்பார்னு 2025ல பாக்க போறோம். சினிமா மட்டுமே பார்வையாளனுக்கு நினைக்க முடியாத ஆச்சரியங்களை தரும். இளையராஜா அவர்களின் வாழ்க்கை சிறப்பை படமாக்க முயன்றிருக்கும் தனுஷ் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள். ஒரு சாமானியனின் வெற்றியாய் வளரட்டும். இளையராஜா வரலாறு...” என்று பதிவிட்டுள்ளார். 

Next Story

பண்ணைபுரம் கொண்டுசெல்லப்படும் பவதாரிணியின் உடல்

Published on 26/01/2024 | Edited on 26/01/2024
Bhavatharini's body being taken to pannaipuram

பிரபல பாடகியும் இசைஞானி இளையராஜாவின் மகளுமான பவதாரிணி கடந்த சில மாதங்களாகப் புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் தொடர் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில், இலங்கையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்த அவர், சிகிச்சை பலனின்றி ஜனவரி 25 ஆம் தேதி மாலை உயிரிழந்துள்ளார். கடந்த 1984 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான மை டியர் குட்டிச்சாத்தான் என்ற திரைப்படம் மூலம் பாடகியாக அறிமுகமானவர் பவதாரிணி.

இசைஞானி இளையராஜாவின் செல்ல மகளான இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென உடல் நலக்கோலாறு ஏற்பட்டது. இது தொடர்பாக மருத்துமனைக்கு சென்றபோது அவருக்கு புற்றுநோய் வந்திருப்பதாகக் கூறி மருத்துவர்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர். இதனால், அதிர்ச்சியில் உறைந்த இளையராஜா மற்றும் அவரது குடும்பத்தார், அவரை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டுமென்று தீவிர முயற்சி எடுத்துள்ளனர். அதன்படி, இந்த நோய்க்கு இலங்கையில் சிறந்த மருத்துவம் அளிப்பதாகத் தெரிந்துள்ளது. இதனையடுத்து, பவதாரிணிக்கு ஆயுர்வேத சிகிச்சை மேற்கொள்வதற்காக அவரது குடும்பத்தினர் இலங்கை கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சைப் பெற்று வந்த பவதாரிணி சிகிச்சை பலனின்றி கடந்த 26 ஆம் தேதி மாலை 5.20 மணியளவில் உயிரிழந்துள்ளார். இந்தச் செய்தியைக் கேட்டு அவரது குடும்பத்தார் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

விமான மூலம் சென்னை விமான நிலையம் கொண்டுவரப்பட்ட பவதாரணியின் உடலானது அவரது இல்லம் உள்ள அமைந்துள்ள தி நகர் பகுதிக்கு கொண்டுவரப்பட்டது. இதனால் அந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். பிரபலங்களும் அஞ்சலி செலுத்த அங்கு வந்த வண்ணம் உள்ளனர். இதனால் அங்கு பாதுகாப்புப் பணிக்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து அவரது உடலுக்கு பல்வேறு பிரபலங்களும் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் பவதாரணியின் உடலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து அவரது உடலானது இன்று தேனி எடுத்துச் செல்லப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தேனியில் உள்ள இளையராஜாவின் சொந்த ஊரான பண்ணைபுரத்தில் அவரது தாயார் மற்றும் மனைவி ஆகியோரின் நினைவிடத்திற்கு இடையே பவதாரணியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக பண்ணைபுரத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.