
திண்டுக்கல்லில் உள்ள மாவட்ட கிளை சிறையில் ஜெயிலராக ராஜேந்திரன் இருந்து வருகிறார். இந்த சிறைச்சாலையில் 182 கைதிகள் உள்ளனர். இந்த நிலையில் சிறையில் உள்ள கைதிகளை பார்க்க வரும் உறவினர்களிடம் ஜெயிலர் ராஜேந்திரன் மற்றும் காவல்துறையினர் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே கைதிகளை பார்க்க அனுமதிக்கப்படுகின்றனர். கைதிகளை ஜெயிலர் மற்றும் பணியில் உள்ள காவலர்கள் டார்ச்சர் செய்வதாகவும், கைதிகளுக்கு உறவினர்கள் கொடுத்துவிடுகின்ற பொருட்கள் அனைத்தும் சரியாக சென்று சேர்வது இல்லை என்றும், சரியாக உணவு வழங்குவதில்லை என்றும் குற்றச்சாட்டு இருந்து வந்தது.
இந்த நிலையில், இன்று காலை 150க்கும் மேற்பட்ட கைதிகள் உணவு அருந்தவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனிடையே சிறையில் உள்ள கைதி ரவிக்குமாரை பார்க்க வந்த அவரது மனைவி, சிறைச்சாலை அதிகாரியின் நடவடிக்கையை கண்டித்து திண்டுக்கல் மாவட்ட கிளை சிறை வாயல் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திண்டுக்கல் மேற்கு காவல் நிலைய போலீசார், அப்பெண்ணை சமாதானம் செய்து தர்ணா போராட்டத்தை கைவிட செய்தனர்.
அப்போது ஜெயிலர் ராஜேந்திரன் தனது வங்கிக் கணக்கை கொடுத்து அதில் பணம் போட சொன்னதாகவும் கைதி ரவிக்குமாரின் மனைவி போலீசாரிடம் கூறினார். அதோடு, ஜெயிலர் ராஜேந்திரன் பேசிய ஆடியோவையும் போட்டு காண்பித்தார். அதைக் கேட்டு விசாரணைக்கு வந்த போலீசாரே அதிர்ச்சி அடைந்துவிட்டனர். மேலும் அப்பெண் தெரிவித்த குற்றச்சாட்டு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இப்படி மாவட்ட சிறைச்சாலை முன் ஒரு கைதியின் மனைவி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.