Skip to main content

போலீஸ்காரர்களுக்கு சிறை தண்டனை; 15 வருடங்களுக்குப் பிறகு பட்டியலினப் பெண்ணுக்குக் கிடைத்த நீதி

Published on 01/11/2022 | Edited on 01/11/2022

 

Jail sentence for policemen who women case Thoothukudi

 

பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காவல்நிலையத்தில் வைத்து கொடுமைப்படுத்திய போலீஸ்கார்களுக்கு 15 வருடங்களுக்குப் பிறகு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

 

தூத்துக்குடி மாவட்டம், காசிலிங்கபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் பாப்பா. 49 வயது விதவைப் பெண்ணான இவர் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர். கணவனை இழந்த பாப்பா தனது வாழ்வாதாரத்தைப் பாதுகாத்துக் கொள்ளக் கூலி வேலை செய்து வந்துள்ளார். இவருடைய ஒரே மகள் சாந்தி கேரள மாநிலம் மூணாரில் வசித்து வருகிறார். 

 

இந்நிலையில், கடந்த 2007 ஆம் ஆண்டு நவம்பர் 2 ஆம் தேதியன்று பாப்பாவின் பக்கத்து வீட்டுப் பெண் லட்சுமி என்பவருடைய வீட்டில் இரண்டரை பவுன் தங்க நகை காணாமல் போனது. இது குறித்து புளியம்பட்டி காவல்நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்டது. அப்போது காணாமல் போன நகை குறித்து விசாரணை செய்வதற்காக அன்றைய தினம் மதியம் ஒரு மணியளவில் புளியம்பட்டி இன்ஸ்பெக்டர் விமல்காந்த் மற்றும் எஸ்.ஐ காந்திமதி ஆகியோர்  காசிலிங்கபுரத்துக்கு வந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் அதிகாரிகள் பாப்பாவின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்திருக்கிறார்கள். நகை பற்றிய விசாரணை என்ற பெயரில் வீட்டை சேதப்படுத்தியதுடன் பாப்பாவை அடித்து உதைத்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

 

‘காணாமல் போன நகையை எங்க வெச்சி இருக்க. ஒழுங்கா நகையைக் கொடுத்துடு’ என்று தகாத வார்த்தைகளால் பாப்பாவை டார்ச்சர் செய்துள்ளனர். அப்போது, வயது மூத்தப் பெண் என்று கூட பார்க்காமல் லத்தியாலும், பூட்ஸ் காலாலும் பாப்பாவைக் கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளனர். போலீசாரின் இந்தக் கொடூர தாக்குதலை தாங்க முடியாத பாப்பா அலறித் துடித்துள்ளார். அதன் பிறகு, காவல்நிலையத்துக்கு காசிலிங்கபுரம் கிராம மக்கள் திரண்டு வந்த நிலையில், அன்றிரவு 8 மணியளவில் பொதுமக்களிடம் பாப்பாவை ஒப்படைத்தனர். பின்னர், போலீசாரின் தாக்குதலில் பலத்த காயமடைந்த பாப்பா 22 நாட்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். மேலும், பாப்பாவின் இரண்டு கைகளும், கால் விரல்களும் உடைந்ததாக டாக்டர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 

இதில் பாதிக்கப்பட்ட பாப்பா போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி நெல்லை வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் தனிநபர் வழக்கு தொடர்ந்திருந்தார். இதற்கிடையே இன்ஸ்பெக்டர் விமல்காந்த் ஏ.டி.எஸ்.பி.யாக பதவி உயர்வு பெற்று சென்னை காவல் தலைமையிடத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற நிலையில் சென்னையில் வசித்து வருகிறார். அதே சமயம் சப்-இன்ஸ்பெக்டராகப் பணியாற்றிய காந்திமதி பதவி உயர்வு பெற்று கன்னியாகுமரி மாவட்டம், ராஜாக்கமங்களம் காவல் நிலையத்தில் தற்போது இன்ஸ்பெக்டராகப் பணிபுரிந்து வருகிறார். அதன் பிறகு, இந்த வழக்கு தூத்துக்குடி மாவட்டப் பட்டியலின மற்றும் பழங்குடியின வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. 15 ஆண்டுகளாக இந்த வழக்கு நடைபெற்று வந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட காவல் ஆய்வாளர் விமல்காந்த் மற்றும் உதவி ஆய்வாளர் காந்திமதி ஆகியோருக்குத் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ. 25 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சுவாமிநாதன் தீர்ப்பளித்தார்.

 

இதனையடுத்து,  பாப்பாவின் வழக்கறிஞர் அதிசயகுமார் கூறும்போது, “விசாரணை என்ற பெயரில் பாப்பாவைக் கடுமையாகத் தாக்கியிருக்கிறார்கள். அன்றைய இரவு, ஊர் முக்கியப் புள்ளிகள் இரண்டு பேரை வரவழைத்தப் போலீசார், அவர்களிடம் பாப்பாவை நல்ல முறையில் ஒப்படைத்ததாக எழுதியும் வாங்கியிருக்கிறார்கள்.” என்றார். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸ் அதிகாரிகளுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; அதிகாரிகளுக்கு நீதிமன்றம் கெடு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court is bad for the authorities for Tuticorin firing

தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் 18-5-2022 அன்று அளித்த அறிக்கையின்மீது, தமிழக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டன. மேலும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இதற்கிடையே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து எடுத்து விசாரித்த வழக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் முடித்து வைக்கப்பட்டதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதனையடுத்து, இந்த வழக்கு கடந்த மார்ச் 23 விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், “இது குறித்த அறிக்கை தயாராகிவிட்டதால் அடுத்த விசாரணையின் போது சமர்ப்பிக்கப்படும்” எனப் பதில் அளிக்கப்பட்டது. இதனையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கை குறித்த விவரங்களை மனுதாரருக்கு அறிக்கையாக தர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்த நிலையில், நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் கூறியதாவது, ‘வழக்கில் எதிர் மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்ட சில அதிகாரிகளுக்கு நீதிமன்ற நோட்டீஸ் சென்றடையவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்ட அதிகாரிகள் அனைவரும் ஜூன் 7ஆம் தேதிக்குள் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கு விசாரணையை ஜூன் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். 

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்