Jagabar Ali case raid in the homes of the arrested

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரான ஜெகபர் அலி, திருமயம் தாலுகாவில் தொடர்ந்து கனிம வளம் கொள்ளை நடப்பதாக மாவட்ட நிர்வாகத்திற்குப் பல முறை மனு கொடுத்து வந்துள்ளார். இதனால், அவர் பல்வேறு அச்சுறுத்தலுக்கு ஆளாகி வந்தார் என்று கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் தான் கடந்த ஜனவரி 17ஆம் தேதி (17.01.2025) ஜெகபர் அலி தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த லாரி ஒன்று ஜகபர் அலி மீது மோதி விபத்தானது. இந்த விபத்தில், ஜெகபர் அலி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

ஜெகபர் அலியின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகக் கூறி, அவரின் உறவினர்கள் திருமயம் அரசு மருத்துவமனையில் போராட்டம் நடத்தினர். அப்போது போலீசார் உரிய விசாரணை நடத்தி உண்மையைக் கண்டறிய வேண்டும் எனத் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து ஆர்.ஆர். நிறுவனங்களின் உரிமையாளர்களான ராசு, அவரது மகன் சதீஷ், ராமையா, ராசுவின் டிப்பர் லாரி வைத்துள்ள நண்பர் முருகானந்தம் மற்றும் அவரது ஓட்டுநர் காசி ஆகிய 5 பேர் மீதும் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த ராமையாவை தவிர மற்ற 4 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மற்றொருபுறம் ஜெகபர் அலி கொலை வழக்கை விசாரித்து வந்த புதுக்கோட்டை போலீசார் சார்பில் அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றக்கோரி டி.ஜி.பி. சங்கர் ஜிவாலுக்கு பரிந்துரை செய்திருந்தார். அதன்படி இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி. உத்தரவிட்டிருந்தார். அதே சமயம் போலீசாரால் தொடர்ந்து தேடப்பட்டு வந்த ராமையா நமணசமுத்திரம் காவல் நிலையத்தில் சரணடைந்தார். அதே சமயம் ஜெகபர் கொலை வழக்கின் சிபிசிஐடி விசாரணை அதிகாரியாக ஆய்வாளர் புவனேஸ்வரி நியமிக்கப்பட்டார்.

Advertisment

இவர் தலைமையிலான சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் கொண்ட குழுவினர் இந்த வழக்கு தொடர்பாகக் கடந்த 24ஆம் தேதி (24.01.2025) முதல் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேரின் வீடுகளில் சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் இன்று (05.02.025) ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேரும் புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் (03.02.2025) ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது நீதிபதி அவர்கள் 5 பேருக்கும் 3 நாள் சி.பி.சி.ஐ.டி. காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.