அரசு ஊழியர், ஆசிரியர் ஆகியோர் மீது ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் மற்றும் கைதாகி சிறை சென்று திரும்பியவர்களுக்கு தற்காலிக பணியிடை நீக்க உத்தரவினை அரசு வழங்கி வருகின்றது. போராட்டத்தை கைவிட்டு திரும்பிய நிலையில் இதனை அரசு திரும்ப பெறவேண்டுமென தமிழக முதல்வருக்கு ஜாக்டோ ஜியோ வேண்டுகோள் விடுத்து தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது.

Advertisment

Jacto Geo's request to govt

Advertisment

சிவகங்கை மாவட்டம் சிவங்கங்கை அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் அரசு ஊழியர், ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ மாவட்ட உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் கூட்டம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முத்துப்பாண்டியன், ஜோசப் சேவியர் தலைமையில் நடந்தது. மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர்கள் செல்வக்குமார், முத்துச்சாமி முன்னிலை வகிக்க, மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் சங்கர், இளங்கோ உள்ளிட்ட மாவட்ட உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் சிறை சென்று மீண்டவர்களுக்கு நிதியுதவி மாவட்ட வழங்கி தீர்மானங்களை நிறைவேற்றினர்.

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஜனவரி 22 முதல் தொடர் வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டங்களில் ஜாக்டோ ஜியோ ஈடுபட்டு வந்தது. இந்நிலையில் மாணவர்கள் நலன் கருதியும், தமிழக முதல்வரின் வேண்டுகோளை ஏற்றும் போராட்டத்தை ஜன-30 அன்று விலக்கிக்கொண்டது. போராட்டத்தை கைவிட்டு பள்ளிக்கு திரும்பிய ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் மற்றும் கைதாகி சிறை சென்று திரும்பியவர்களுக்கு தற்காலிக பணியிடை நீக்க உத்தரவை மாவட்ட நிர்வாகம் வழங்கியுள்ளது. இந்த உத்தரவுகள் அனைத்தையும் தமிழக முதல்வர் அவர்கள் விலக்கிக்கொண்டு அனைவரையும் பழைய பணியிடத்திலேயே பணியாற்ற அனுமதி வழங்க வேண்டும்.

மாநில கூட்டமைப்பு தமிழக அமைச்சர்கள் மற்றும் துறை செயலாளர்களுடன் நடந்த பேச்சு வார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாலும், தமிழக முதல்வர் அவர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாலும் அதுவரை மாவட்ட நிர்வாகம் எடுத்து வரும் நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களையும், முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களையும் இக்கூட்டமைப்பு கேட்டுக்கொள்கிறது. சிறை சென்று மீண்டுள்ள 62 அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்குவதோடு, அவர்கள் குடும்பங்கள் பாதிக்காத வகையில் உதவிகளை அனைத்து உறுப்பினர்களும் மேற்கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.