Skip to main content

"எல்லாம் போச்சு... எங்களுக்கு பொங்கலே இல்லை!" - வேதனையில் விருதுநகர் விவசாயிகள் 

Published on 16/01/2021 | Edited on 16/01/2021

தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் தனிப்பெரும் விழா தைப்பொங்கல். உழவர்கள், உழைக்கும் மக்களின் இயற்கை தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும் உழவுக்குத் துணை செய்யும் மற்ற உயிர்களுக்கும் நன்றி கூறும் விதமாக இவ்விழா  கொண்டாடப்படுகிறது.

 

ஆடிப்பட்டம் தேடி விதைத்து, விதைத்ததை அறுவடை செய்து பயன் அடையும் மாதம் தை மாதம் ஆகும். அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியைச் சர்க்கரை, நெய் கலந்து புதுப்பானையில் பொங்கலிட்டு சூரியனுக்கும், மாட்டுக்கும் படைத்து குடும்பத்தோடு உண்டு மகிழ்வது வழக்கம். நீர் வளம் கொண்ட இடங்களில் மூன்று வேளாண்மை நடக்கும். நீர் வளம் இல்லா இடங்களில் மழை நீரைப் பயன்படுத்தி ஒரு வேளாண்மைதான் விளைவிக்க முடியும். அதுவும் தைமாதத்தில்தான் அறுவடை செய்யப்படும்.

 

பொங்கல் கொண்டாடுவதன் பின்னுள்ள நோக்கமும் முழுமையான பழக்கமும் தெரியாதவர்கள் கூட நம் பாரம்பரியத்தைப் பின்பற்ற வேண்டுமென்ற எண்ணத்திலும் மகிழ்ச்சியிலும் கொண்டாடி வருகின்றனர்.

 

கடந்த வருடம் முழுவதும் நாடே கரோனாவினால் வீட்டிலே முடங்கி இருந்தபோதும் தொடர்ந்து விருப்பத்துடன் வெளியே வந்து உழைத்தவர்களுள் விவசாயிகள் மிக முக்கியமானவர்கள். கரோனா ஊரடங்கால் ஏற்பட்ட பொருளாதார இழப்பிலிருந்து மெல்ல மீண்டு வந்து ஊக்கமாகப் புத்தாண்டு, பொங்கல் என மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

 

இந்நிலையில் சமீபமாகத் தொடர்ந்து விடாமல் மழை பெய்த காரணத்தால் தமிழகத்தில் பல விவசாயிகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது. இதனால் அவர்கள் கொண்டாட வேண்டிய இந்தத்  திருவிழா அவர்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

தமிழகத்தில் பல இடங்களில் விவசாயம் பாதிப்பு அடைந்த போதிலும் விருதுநகர் மாவட்டத்தில் செவல்பட்டி உள்ளிட்ட சில இடங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் நாம் அனைவரும் கூர்ந்து கவனிக்க வேண்டிய ஒன்று. அந்த ஊர் மக்களிடம் இதுகுறித்து பேசியபோது, "மற்ற இடங்களில் மூன்று போகம் விளைச்சல் செய்கிற நிலையில், விருதுநகர் போன்ற வறண்ட பூமியில் ஒரு போகம் விளைந்தாலே அரிது. காரணம் நாங்கள் முழுவதுமாய் மழையை நம்பியே விளைவிக்கிறோம். அப்படி விளைந்த மக்காச்சோளம், உளுந்து போன்ற பயிர்கள் அறுவடை செய்ய வேண்டிய இந்த மாதத்தில் அளவுக்கு மீறிய கடும் மழையால் அனைத்து பயிர்களும் அழுகி எதற்கும் உபயோகம் ஆகாத நிலை உருவாகிவிட்டது.

 

இந்த மாவட்டத்தில் மட்டும் பாதிக்கப்பட்ட நிலம் 300 ஏக்கருக்கும் மேலாக இருக்கும். இதனால் வருடத்திற்கு ஒரு முறைமட்டுமே விவசாயம் செய்து வாழ்ந்து வரும் எங்க ஊர் மக்களின் வாழ்வாதாரம் கடும் பாதிப்புக்குள்ளாகியிருக்கு. எல்லாம் போச்சு... எங்களுக்குப் பொங்கலே இல்லை" என்று வேதனையுடன் கூறுகிறார்கள்.

 

அவர்கள் இல்லையேல் நாம் இல்லை என்பதை நினைவில் கொண்டு அவர்களுக்கு உரிய உதவியையும் நிவாரணத்தையும் அரசு கிடைக்கச் செய்ய வேண்டும் என்பது அம்மக்களின் கோரிக்கையாக உள்ளது.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'ஒரே குடும்பத்தில் 90 பேர்'-வண்டி கட்டிக்கொண்டு வாக்களிக்க வந்த சம்பவம்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'90 people in the same family'-incident of carting and coming to vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் விருதுநகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 90 பேர் வண்டி கட்டிக் கொண்டு சென்று வாக்களித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பூசாரி நாயக்கன்பட்டி ஊரில் உள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 90க்கு மேற்பட்டோர் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் கார்டுடன் வண்டி கட்டிக்கொண்டு வாக்களிக்க வந்தனர். விவசாயத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் 100 பேர் கொண்ட கூட்டுக் குடும்பத்தினர் வாக்களித்தனர்.

Next Story

விருதுநகர் தொகுதி; ஜனநாயகக் கடமையை நிறைவேற்றும் மக்கள் (படங்கள்)!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024

 

விருதுநகர் கூரைக்குண்டு, அரசு தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில்,விருதுநகர்  மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் இ.ஆ.ப.,  தனது வாக்கினைப்  பதிவு செய்தார்.

மல்லங்கிணர் அரசுத் தொடக்கப்பள்ளியில் அமைச்சர் தங்கம் தென்னரசு,தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். திருப்பரங்குன்றம் – திருநகரிலுள்ள சீதாலட்சுமி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் வாக்களித்தார். திருத்தங்கல் கே.எம்.கே.ஏ.பள்ளியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வாக்களித்தார்.

விருதுநகர் பாராளுமன்றத் தொகுதியில் மொத்தம் 15,01,942 வாக்காளர்கள் உள்ளனர். மொத்தம் 1689 மையங்களில் வாக்காளர்கள் வாக்களித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏற்பாடு செய்யப்பட்ட சக்கர நாற்காலிகளில் மாற்றுத்திறனாளிகளும் முதியோரும் வாக்களித்துள்ளனர்.  இந்தத் தேர்தலில் 18 வயது நிரம்பிய வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள முதல் முறை, இளம் தலைமுறை வாக்காளர்கள்,  மூத்த வாக்காளர்கள், திருநங்கைகள், பெண்கள், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் என அனைத்துத் தரப்பு வாக்காளர்களும் வாக்களித்து, தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி வருகின்றனர். 

விருதுநகர் பாராளுமன்றத் தொகுதி  வாக்குப் பதிவு  மதியம் 1.00 மணி நிலவரப்படி விருதுநகர்- 40.19%, திருப்பரங்குன்றம் - 39.33%, திருமங்கலம் - 41.70%, சாத்தூர் - 44.32%, சிவகாசி- 36.14%, அருப்புக்கோட்டை - 41.31%, என மொத்தம் - 40.45% வாக்குகள் பதிவாகியுள்ளது.