ADVERTISEMENT

“விஜயகாந்த்தை பசியாற்றிய வள்ளல் என்று எல்லோரும் புகழ்வது நெகிழ்ச்சியாக இருக்கிறது” - ஏ.ஆர். ரஹ்மான்

09:49 PM Dec 28, 2023 | prabukumar@nak…

நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான, விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். விஜயகாந்தின் மருத்துவ பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், விஜயகாந்த் இன்று (28-12-23) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

இவரது மறைவு தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கூட்டம் கூட்டமாக வந்து அஞ்சலி செலுத்தி வந்தனர். இதையடுத்து அவரது உடல் தேமுதிக அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது உடலுக்கு முழு அரசு மரியாதை செய்யப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ADVERTISEMENT

அதே சமயம் கோயம்பேட்டில் சென்னை காவல்துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, விஜயகாந்தின் உடல் இடமாற்றம் செய்வது குறித்து குடும்பத்தினர் முடிவு செய்வர் எனத் தெரிவித்திருந்தார். இதனையடுத்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கு ஏதுவாகச் சென்னை தீவுத் திடலில் அவரது உடல் வைக்கப்பட உள்ளது. நாளை (29.12.2023) அதிகாலை 6 மணிக்கு தீவுத்திடலுக்கு விஜயகாந்த் உடல் மாற்றப்படும் என தேமுதிக சார்வில் அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பின்னர் மதியம் 1 மணியளவில் தீவுத்திடலில் இருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டு பூந்தமல்லி சாலை வழியாக கோயம்பேடு செல்கிறது எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில், “திரைத்துறையில், கதாநாயகனாக தான் உண்ணும் அதே தரமான உணவே எல்லோருக்கும் வழங்கப்பட வேண்டும் என்று போராடி வென்றார். பசியாற்றிய வள்ளல் என்று இன்று எல்லோரும் அவரைப் புகழ்வது நெகிழ்ச்சியாக இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT