Skip to main content

குற்றவாளி எஸ்.வி.சேகருக்கு பாதுகாப்பளிப்பது மகா வெட்கக்கேடானது - கி.வீரமணி

Published on 04/06/2018 | Edited on 04/06/2018
svs

 

தமிழகத்தில் ஜாதி வன்முறையை ஏற்படுத்தத் துடிக்கும் பார்ப்பனியமும் - ஆரியமும் கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் என்றும், இவற்றை முன்கூட்டியே அறிந்து தமிழக அரசும், காவல்துறையும் எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும் என்றும் தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:

 

குன்னமிர்டல் எழுதிய ஆசிய நாடகம்
 ஜாதி - தீண்டாமை முற்றாக ஒழிக்கப்பட்டாலொழிய இந்திய நாட்டின் வளர்ச்சி - எவ்வளவுதான் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டாலும், பெருமளவில் வளர்ச்சி ஏற்படவே ஏற்படாது என்றார் - சிங்கப்பூரை நவீன நாடாக ஆக்கிய மிகப்பெரிய அரசியல் விற்பன்னரான லீக் குவான் க்யூ (Lee Kuan Que) அவர்கள் - இந்தியாவைப்பற்றி சில ஆண்டுகளுக்குமுன் அவர் எழுதிய நூல் ஒன்றில்.

 

ஜாதியை ஒழிக்கவேண்டுமானால்
சமுதாய அறுவை சிகிச்சைமூலமே அது முடியும்

ஆசிய நாடகம் (‘Asian Drama’) என்ற தலைப்பிட்டு எழுதிய பொருளாதார நூல் ஒன்றில், நோபல் பரிசு பெற்ற சுவீடன் நாட்டு அறிஞரான குன்னர்மிர்டல் அவர்கள், இந்தியாவில் ஜாதியை ஒழிக்கவேண்டுமானால், அதற்கு ஒரு சமுதாய அறுவை சிகிச்சைமூலமே அது முடியும் (Caste is deeply entrenched in Indian Tradition and it could be removed only by a drastic surgery) என்று எழுதினார்! (இது தனி நூல்)  தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர் ஆகிய புரட்சியாளர்களுக்கு நோபல் பரிசு கிடைக்காவிட்டாலும், அவர்களது கருத்துகளுக்கு (மேற்காட்டியபடி) நோபல் பரிசு கிடைத்துள்ளது என்றே சொல்லவேண்டும்!

 

சமூக விரோத செயல் வேறு உண்டா?

தமிழ்நாட்டில் பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். காலூன்றிட முடியவில்லை என்பதால், ஒரு குறுக்கு வழியில் அமைதிப் பூங்காவான தமிழ் மண்ணில் - பெரியார் மண்ணில் - ஜாதி, மதக் கலவரங்களை - திருவிழாக்களைப் பயன்படுத்தி - இரண்டு தனி நபர் அல்லது சில நபர்கள் மத்தியில் ஏற்பட்ட தகராறுகளை வைத்து, ஜாதி, மதக் கலவரங்களாகவே மாற்றி, அதில் குளிர் காய்ந்து தங்களது அமைப்பிற்கு ஆட்களைச் சேர்க்கும் அற்பத்தனங்களை அரங்கேற்றுகின்றனர். இதைவிட மிகப்பெரிய சமூக விரோத செயல் வேறு உண்டா? இத்தகையவர்களைவிட பெரும் விஷக் கிருமிகள் வேறு எங்கு உண்டு?

சிவகங்கை மாவட்டம் கச்சநத்தம் என்ற கிராமத்து விழாவில், தனி நபர்களுக்குள் ஏற்பட்ட வாய்த்தகராறு கைகலப்பாகி, பிறகு திட்டமிட்ட ஜாதி ஆணவப் படுகொலைகளாக மாற்றப்பட்டு, தாழ்த்தப்பட்ட சகோதரர்கள் மூவர் வெட்டி வீழ்த்தப்பட்டதும், கலவர பூமியாக அப்பகுதி மாற்றப்பட்டதும் எவ்வகையில் நியாயம்? (கால்மேல் கால் போட்டு உட்கார்ந்திருந்தது சமூகக் குற்றமா?)

 

முதலைக் கண்ணீர் வடிக்கும் ஆர்.எஸ்.எஸ். ஏடு!

அதுபோலவே, தேனி அருகில் தாழ்த்தப்பட்ட சமூக சகோதர்களும், சிறுபான்மை சகோதரர்களும், இரண்டு கைகள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டு, ஒன்றை ஒன்று தாக்கிக் கொள்ளும் கேலிக்கூத்துப்போல நிகழ்வுகள் (திருவிழாக்களின்போது) நடைபெற்றதை - ஆர்.எஸ்.எஸ். ஏடு பெரிதாக ஊதிப் பெருக்கி, ஆகா என்ன அநியாயம்? என்று ஒடுக்கப்பட்டவர்களுக்காக முதலைக் கண்ணீர் விடுகின்றது.

குஜராத் உன்னாவில், உ.பி.யில் இன்னும் பற்பல இடங்களில் பசுப் பாதுகாப்பு என்ற பெயரால் கலவரம் செய்யும் இந்தக் காவிக் கும்பல், இங்கே தாழ்த்தப்பட்டவர்களுக்கும், இசுலாமியர்களுக்கும் பிரச்சினை என்றவுடன், அதை ஊதி ஊதிப் பெரிதாக்கிட முயலுகின்றது. தமிழ்நாடு அரசின் காவல்துறை சட்டம் - ஒழுங்குப் பிரிவும், நுண்ணறிவுப் பிரிவும் ஒருங்கிணைந்து முன்கூட்டியே மோப்பம் பிடித்தும், தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டும், வருமுன்னர் காக்கும் முறைகளைக் கையாள முன்வரவேண்டும்!

 

தமிழக அரசிற்கும் - காவல்துறைக்கும் பெருமை சேர்ப்பதா?

ஒரு சார்பு நிலை கூடவே கூடாது! தமிழக அரசின் நடவடிக்கை குறிப்பாக காவல்துறைக்குப் பெருமை சேர்ப்பதாகுமா? அவர்கள் கைகள் கட்டப்பட்டுள்ளன என்பதுதான் பளிச்சென்று தெரியுமே! எடுத்துக்காட்டாக எஸ்.வி.சேகர் என்ற தேடப்படும் குற்றவாளி காவல்துறை பாதுகாப்புடன் ஜாலியாக காரில் பவனி வருவது) தமிழக அரசிற்கோ பெருமை சேர்ப்பதா?

குற்றவாளிக்குப் பாதுகாப்பளிப்பது மகா வெட்கக்கேடானது

ஒரு பாடகர் கோவன்மீதும், தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் வேல்முருகன்மீதும் பாயும் சட்டம், பெண் செய்தியாளர்களைப்பற்றி அவதூறு பரப்பிய அசிங்க மனிதர் ஒருவரது முன்ஜாமீன் மனு, உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தால் புறக்கணிக்கப்பட்டும்கூட, சும்மா வேடிக்கை பார்ப்பதும், மாறாக குற்றவாளிக்கே பாதுகாப்பளிப்பதும் மகாவெட்கக்கேடானதல்லவா?
தூத்துக்குடியில் குண்டடிப்பட்டு மருத்துவமனைக்குச் சென்று பார்த்து ஆறுதல் கூறச் சென்ற அரசியல் கட்சித் தலைவர்கள்மீது வழக்குப் பதிவு செய்வது எவ்வகையில் நியாயமாகும்?

 

ஜனநாயகத்தில் துப்பாக்கித் துரைத்தனம் விரும்பத்தக்கதா? அதனால் ஆட்சிகள் நீடிப்பதற்குப் பதிலாக தங்கள் நாட்களைத் தாங்களே எண்ணிக் கொள்ளவேண்டி அல்லவா நேரிடும்!
ஜாதி முறையின் தத்துவமே, மதங்களின் வரலாறே கலவரம், வன்முறை இவைகளைத் வைத்துத்தான் தங்களைக் காப்பாற்றிக் கொள்ளும்; பிரிவுக்குள் பிரிவு - அடுக்குமுறை -Graded inequality   என்பதுதானே ஜாதியின் கோட்பாடு!

 

பார்ப்பனியம் - ஆரியம் கண்ணுக்குத் தெரியாத கிருமிகள்

கலவரம் ஏற்படுத்தும் பார்ப்பனியம் - ஆரியம் நேரிடையாக கண்ணுக்குத் தெரியாமல் - கிருமிகளைப்போல் நோயை உருவாக்கி, உள்ளே ஒளிந்துகொள்ளும் வித்தையை - விஞ்ஞான ரீதியாக செய்கிறது. இது புரியாத அப்பாவிகளும், அறியாதோரும், பார்ப்பனர் எங்களைத் தாக்குவதில்லை; மற்ற ஜாதிக்காரர்கள்தானே தாக்குகிறார்கள் என்றால், பக்கத்தில் இருப்பவர்களோடுதான் உரசல் ஏற்படுமே தவிர, தள்ளி மேலே இருப்பவர்களுடன் நேரிடையாக மோதல் வராதே!

 

பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலும், நீதியும் கிடைக்கவேண்டும்

இதை உணராமல், ஜாதி மதக் கலவரங்களை நமது சகோதரர்களாக ஊரில் நிரந்தரமாக நட்புறவுடன் வாழவேண்டியவர்கள் பகைமைத்தீ அழித்துவிட இடம் கொடுக்காமல், சம்பந்தப்பட்டவர்களின் பிரதிநிதிகளும், தமிழக அரசின் காவல்துறையும் நோயின் மூல காரணத்தை அகற்றி, தீர்வு கண்டு - தமிழ்நாட்டில் ஜாதி, மதக் கலவரத்திற்கு இடமின்றி,சமூக நல்லுறவும், நல்லிணக்கமும் நீடித்து நிலைத்திட அனைவரும் ஒத்துழைக்கவேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலும், நீதியும் கிடைக்கவேண்டும் - அலட்சியம் வேண்டாம்!’’
 

சார்ந்த செய்திகள்

Next Story

“பாதிப்புகளை மன்னிப்பினால் சரிக்கட்ட முடியாது” - எஸ்.வி. சேகர் மனுவைத் தள்ளுபடி செய்த ஐகோர்ட்

Published on 14/07/2023 | Edited on 14/07/2023

 

 court dismissed SV Shekhar's petition

 

பாஜக பிரமுகரும் நடிகருமான எஸ்.வி. சேகர் கடந்த 2018 ஆம் ஆண்டு பெண் பத்திரிகையாளர் குறித்துத் தரக்குறைவாகப் பேசி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதற்குக் கடுமையான எதிர்ப்பு எழுந்தது. இதனைத் தொடர்ந்து எஸ்.வி. சேகர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் இந்தியத் தண்டனைச் சட்டம் மற்றும் பெண்கள் மீதான கொடுமைகள் சட்டத்தின் கீழ் எஸ்.வி. சேகர் மீது வழக்குப் பதியப்பட்டது.

 

அதேபோன்று கடந்த 2020 ஆம் ஆண்டு சமூக வலைத்தளப் பக்கத்தில் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அவதூறாகப் பேசியது தொடர்பாகவும் யூட்யூபில் தேசியக் கொடியை அவமதித்தது தொடர்பாகக் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையிலும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் எஸ்.வி. சேகர் மீது வழக்குப் பதிந்தனர். இது தொடர்பான வழக்கு எம்.பி., எம்.எல்.ஏக்கள் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. 

 

இந்த நிலையில் இந்த வழக்குகளை எல்லாம் ரத்து செய்ய வேண்டும் என்று கூறி எஸ்.வி. சேகர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தனித்தனியே மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு வந்தபோது, சமூக வலைத்தளப் பதிவுகளை நீக்கிவிட்டு, அதற்காக மன்னிப்பும் கேட்டிருப்பதாக எஸ்.வி. சேகர் தரப்பில் வாதிடப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதி, பாதிப்பு ஏற்படுத்தியதை மன்னிப்பு மூலம் சரிக்கட்டிவிட முடியாது. தனக்கு வந்த தகவலை ஃபார்வர்டு செய்பவரே அதனால் ஏற்படும் பாதிப்புக்கு முழு பொறுப்பு. எஸ்.வி. சேகர் தாக்கல் செய்த ஆதாரங்களை ஏற்க வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதை சிறப்பு நீதிமன்றம்தான் முடிவெடுக்க வேண்டும் என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

 

 

Next Story

"சாதியை தூக்கிப் பிடிங்க தப்பில்லை" - எஸ்.வி. சேகர்

Published on 07/06/2023 | Edited on 07/06/2023

 

sv sekhar about caste

 

அறிமுக இயக்குநர் அஜித்குமார் இயக்கத்தில் கிஷோர் குமார், ஆர்ஷா சாந்தினி பைஜு நடிப்பில் திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள படம் 'முகை'. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் படக்குழுவினருடன் திரைப் பிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிகை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் எஸ்.வி. சேகர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். 

 

அப்போது எஸ்.வி. சேகர் பேசுகையில், "ஒரு படம் வெற்றி படமாக இருக்கலாம் அல்லது தோல்வி படமாக இருக்கலாம். தோல்வி படமாக இருந்தாலும் அது நல்ல படமாக இருக்க வேண்டும். 10 ரூபாய் போட்டு 10 கால் ரூபாய் வந்தாலும் அது வெற்றி படம் தான். ஆனால் அது நேர்மையாக இருக்க வேண்டும். நாம் என்ன செலவழிக்கிறோம் என்று நமக்கு தெரிய வேண்டும். ஏனென்றால் பாக்கெட்டில் இருந்து பணம் கொடுக்கும் ஒரே சாதி தயாரிப்பாளர் சாதி. மற்ற அனைவரும் பணம் வாங்கக்கூடிய இடத்தில் இருக்கிறார்கள். அவர்கள் கூடுதல் பொறுப்போடு இருக்க வேண்டும். நேர்மையாக சம்பாதித்தால் அந்த பணம் நம்மிடம் இருக்கும். 

 

சினிமாவில் ஒழுக்கத்தை தாண்டி நிறைய விஷயங்களை காட்டிக்கிட்டே இருக்கிறோம். முன்பெல்லாம் கடவுளை பற்றி ஆரம்ப காட்சி இருக்கும். இப்போதெல்லாம் டாஸ்மாக் காட்சி தான் இருக்கிறது. வெறும் பணத்துக்காக சினிமா எடுத்து சமூகத்தை கெடுப்பேன் என்றால் மிக மோசமான பாதிப்பு அவர்களுக்குத் தான். அதே போன்று சினிமாவில் ஜாதி ரீதியான படங்களை எடுப்பதை குறைத்து கொள்ளவும். எல்லா சாதிக்காரங்களும் படம் பார்க்க வேண்டும் என்றால் எல்லா சாதியினருக்கும் பிடித்த மாதிரி படம் எடுங்கள். சாதியை தூக்கிப் பிடியுங்கள் தப்பில்லை. அடுத்த சாதியை தவறாக பேசாதீர்கள். இந்தியா போன்று ஒரு சிறந்த நாடு எங்கேயும் கிடையாது" என்றார்.