Skip to main content

திருச்சியில் தொடரும் ஐடி ரெய்டு; விடிய விடிய சோதனை!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
IT Raid Continues in Trichy; Test at dawn!

பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் மிக பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில் மற்றொரு பக்கம் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது தொடர்பாக தொடர்ந்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அடங்கிய குழுக்கள் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது ஆளும் கட்சியாக இருக்கக்கூடிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைச்சர்களில் முக்கியமான ஒரு சில அமைச்சர்கள் பதவி வகிக்கும் துறைகளில் இருக்கக்கூடிய ஒப்பந்ததாரர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் நேற்று முதல் தொடர்ச்சியாக சோதனை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் நேற்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் செந்தில் நாதன் தேர்தல் வாக்குறுதி பட்டியல் வெளியிட்டபோது, அதில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தொட்டியம் ராஜசேகர் பேசியதாவது “விரைவில் அமைச்சர் நேரு இந்த திருச்சியை விட்டு புறப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை. அமலாக்கத் துறையும், வருமானவரித்துறையும் மிக விரைவில் அவரிடம் சோதனை நடத்தும்” என்று கூறினார். 

அவர் இந்தத் தகவலை கூறிய அதே வேளையில் நீர்வள ஆதாரத்துறையின் மூத்த பொறியாளர் பன்னீர் செல்வத்தின் வீட்டில் வருமானவரித்துறையினர் நேற்று காலை முதல் இன்று காலை வரை சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர் தற்போது வாடகை வீட்டில் தங்கி வரும் நிலையில் இந்த சோதனை இன்று வரை முடிவுக்கு வராமல் தொடர்வது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து நேற்று மாலை 7மணியில் இருந்து திருச்சி எடமலைப்பட்டி புதூர் கிராப்பட்டி சக்தி விநாயகர் கோவில் தெருவில் உள்ள ஒப்பந்ததாரர் ஈஸ்வரமூர்த்தி என்பவர் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மத்திய தொழில் பாதுகாப்பு படையுடன் 7க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

திமுக அரசு பொறுப்பேற்ற முதல் பொதுப்பணித்துறை,  நெடுஞ்சாலைத் துறை, மாநகராட்சி உள்ளிட்ட அரசு பணிகளை இவர் தான் எல்லா ஒப்பந்ததாரர்களுக்கும் பிரித்து கொடுப்பார். எனவே தான் தேர்தல் பணம் பட்டுவாடா செய்வதற்காக பணம் இவரது வீட்டில் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனையின் பின்னணியில் யார் இருப்பது என்பது குறித்து நாம் விசாரித்த போது திமுகவை சேர்ந்த பிரமுகர் ஒருவர் மூலமாகத்தான்  இந்த தகவல் வருமான வரித்துறைக்கு சென்றதாக கூறப்படுகிறது.

அதே போல் தான் இன்று அறந்தாங்கியை சேர்ந்த நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் ஸ்ரீ இன்ஃப்ரா டெக் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவன உரிமையாளர்கள் ரவி மற்றும் தியாகராஜனின் திருச்சி வீடு அலுவலகம் தர்மபுரி பெரம்பலூர் ஆகிய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று அமைச்சர் நேருவுக்கு நெருங்கிய வட்டாரத்தில் இருக்கும் முக்கிய ஒப்பந்ததாரர்கள்  வீட்டில் நேற்று சோதனை நடைபெற்ற நிலையில், தற்போது அமைச்சர் எவ.வேலுவுக்கு நெருக்கமாக உள்ள முக்கிய ஒப்பந்ததாரரின் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை செய்வது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

மாவட்ட அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி; சாம்பியன் பட்டத்தை வென்ற திருச்சி அணி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Trichy won the champion title for District Level Shooting Competition

திருச்சியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் திருச்சி ரைபிள் கிளப் அணி சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளது. 

திருச்சி மாநகர காவல்துறை கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் மாநகர ரைபில் கிளப் 31.12.2021 ஆம் தேதி தொடங்கப்பட்டது. மாவட்ட, தேசிய மற்றும் சர்வதேச அளவில் துப்பாக்கி சுடும் போட்டிக்கு கலந்து கொள்ள பயிற்சி பெறும் வகையில் செயல்பட்டு வரும் இந்த கிளப் திருச்சி மாநகர காவல் ஆணையர் ந. காமினி தலைமையில் செயல்பட்டு வருகிறது. இந்திய ரைபிள் சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்த ரைபிள் கிளப்பில் மாவட்ட அளவிலான ஏர் பிஸ்டல் மற்றும் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிகள் ஏப்ரல் 27ல் தொடங்கி 28 வரை இருநாள்கள் நடைபெற்றன.

இதில் திருச்சி ரைபிள் கிளப்பில் துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்ற சுமார் 340 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் 10 மீட்டர் சுடுதளத்தில் துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் சிறுவர்கள், இளையோர் மற்றும் முதியவர்கள் என ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவு என தரம் பிரிக்கப்பட்டு சப்யூத், யூத், ஜீனியர், சீனியர், மாஸ்டர் மற்றும் சீனியர் மாஸ்டர் என தனித்தனியாக பல்வேறு பிரிவுகளில் நடைபெற்றது. இந்த போட்டியில் பெரும்பாலான போட்டிகளில் வெற்றி அதிக புள்ளிகளைப் பெற்று திருச்சி ரைபிள் கிளப் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டிச்சென்றது. 

போட்டியில் பங்கேற்ற மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜி. கார்த்திகேயன் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இரு வெள்ளி பதக்கங்களை வென்றார். மேலும் ஏர் பிஸ்டல் மற்றும் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை(28-04-24) பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சங்க செயலாளர் மற்றும் திருச்சி ரைபிள் கிளப் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் வெற்றிபெற்ற 76 பேருக்கு தங்க பதக்கமும், 69 பேருக்கு வெள்ளி, 50 நபர்களுக்கு வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 195 பதக்கங்கள் வழங்கப்பட்டது. மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜி கார்த்திகேயன் அவற்றை வழங்கி பாராட்டினார்.

Next Story

ரயில் பயணியிடம் கைவரிசை காட்டிய நபர்; போலீசார் அதிரடி நடவடிக்கை

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Police action on A person who shows his hand to a train passenger

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் பயணியிடம் சங்கிலியைப் பறித்த நபரை, ரயில்வே போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

திருச்சியில் இருந்து நாகூர் செல்லும் விரைவு ரயில் ஏப்ரல் 26 ஆம் தேதி திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் 5 ஆவது நடைமேடையில் புறப்படத் தயாராக நின்றிருந்தது. அதில் செல்லவிருந்த பயணிகள் ரயிலில் அமர்ந்திருந்தனர். அப்போது ஜன்னலோரத்தில் நின்றிருந்த மர்ம நபர் ஒருவர், ரயிலில் அமர்ந்திருந்த நெல்லையைச் சேர்ந்த க. வெங்கடேஷ் என்ற பயணியின் கழுத்தில் கிடந்த 1 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடிவிட்டார். 

இந்த சம்பவம் தொடர்பாக வெங்கடேஷ் போலீசாரிடம் புகார் அளித்தார். அவர் அளித்த அந்த புகாரின் பேரில், திருச்சி ரயில்வே போலீஸ் ஆய்வாளர் மோகனசுந்தரி, உதவி ஆய்வாளர்கள் சுரேஷ்குமார், திருமலைராஜா மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (28-04-24) காலை திருச்சி ரயில் நிலையத்தில் சந்தேகத்துக்கிடமான வகையில் சுற்றித்திரிந்த நபரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் அந்த நபர் கடலூர் மாவட்டம் அகரம், தங்காளிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ர. கோவிந்தராஜ் (26) என்பதும், அவர்தான் வெங்கடேஷின் சங்கிலியை பறித்தது மற்றும் விருத்தாசலம் ரயில் நிலையத்திலும் இதேபோல ஒரு திருட்டு சம்பவத்தில் அவருக்கு தொடர்பிருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீஸார் அவரைக் கைது செய்து திருச்சி மாவட்ட 4 ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.