Skip to main content

ரயில்வேயில் ஒரு லட்சம் இளைஞர்களின் வாய்ப்பை பறிப்பதா?  அன்புமணி ராமதாஸ் கண்டனம்

Published on 09/10/2018 | Edited on 09/10/2018
an

 

பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  ’’இந்தியத் தொடர்வண்டித்துறையின் பல்வேறு பிரிவுகளில் ஓய்வு பெற்ற ஒரு லட்சம் ஊழியர்களுக்கு மீண்டும் வேலை வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் படித்து முடித்து விட்டு வேலைக்காக காத்திருக்கும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களின் வேலைவாய்ப்புகள் அப்பட்டமாக பறிக்கப்பட்டுள்ளன.

 

உலகில் மிக அதிக அளவில் வேலைவாய்ப்பை வழங்கும் பொதுத்துறை நிறுவனம் இந்திய ரயில்வே துறை தான். இந்திய ரயில்வேத்துறையில் 14 லட்சத்துக்கும் கூடுதலான பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இது பஹ்ரைன், மாலத்தீவு, பூடான், மொரிஷியஸ் உள்ளிட்ட 83 நாடுகளின் மக்கள் தொகையை விட அதிகம் ஆகும். படித்த இளைஞர்களுக்கு பொதுத்துறையில் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை பொய்க்காமல் இருப்பதற்கு காரணம் இந்திய ரயில்வே தான். ஆனால், இந்த நம்பிக்கையை பறிக்கும் வகையில் ஒரு லட்சம் பணிகளில் ஓய்வு பெற்றோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

இந்திய ரயில்வேயின் பல்வேறு பிரிவுகளில் 2.30 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்பும் பணியை தொடர்வண்டித்துறை நீண்டகாலமாக தாமதித்து வந்தது. கடந்த சில மாதங்களில் மட்டும் இந்த பணியிடங்களில் ஒரு லட்சம் ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு கடைசியாக வழங்கப்பட்ட ஊதியத்தில் 50% ஊதியமாக வழங்கப்படுகிறது. இதுதவிர அவர்களுக்கு முழுமையான ஓய்வூதியம் வழங்கப்படுகிறது என்று ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.

 

காலியாக உள்ள 2.30 லட்சம் காலியிடங்களையும் தகுதியான இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களைக் கொண்டு நிரப்பியிருந்தால் அதே எண்ணிக்கையிலான குடும்பங்களுக்கு வாழ்வாதாரம் கிடைத்திருக்கும். அதற்கு மாறாக ஒரு லட்சம் பணியிடங்களில் ஓய்வு பெற்றவர்களை பணியமர்த்தியதால் ஒரு லட்சம் இளைஞர்களின் வேலைவாய்ப்பு பறிக்கப்பட்டிருக்கிறது. மீதமுள்ள 1.30 லட்சம் பணியிடங்களையும்  ஓய்வு பெற்றவர்களைக் கொண்டே நிரப்ப ரயில்வேத் துறை முடிவு செய்துள்ளது. தெற்கு தொடர்வண்டித் துறையில் ஏற்கனவே 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களில் ஓய்வு பெற்றவர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவை தவிர மேலும் 1279 பணியிடங்களை நிரப்ப அண்மையில் அறிவிக்கை வெளியிடப் பட்டுள்ளது. இதனால் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்களின் வேலைவாய்ப்புகளும் பறிக்கப்பட்டுள்ளன.

 

ரயில்வேத் துறையில் காலியாக உள்ள இடங்களுக்கு புதிய பணியாளர்களை தேர்வு செய்ய  தகுதித் தேர்வு, மருத்துவ ஆய்வு உள்ளிட்ட நடைமுறைகளை பின்பற்ற வேண்டியிருப்பதாகவும், இவற்றுக்கு அதிக காலம் ஆவதால் தற்காலிகமாக ஓய்வு பெற்றவர்கள் பணியமர்த்தப்படுவதாகவும் ரயில்வேத் துறை சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இந்த விளக்கம் ஏற்கத்தக்கதல்ல. அனைத்துத் துறைகளும் கணினி மயமாக்கப்பட்டு விட்ட நிலையில், எந்தெந்த மாதத்தில் எந்தெந்த துறைகளில் எவ்வளவு பேர் ஓய்வு பெறப் போகிறார்கள் என்பதை எப்போது வேண்டுமானாலும் தெரிந்து கொள்ள முடியும்.  இந்த தகவல்களின் அடிப்படையில் 3 மாதங்கள் அல்லது 6 மாதங்களுக்கு ஒருமுறை ஆள்தேர்வை நடத்தினால் காலியிடங்களை உடனுக்குடன் நிரப்ப முடியும். அதை செய்யாமல், புதிய பணியாளர்களை நியமிப்பதில் ஏற்படும் தாமதம் காரணமாகவே ஓய்வுபெற்றவர்கள் நியமிக்கப்படுவதாக கூறுவது தவறு.

 

அதுமட்டுமின்றி, காலியிடங்களில் பணியமர்த்தப்பட்ட ஓய்வு பெற்றவர்களில் பலர் ஓராண்டுக்கும் மேலாக பணியில் நீடிக்கின்றனர். அவர்கள் 65 வயது வரை பணியில் நீடிக்கலாம் என்பதால் 5 ஆண்டுகள்   வரை பணியில் நீடிக்க வாய்ப்புள்ளது. எனவே, திட்டமிட்டே ஓய்வு பெற்றவர்கள் பணியமர்த்தப் படுகிறார்களோ என்ற ஐயம் எழுகிறது. இது ஒருபுறமிருக்க 60 வயதைக் கடந்தவர்களுக்கு பார்வைக் குறைபாடு உள்ளிட்ட பல பிரச்சினைகள் இருக்கும் என்பதால் தொடர்வண்டி இயக்கத்தின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமையும். பயணிகளின் பாதுகாப்பில் எந்த சமரசமும் செய்யக்கூடாது.

 

எனவே, ரயில்வேத் துறையில் காலியாக உள்ள 2.30 லட்சம் பணியிடங்களையும் அடுத்த 3 மாதங்களில் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களைக் கொண்டு நிரப்ப வேண்டும். எத்தனை பணியிடங்களை புதிய பணியாளர்களைக் கொண்டு நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்பது குறித்த வெள்ளை அறிக்கையையும் இந்திய தொடர்வண்டி வாரியம் வெளியிட வேண்டும் என வலியுறுத்துகிறேன். ’’

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தாதுக் கொள்ளையை தமிழக அரசு வேடிக்கைப் பார்ப்பது ஏன்?'-பாமக அன்புமணி கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'Why does the Tamil Nadu government make fun of mineral theft?'-pmk Anbumani asked


'கோவையிலிருந்து கேரளத்திற்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதை தமிழக அரசு வேடிக்கைப் பார்ப்பது ஏன்?'என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கோவை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய கூடலூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் இருந்து அண்டை மாநிலமாக கேரளத்திற்கு நூற்றுக்கணக்கான சரக்குந்துகளில் கனிமவளங்கள் கொள்ளையடித்துச் செல்லப்படுகின்றன. இதற்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தியும், கடத்தல்காரர்களை பிடித்துக் கொடுத்தும் அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க மறுப்பது கண்டிக்கத்தக்கது.

கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட கட்டாஞ்சி மலை அடிவாரத்தில் உள்ள செல்வபுரம் பகுதியில் கடந்த  26 ஆம் தேதி அதிகாலையில் இரு ஜே.சி.பி எந்திரங்கள் மூலம் கனிமவளங்கள் தோண்டி எடுக்கப்பட்டு 7 சரக்குந்துகள் மூலம் கேரளத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையறிந்த அப்பகுதி பொதுமக்களும், கட்டாஞ்சி மலை காணுயிர் பாதுகாப்பு சங்கத்தினரும் ஒன்று திரண்டு, கனிம வளங்களை கொள்ளை அடித்துச் சென்ற சரக்குந்துகளை சிறை பிடித்து காவல்துறை, வருவாய்த்துறை, வனத்துறை, கனிம வளத்துறை ஆகியவற்றின் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதனடிப்படையில் காவல்துறையினர் மட்டும் தான் விரைந்து வந்து கடத்தல் சரக்குந்துகளை கைப்பற்றிச் சென்றனர். பிற துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தை இதுவரை திரும்பிக் கூட பார்க்கவில்லை.

அண்மைக்காலங்களில் கூடலூர் பகுதி மணல் உள்ளிட்ட கனிமவளக் கொள்ளை நடப்பது இது முதல் முறையல்ல. தமிழ்நாடு முழுவதும் கடந்த 19 ஆம் தேதி மக்களவைத் தேர்தல்கள் நடைபெற்று கொண்டிருந்த போது கூடலூர் பகுதியிலிருந்து ஏராளமான சரக்குந்துகள் மூலம் கேரளத்திற்கு கனிம வளங்கள் கொள்ளையடித்துச் செல்லப்பட்டன. அதற்கும் முன்பும் பல ஆண்டுகளாக அப்பகுதியிலிருந்து கனிமவளங்கள் கொள்ளையடிக்கப்படுவது தொடர்கிறது. இதுதொடர்பாக எழுந்த புகாரின் அடிப்படையில் கடந்த ஆண்டு வருவாய் மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதிகளில் ஆய்வு நடத்தினர். அதன்பின் கடந்த சில மாதங்களாக ஓய்ந்திருந்த கனிமவளக் கொள்ளை மீண்டும் தீவிரமடைந்துள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையின் அங்கமான கூடலூர் நகராட்சி மலைதள பாதுகாப்பு அதிகாரம் கொண்ட பகுதியாகும். அங்கு கனிமவளக் கொள்ளை நடப்பது தொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அப்பகுதியில் கனிமவளங்களை தோண்டி எடுக்கவும், கடத்திச் செல்லவும் தடை விதித்தது. அதனடிப்படையில் கோவை மாவட்ட ஆட்சியர்களும் பல்வேறு கட்டங்களில் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனிமவளக்கொள்ளை நடத்த தடை விதித்தனர். ஆனாலும், அவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் அதிகாரிகளின் துணையுடன் கனிமக்கொள்ளை தொடர்கிறது.

கூடலூர் பகுதியில் கனிமவளக் கொள்ளை நடைபெறும் பகுதிகள் அனைத்தும் யானைகளின் வழித் தடமாக திகழ்பவை ஆகும். இந்தப் பகுதியில் கனிமவளக் கொள்ளை நடைபெறாமல் தடுக்க வேண்டியது வருவாய்த்துறை, வனத்துறை, கனிமவளத்துறை ஆகியவற்றின் கூட்டுப் பொறுப்பு ஆகும். ஆனால், இவற்றில் எந்தத் துறையும் கனிமவளக் கொள்ளையை கட்டுப்படுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை. அதற்கு முதன்மையான காரணம் இந்தத் துறைகளின் உயரதிகாரிகள் ஊழலில் திளைப்பது தான்.

கூடலூர் பகுதியில் மட்டுமின்றி ஒட்டுமொத்த கோவை மாவட்டம் முழுவதும் கனிமவளக் கொள்ளை தடையின்றி நடைபெறுகிறது. பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, மதுக்கரை ஆகிய வட்டங்களிலும், அருகிலுள்ள திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, மடத்துக்குளம் வட்டங்களிலும் சட்டவிரோத குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கிருந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரளத்திற்கும் தினமும் ஆயிரக்கணக்கான சரக்குந்துகளில் கல், மண், மணல், கிராவல் என அனைத்துக் கனிம வளங்களும், கடத்தப்படுகின்றன. கனிமவளக் கொள்ளையை கண்டுகொள்ளாமல் இருப்பதற்காக மட்டும் கொங்கு மண்டலத்தில் பல்வேறு துறை அதிகாரிகளுக்கும், அவர்களுக்கு மேல் அதிகார பதவிகளில் இருப்பவர்களுக்கும் ஆண்டுக்கு ரூ.1000 கோடி வரை கையூட்டு வழங்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இதே நிலைதான் காணப்படுகிறது. திமுக ஆட்சி நடந்தாலும், அதிமுக ஆட்சி நடந்தாலும் கனிமவளக் கொள்ளை மட்டும் தடைபடுவதே இல்லை. இரு கட்சிகளின் ஆட்சிகளிலும் ஒரே குழுவினர் தான் கனிமக் கொள்ளையை முன்னின்று நடத்துகின்றனர். கனிமவளங்கள் அளவில்லாமல் கொள்ளையடிக்கப்பட்டால் அது சுற்றுச் சூழலுக்கு ஈடு செய்ய முடியாத பாதிப்புகளை ஏற்படுத்தும். கோவை, திருப்பூர் மாவட்டம் உள்பட தமிழ்நாடு முழுவதும் கனிமவளக் கொள்ளையை தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால், தமிழ்நாடு முழுவதும் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை பா.ம.க. முன்னெடுக்கும் என எச்சரிக்கிறேன்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

“புதிய பேருந்துகளை அரசு வாங்க வேண்டும்” - அன்புமணி ராமதாஸ்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anbumani Ramadoss says Government should buy new buses

புதிய அரசு பேருந்துகளையும், தமிழக அரசு வாங்க வேண்டும் என்றும், பழைய பேருந்துகளைப் பராமரிக்க, உதிரி பாகங்களை வாங்க அரசு போதிய நிதியை ஒதுக்க வேண்டும் என்றும் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி திருவரங்கத்தில் இருந்து கே.கே. நகருக்கு சென்று கொண்டிருந்த அரசு நகரப் பேருந்து, வளைவு ஒன்றில் திரும்பும் போது, நடத்துனர் அமர்ந்திருந்த கடைசியில் இருந்து மூன்றாவது இருக்கை கழன்று வெளியில் விழுந்துள்ளது. இருக்கையுடன் நடத்துனரும் வெளியில் தூக்கி வீசப் பட்டுள்ளார். நல்வாய்ப்பாக பேருந்துக்கு பின்னால் வேறு வாகனங்கள் வரவில்லை என்பதால், நடத்துனர் லேசான காயங்களுடன் உயிர்த் தப்பியுள்ளார். காயமடைந்த ஓட்டுநர் விரைவில் நலம் பெற எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை அமைந்தகரை பகுதியில் கடந்த பிப்ரவரி  6-ஆம்  தேதி  மாநகரப் பேருந்தின் தளம் உடைந்து  ஏற்பட்ட ஓட்டை வழியாக பெண் பயணி ஒருவர் சாலையில் விழுந்து காயமடைந்தார். அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகும் முன்பாகவே திருச்சியில் பேருந்தின் இருக்கை கழன்று நடத்துநர் தூக்கி வீசப்பட்டுள்ளார். பேருந்தின் டயர் தனியாக கழன்று ஓடுவது, பேருந்தின் மேற்கூறை தனியாக கழன்று காற்றில் பறப்பது போன்ற நிகழ்வுகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தினமும் 2 கோடி மக்கள் பயணிக்கும் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை திமுக அரசு எவ்வளவு மோசமாக பராமரிக்கிறது என்பதற்கு இதை விட மோசமான எடுத்துக் காட்டு இருக்க முடியாது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 20,926 பேருந்துகளில் 1500 பேருந்துகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன என்பதைத்  தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரே ஒப்புக் கொண்டிருக்கிறார். 15 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகளை இயக்குவதே சட்ட விரோதம் ஆகும். இதைத் தவிர 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் 12 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில்தான் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.

புதிய பேருந்துகள் வாங்கப்படாததால், காலாவதியான பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுவதும், அவற்றைப் பராமரிப்பதற்கும், உதிரி பாகங்கள் வாங்குவதற்கும் கூட போதிய நிதி ஒதுக்கப்படாதது தான் இத்தகைய அவல நிலை ஏற்படுவதற்கு காரணம் ஆகும். இத்தகைய அவல நிலைக்கு தி.மு.க தலைமையிலான திராவிட மாடல் அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான மகிழுந்துகள் அவர்கள் விரும்பும் நேரத்தில் மாற்றப்படுகிறது. முதலமைச்சரின் வாகன அணிவகுப்பில் வரும் மகிழுந்துகள் கருப்பு வண்ணத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக, ஏற்கெனவே வாங்கப்பட்டு சில மாதங்கள் மட்டுமே ஆன மகிழுந்துகள் ஓரங்கட்டப்பட்டு, கோடிக்கணக்கில் செலவு செய்து 6 புதிய மகிழுந்துகள் வாங்கப்படுகின்றன. ஆனால், பொதுமக்கள் பணம் கொடுத்து பயணம் செய்யும் பேருந்துகள் மட்டும் 15 ஆண்டுகளைக் கடந்து இயக்கப்படுகின்றன. இது என்ன கொடுமை?

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு அவற்றுக்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கி இயக்கப்பட வேண்டும். பழைய பேருந்துகளைப் பராமரிக்கவும், உதிரி பாகங்கள் வாங்கவும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.