“டிவியில் பார்த்து தெரிந்து கொண்டேன் என எடப்பாடி பழனிசாமி சொன்னது தவறு இல்லை..” - அண்ணாமலை 

publive-image

தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடந்த 2018-ம் ஆண்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதே ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதியன்று ஸ்டெர்லைட்டுக்கு எதிரான 100-வது நாள் போராட்டத்தில் மிகப்பெரிய அளவில் வன்முறை வெடித்தது. அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அப்பாவி பொதுமக்கள் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு கட்சித் தலைவர்களும், பிரபலங்களும் கடும் கண்டனத்தை தெரிவித்து வந்தனர்.

இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் நிருபர் ஒருவர், அன்றைய முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமியிடம் கேட்க, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை டிவியில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன் என பதிலளித்திருந்தார். இது பெரும் பேசு பொருளாகவும், சர்ச்சையாகவும் மாறியது.

இதனையடுத்து, துப்பாக்கிச்சூடு நடத்தப்படுவதற்கு என்ன காரணம் யாருடைய உத்தரவின் பேரில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் விசாரணை ஆணையம் கடந்த அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட அனைவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. கடந்த 4 ஆண்டு கால விசாரணையில் 3,000 பக்கங்கள் கொண்ட அறிக்கை தமிழக சட்டப்பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டு 17 போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க ஆணையம் பரிந்துரை செய்திருக்கிறது.

இதனைத் தொடர்ந்து, அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையின் அடிப்படையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக நான்கு காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக தமிழ்நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலை, “தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடந்ததை டிவியில் பார்த்து தெரிந்து கொண்டேன் என எடப்பாடி பழனிசாமி சொன்னதை எப்படி தவறு என்று சொல்ல முடியும். அதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது. ஐந்து மணி நேரம் நடந்த போராட்டம் குறித்து பல தகவல்களை தலைமைச் செயலாளரும், டி.ஜி.பி.யும் முதல்வருக்கு கொடுத்திருக்கலாம். ஆனால், துப்பாக்கிச்சூடு நடந்த அந்த தருணம், அவரின் அலுவலக டி.வி. ஆன் செய்யப்பட்டு இருந்திருக்கலாம். அதில் அவர் முதலில் அதனை பார்த்திருக்கலாம். இதை வைத்து எடப்பாடி பொய் சொன்னார் என நீதியரசர் அருணா ஜெகதீசன் ஆணையம் கூறியிருப்பதை ஏற்க முடியாது. முதல்வர் எடுக்கும் முடிவை கேள்வி கேட்க ஆணையத்திற்கு என்ன உரிமை இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

Annamalai eps Tuticorin
இதையும் படியுங்கள்
Subscribe