Skip to main content

’’காவிரி பிரச்சனையில் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியிருப்பது ஏற்கத்தக்கதல்ல’’ - திருமாவளவன்

Published on 14/05/2018 | Edited on 14/05/2018
thiru1

 

காவிரி வரைவுத் திட்டத்தை விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும் என தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

 

இது குறித்த அவரது அறிக்கை:’’உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசின் சார்பில் வரைவுத் திட்டம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த திட்டத்தின் நகலை தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. அதில் உள்ள விவரங்களை விவாதித்துத்  தமிழக அரசின் சார்பில் எதிர்வரும் 16ஆம் தேதி பதில் மனு தாக்கல் செய்ய வேண்டுமென்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. காவிரி பிரச்சனை  இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்த பிரச்சனையில் தமிழகத்தின் கருத்தை இறுதி செய்ய உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைத் தமிழக அரசு கூட்ட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

 

மத்திய அரசு முன்வைத்துள்ள வரைவுத் திட்டத்தில் கூறப்பட்டுள்ள அமைப்பானது, காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதி உத்தரவில் முன்வைத்த காவிரி மேலாண்மை வாரியத்தை ஒத்த அமைப்பு அல்ல எனத் தெரிகிறது. தமிழகத்துக்குத் தண்ணீர் வர வேண்டுமென்றால் தன்னாட்சி அதிகாரம் உள்ள அமைப்பு ஒன்றின் கீழ் அணைகள் ஒப்படைக்கப்பட வேண்டும். ஆனால், மத்திய அரசு முன்வைத்துள்ள அமைப்பு ஒரு மேற்பார்வை அமைப்பு என்று மட்டுமே தெரிகிறது. அத்தகைய அமைப்பால் தமிழகத்துக்கு உரிமை உள்ள நீரை பெற்றுத்தர முடியாது. எனவே, மத்திய அரசு தமிழகத்துக்குத் துரோகம் இழைப்பதாகவே இதைக் கருதத் தோன்றுகிறது.

 

‘மத்திய அரசால் அமைக்கப்படும் அமைப்பின் பெயர் எதுவாக வேண்டுமென்றாலும் இருக்கலாம், நமக்கு தண்ணீர் கிடைத்தால் போதும்’ என்று தமிழக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியிருப்பது ஏற்கத்தக்கதல்ல. சட்டத்தின்படி ஒரு அமைச்சரின் பெயர் அதன் அதிகாரத்தோடுத் தொடர்புக் கொண்டதாகும். மேற்பார்வைக் குழு என்று பெயர் வைத்துவிட்டு அது தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பாகச்  செயல்படும் என்று எதிர்பார்க்க முடியாது. எனவே, நடுவர்மன்றம் கூறியதை போல காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்றுக் குழு என்ற பெயர்களிலேயே அந்த அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும்.

 

காவிரி பிரச்சனையில் மத்திய அரசின் துரோகத்துக்குத் தமிழக அரசும் துணைப்போகிறது என்ற குற்றச்சாட்டைப் பொய்யாக்கும் வகையில், தமிழக அரசு எவ்விதத் தயக்கமுமின்றி நாளையே அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக்  கூட்ட முன்வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.’’

சார்ந்த செய்திகள்

Next Story

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் திருமாவளவன் உள்ளிட்ட 14 பேர் போட்டி!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
14 contests including Thirumavalavan in Chidambaram Parliamentary Constituency

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்டமாக பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான புதன்கிழமை சிதம்பரம் தொகுதியில் 27 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் அரியலூர் மாவட்ட ஆட்சியருமான ஆணிமேரி ஸ்வர்னா தலைமையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் திமுக கூட்டணி தலைமையில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், அதிமுக வேட்பாளர் சந்திரகாசன், பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜான்சிராணி, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் நீலமேகம், நாடாளும் மக்கள் கட்சியின் வேட்பாளர் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இதில் சுயேச்சையாக போட்டியிட்ட முன்னாள் அதிமுக எம்பி சந்திரகாசி மனு நிராகரிக்கப்பட்டது.  மேலும் மாற்று வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட பிரதான கட்சி வேட்பாளராக 6 பேரும் 8  சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். இதில் இறுதி வேட்பாளர் பட்டியல் 30-ந்தேதி வெளியிடப்படுகிறது. இன்னும் வேட்பாளர்கள் குறையும் என்று கூறப்படுகிறது.

Next Story

“தேர்தல் ஆணையமே ஒருதலைபட்சமாக செயல்படுவது அதிர்ச்சியளிக்கிறது” - திருமாவளவன்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Thirumavalavan said that the Election Commission itself is acting like a one-sided party

மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பாகத் தமிழ்நாட்டில் திமுக தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகின்றது. சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அரியலூரில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

முன்னதாக அரியலூர் பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா, பெரியார்,  அம்பேத்கர், காமராஜர் ஆகியோர் சிலைகளுக்கு விசிக தலைவர் தொல் திருமாவளவன், வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத் தேர்தல் அலுவலரை சந்தித்து வேட்புமனு தாக்கல் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தொல். திருமாவளவன், “திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக,  கூட்டணியின் வேட்பாளராக சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறோம். 30 ஆம் தேதி சின்னம் கொடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் கூறியிருக்கிறார். தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இயங்குவதாக தெரியவில்லை. பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு உடனுக்குடன் சின்னங்களை ஒதுக்கி உள்ளது.

எதிரணியில் இருப்பவர்களுக்கு இதுவரையில் சின்னத்தை ஒதுக்காமல், நிராகரித்து தேர்தல் ஆணையமே ஒருதலைபட்சமாக செயல்படுவது அதிர்ச்சி அளிக்கிறது. நேர்மையோடு இந்த தேர்தலை நடத்த வேண்டும் அப்பொழுதுதான் ஜனநாயகம் காப்பாற்றப்படும். ஆகவே தேர்தல் ஆணையம் ஒரு சார்பு இல்லாமல் தேசிய அளவில் நேர்மையோடு  தேர்தலை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பாரதிய ஜனதா கட்சி பூஜ்யம் என்று எங்கள் கூட்டணியின் தலைவர் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளார் ஆகவே தமிழ்நாட்டில் அவர்கள் என்ன சொன்னாலும் எடுபடாது. அவர்களின் முயற்சி வெற்றி பெறாது. தென்னிந்திய மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சிக்கு கடுமையான பின்னடைவு ஏற்பட்டு தோல்வியை சந்திக்கும்

நான் எப்போதும் மக்கள் பணி தான் செய்து கொண்டிருக்கிறேன். உறங்கும் நேரத்தை தவிர 20 மணி நேரமும் மக்களோடு மக்கள் பணியில் தான் உள்ளேன். தொகுதி மக்கள் அதனை நன்கு அறிவார்கள் மீண்டும் எனக்கு வாய்ப்பு அளிப்பார்கள். சொந்த தொகுதியின் வேட்பாளராகத்தான் மீண்டும் இந்த களத்தில் நிற்கிறேன். அனைத்து தரப்பு மக்களின் ஆதரவோடு மீண்டும் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 இடங்களிலும் திமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறும். அதில் சிதம்பரமும் ஒன்று” என்றார்.