Skip to main content

சமையல் பாத்திரங்களுடன் ஆட்சியர் அலுவலகத்தில் குடியேற முயற்சித்த இஸ்லாமியர்கள்! சிஏஏ சட்டத்திற்கு எதிராக போராட்டம்!

Published on 12/03/2020 | Edited on 12/03/2020

சேலத்தில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக தமிழக அரசு உடனடியாக தீர்மானம் நிறைவேற்றக்கோரி, சமையல் பாத்திரங்களுடன் ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் சமூகத்தினர் ஆட்சியர் அலுவலகத்தில் குடியேற முயற்சித்தனர். அவர்களை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய பாஜக அரசு, இரு மாதங்களுக்கு முன்பு குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்தது. இந்த புதிய சட்டம், முஸ்லிம் சிறுபான்மையினருக்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று கூறி, அவர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். அத்துடன் தேசிய குடியுரிமை பதிவேடு (என்சிஆர்), தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்பிஆர்) ஆகிய சட்டங்களையும் உடனடியாக திரும்பப் பெறக்கோரி, நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் மற்றும் முஸ்லிம் மக்கள் போராடி வருகின்றனர். டெல்லி ஷாகின் பாக் பகுதியில் தொடர்ந்து போராட்டம் வலுத்து வருகிறது.

 

Islamists trying to settle the Collector's office with cooking utensils! Against CAA Law!

 

சேலத்திலும் கோட்டை பகுதியில் கடந்த 23 நாள்களாக தொடர்ச்சியாக முஸ்லிம் பெண்கள் அறப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், தமிழக சட்டமன்ற நடப்புக் கூட்டத்தொடரிலேயே குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றக்கோரி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தை திடீரென்று முஸ்லிம்கள் அறிவித்தனர்.

அதன்படி, புதன்கிழமை (மார்ச் 11) காலையில் கோட்டை பகுதியில் இருந்து நூறுக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக வந்தனர். இதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேலம் மாநகர காவல்துறையினர் 200க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகம் முன்பு பாதுகாப்பு அரண்போல நின்று அவர்களை உள்ளே செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினர்.

முஸ்லிம் மக்களால் மேற்கொண்டு செல்ல முடியாமல் போனதால், அவர்கள் ஆட்சியர் அலுவலகம் எதிரில் இருக்கும் ரவுண்டா அருகில் சாலையில் அமர்ந்து, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகவும், பிரதமர், தமிழக முதல்வர் ஆகியோருக்கு எதிராகவும் முழக்கமிட்டனர்.

குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிரான முழக்கங்கள் அடங்கிய பதாகைகளை ஒரு பாடையில் கட்டி தூக்கி வந்தனர். சிலர், ஆட்சியர் அலுவலகத்திற்குள் குடியேறுவதற்கு வசதியாக வீட்டில் இருந்து சமையல் பாத்திரங்களையும் கொண்டு வந்திருந்தனர்.


இது தொடர்பாக போராட்டக்காரர்களிடம் கேட்டபோது, ''குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று தமிழக சட்டமன்றத்தில் உடனடியாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் தொடரும்,'' என்றார்கள்.


முஸ்லிம் மக்களின் போராட்டத்தால் ஆட்சியர் அலுவலக சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதனால் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. சம்பவத்தின்போது ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் சேலம் அரசு மருத்துவமனைக்கு வந்தது. அந்த வாகனத்திற்கு போராட்டக்காரர்கள் வழிவிட்டனர். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. மேலும், போராட்டத்தில் அனுமதியின்றி ஈடுபட்டதாக சுமார் ஆயிரம் பேரை காவல்துறையினர் கைது செய்தனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Two people who went to vote fainted and passed way

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 24.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கச் சென்ற சின்னபொண்ணு (77) என்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதேபோன்று, சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி(65) தனது மனைவியுடன் வாக்களிக்கச் சென்றபோது மயங்கி விழுந்து பலியானார். சேலம் மாநகரில் நடந்த இந்த துயர் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.