திருமுதுகுன்றம் என்று அழைக்கப்படும் விருத்தாச்சலம் பழமலை நாதர் ஆலயம் 5 என்ற எண்ணுடன் தொடர்புடையது. காரணம், இக்கோவில் ஐந்து கோபுரங்கள், ஐந்து நந்திகள், ஐந்து கொடிமரம், ஐந்து சுற்று பிரகாரம் என அனைத்தும் ஐந்தாக இருக்கிறது. இவை பஞ்சபூதங்களை உள்ளடக்கியதாக கருதப்படுகிறது.

Advertisment

இக்கோவிலில் ஆழத்து விநாயகர், பழமலைநாதர், விருத்தகிரீஸ்வரர், பாலாம்பிகை, விருத்தாம்பிகை, ஏனைய தெய்வங்கள் கொண்டுள்ள பிரசித்திபெற்ற இந்த ஆலய கும்பாபிஷேகம் எனும் குடமுழுக்கு விழா 6ஆம் தேதியான நாளை காலை 7.30 மணி அளவில் நடைபெறவுள்ளது. இந்த குடுமுழுக்குவுக்கான திருப்பணி நடைபெறுவதற்காக விருத்தாச்சலம் ஜெயின் ஜுவல்லரி உரிமையாளர் அகர்சந்த் தலைமையில், திருப்பணி குழு அமைக்கப்பட்டுகோயில் புனரமைப்பு பணிகள் செய்யப்பட்டன. அதேபோல், பக்தர்கள்பலரும்500 ரூபாய் முதல் லட்ச ரூபாய்க்குமேல் திருப்பணிக்காக நன்கொடை வழங்கியுள்ளனர்.

கடந்த 1ஆம் தேதி முதல் இக்கோவிலின் கும்பாபிஷேக விழா நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, ஆலயத்தின் அருகே செல்லும், புண்ணிய நதியான மணிமுத்தா நதியிலிருந்து கும்பாபிஷேக நீர், ஆகம விதிப்படி ஊர்வலமாக யாக சாலைக்கு கொண்டு வரப்பட்டது. 3ஆம் தேதி முக்கிய நிகழ்ச்சியாக தருமபுரம் 27வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக பரமாச்சாரிய ஆசியுடன் முதல் யாகசாலை பூஜை துவங்கியது. அதிலிருந்து தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்தன. அன்று மாலை 6 மணி அளவில் சிவாச்சாரியார்கள் வாசவி மடத்திலிருந்து விசேஷ பூஜைகள் முடித்து ஊர்வலமாக யாகசாலைக்கு வரும் நிகழ்வு நடைபெற்றது.

Advertisment

இந்த நிகழ்வின்போது திருப்பணிக் கமிட்டி தலைவர் அகர்சந்த் மற்றும் நிர்வாகிகள், அமைச்சர் சி.வி. கணேசன், எம்.எல்.ஏ. ராதாகிருஷ்ணன், செயல் அலுவலர் முத்துராஜா, சிறப்பு கமிட்டி தலைவர்களுள் ஒருவரான நக்கீரன் ஆசிரியர் மற்றும் நகரின் முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள், சிவனடியார்கள் உட்பட ஏராளமானவர்கள் நான்காம் கால யாக பூஜையில் பங்கேற்றனர். மேலும், நக்கீரன் ஆசிரியர் பழமலை நாதர் கோயில் திருப்பணிக்காக 50 ஆயிரம் ரூபாயை நன்கொடையாக வழங்கினார்.

இந்தநிலையில், பழமலைநாதர் ஆலய கும்பாபிஷேகத்தில் மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக ஒரு நிகழ்வு நடைபெற்றது. ஆலய கும்பாபிஷேக திருப்பணியில் தங்களையும் இணைத்துக் கொண்டார்கள் விருதை நகர இஸ்லாமிய பெருமக்கள் தங்களின் ஒருமித்த பங்களிப்பாக கோயில் திருப்பணி செலவினங்களுக்காக ஒரு லட்சத்தி முப்பதாயிரம் ரூபாயை கும்பாபிஷேக கமிட்டி தலைவர் அகர்சந்திடம் வழங்கினார்கள். அந்த நிகழ்வில் கோல்டன் கேட் முகமது, ஜெயம் ராஜா, வானவில் அன்சார் அலி, முன்னாள் அதிமுக நகர செயலாளர் சோழன் சம்சுதீன் உட்பட முக்கிய இஸ்லாமிய பெரியவர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.