Skip to main content

“மாட்டுக்கறி சாப்பிடுவியா நீ..” - இஸ்லாமிய மாணவியை டார்ச்சர் செய்த ஆசிரியர்கள்

Published on 22/11/2023 | Edited on 22/11/2023

 

islam student torchered by teacher for beef in covai

 

கோவை மாவட்டம் துடியலூர் பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் இஸ்லாமியச் சமூகத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர்  ஏழாம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் நேற்று கோவை முதன்மை கல்வி அலுவலகத்தில் தனது பெற்றோருடன் வந்து பள்ளி ஆசிரியை அபிநயா மீதும், பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி மீதும் புகார் மனு ஒன்றை அளித்தார்.

 

அவர் அளித்த அந்த மனுவில், ‘பள்ளி ஆசிரியை அபிநயா, அந்த மாணவியிடம் கடுமையாக நடந்து கொண்டிருக்கிறார். இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் பெற்றோர் முறையிட்டுள்ளார்கள். அப்போது, இது குறித்து அவரிடம் இருந்து முறையான பதில் வரவில்லை என்று கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, ஆசிரியை அபிநயா என்பவரும், ஆசிரியர் ராஜ்குமார் என்பவரும், தலைமை ஆசிரியரிடம் பெற்றோர் முறையிட்டது குறித்து மாணவியிடம் கேள்விகள் கேட்டு, கன்னத்தில் அறைந்து மாட்டுக்கறி சாப்பிடுவியா நீ, அப்ப உனக்கு திமிர் அதிகமாகத் தான் இருக்கும் எனக் கூறி சக மாணவிகள் மத்தியில் மாணவி அணிந்திருந்த புர்கா மூலம் அனைவரின் ஷூவை துடைக்க வைத்து துன்புறுத்தியுள்ளனர். ஆகையால், மாணவியின் படிப்புக்கு இந்த ஆசிரியர்களால் பாதிப்பு இருக்கும் என்ற அச்சம் இருப்பதாக கூறி’ தனது புகாரில் தெரிவித்துள்ளார். 

 

இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை கூறியதாவது, “இங்கு தொடர்ந்து எனது குழந்தையிடம் மாட்டுக்கறி சாப்பிடுவியா? அப்ப திமிர் பிடித்த மாதிரி தான் நடந்து கொள்வீர்கள் என தொடர்ந்து கேள்விகள் எழுப்பி ஆசிரியர்கள் டார்ச்சர் செய்திருக்கின்றனர். இது சம்பந்தமாக பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்த போது, அவரிடம் இருந்து சரியான பதில் வரவில்லை. இருப்பினும், மீண்டும் இரண்டாவது முறையாக தலைமை ஆசிரியரிடம் அணுகிய போதும் கூட அப்பொழுதும் சரியான பதில் இல்லை. அதன் பின், காவல்துறையினரிடம் இது குறித்து புகார் அளித்த போது எங்களை சமாதானப்படுத்தி, இது போல் மீண்டும் நடக்காது என்றும் மீண்டும் குழந்தையைப் பள்ளிக்கு அனுப்புமாறும் கூறினர்.

 

அதன் பேரில், மீண்டும் குழந்தையை பள்ளிக்கு அனுப்பிய போதும் அதே மாதிரியான டார்ச்சர்களை அந்த ஆசிரியர்கள் செய்திருக்கின்றனர். இந்த நிலையில், தான் இந்த விவகாரத்தில் நியாயம் வேண்டும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு வந்து புகார் அளித்திருக்கிறோம்” என்று கூறினார். அதனைத் தொடர்ந்து,  பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

ஹிந்து மாணவிகளுடன் பேசிய இஸ்லாமிய மாணவருக்கு நேர்ந்த கொடூரம்!

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Incident happened to the Muslim student who spoke with the Hindu girls

மகாராஷ்டிரா மாநிலம், புனே பகுதியில் சாவித்ரிபாய் புலே என்ற பிரபல பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தில், இந்தியாவில் மட்டுமல்லாது, வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்தப் பல்கலைக்கழகத்தில் படிக்கும், 19 வயது இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர், ஹிந்து மாணவிகளுடன் பேசியதாகவும், மதத்தின் பேரில் பிரச்சாரம் செய்ததாகவும் கூறி, அடையாளம் தெரியாத நபர்கள் சிலர், அந்த மாணவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்தச் சம்பவத்தால் பல்கலைக்கழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவர் தரப்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. பின்னர், போலீசார் விசாரணையில், ‘பாதிக்கப்பட்ட இஸ்லாமிய மாணவர் சாவித்ரிபாய் புலே பல்கலைக்கழகத்தில் திறன் மேம்பாட்டு பிரிவில் படித்து வருகிறார். அவர் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆண்கள் விடுதியில் சுமார் ஒன்பது மாதங்களாக தங்கியுள்ளார். இந்த நிலையில், அவர் ஏப்ரல் 7ஆம் தேதி மதியம் 2 மணியளவில், தனது நண்பர்கள் மற்றும் தோழிகளுடன் கேண்டீனில் மதிய உணவு சாப்பிட்டுள்ளார்.

அப்போது, 6 மாணவர்கள் அந்த கேண்டீனுக்கு மூன்று இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். அங்கு வந்தவர்கள், பாதிக்கப்பட்ட இஸ்லாமிய மாணவரிடம் ஆதார் அட்டை கேட்டு வாக்குவாதம் செய்தனர். அப்போது, அவர் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதை அறிந்ததும், மதம் தொடர்பாக தவறாகப் பேசி அவரைத் தாக்கியுள்ளனர்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.